மோதி, ஷி ஜின்-பிங் உச்சிமாநாடு: பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

பட மூலாதாரம், Getty Images
அடுத்த வாரம் சென்னைக்கு வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபரை வரவேற்று பேனர்களை வைக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்-பிங் இடையிலான உச்சிமாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது.
"பேனர் விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாய் இருக்க வேண்டும். பெரிய அளவில் பேனர்கள் வைக்க கூடாது" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பின்போது தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையின் போது பேசிய தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், "பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் எங்களிடம் மனு அளித்துள்ளது. விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களை தேர்வு செய்துள்ளோம்" என்று விளக்கியத்துடன் சாலையில் பேனர் வைக்க திட்டமிட்டுள்ள மாதிரி வரைபடமும் தாக்கல் செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, பேனர் வைப்பதில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயார் என்று தமிழக சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
அப்போது பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர், "பேனர் வைக்க அனுமதி வழங்க அதிகாரம் வழங்கப்பட்ட அதிகாரிகளே பேனர் வைக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்திற்கு வர முடியாது. பேனர் வைக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தை அரசே அணுகுவது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும்" என்று வாதாடினார்.
"சீன அதிபரை வரவேற்பதற்கு பேனர் வைக்க எங்களிடம் ஏன் அனுமதி கேட்கிறீர்கள்? வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பல அதிகாரிகள் டெல்லி வருகிறார்கள். அங்கெல்லாம் பேனர் வைக்கப்படுகிறதா என்ன?" என்று நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் பேனர் வைக்கும்போது விதிகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டுமென்றும் கூறி இந்த வழக்கை எம். சத்யநாராயணா, என். சேஷசாயி அடங்கிய அமர்வு முடித்து வைத்தது.
வழக்கின் பின்னணி

பட மூலாதாரம், Facebook
தமிழ்நாட்டில் ஃப்ளக்ஸ், பேனர்கள் வைக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பாக, சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் செல்லும்போது, சாலையின் நடுவில் கட்டப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தார்.
அந்த நிகழ்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் அனைத்தும் பேனர்கள் வைக்கக்கூடாது என தம் தொண்டர்களுக்கு கட்டளையிட்டன. பேனர்கள் வைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளும் அனுமதி தருவதையும் நிறுத்தின.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் பிராமணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பேனர்கள் வைக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படாதது குறித்துச் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த பிரமாணப் பத்திரத்தில், வரும் அக்டோபர் 11-12ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமரும் வெளிநாடு ஒன்றின் தலைவரும் இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு வரவிருக்கிறார்கள்; அந்தத் தருணத்தில் வெளியுறவுத் துறை அவர்களை வரவேற்று பேனர்கள் வைப்பது வழக்கமான நடவடிக்கை என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மேலும் இந்தத் தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தருவதால், தமிழக அரசின் சார்பிலும் அவர்களை வரவேற்று குறிப்பிட்ட இடங்களில் பேனர் வைக்க வேண்டும்; இந்த பேனர்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களில் ஏற்கனவே உள்ள விதிமுறைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு தொந்தரவில்லாத வகையில் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
வெளியுறவுத் துறை அமைச்சகத்தைப் பொறுத்தவரை சென்னையில் 14 இடங்களிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒன்பது இடங்களிலும் மாமல்லபுரத்தில் இரண்டு இடங்களிலும் பேனர்கள் வைக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசைப் பொறுத்தவரை சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 16 இடங்களில் வரவேற்பு பேனர்களை வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த பேனர்கள் அக்டோபர் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை ஐந்து நாட்களுக்கு வைக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே, வெளியுறவுத் துறை அமைச்சகமும் தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறையும் வரவேற்பு பேனர்களை வைக்க ஏதுவாக நீதிமன்றம் ஆணையிட வேண்டுமென அந்த பிரமாணப் பத்திரத்தில் கோரப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















