ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடை

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) வரை ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது.

தற்போது சிபிஐ காவலில் உள்ள ப. சிதம்பரம் உள்ள நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இருதரப்பின் வாதங்களும் திங்கள்கிழமை எடுத்து வைக்கப்படவுள்ளன.

இதனிடையே சிபிஐ வழக்கில் வழங்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ப. சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக,புதன்கிழமை இரவு ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வியாழக்கிழமை அனுமதியளித்தது.

இன்று நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

சிதம்பரம் சார்பாக கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

அப்போது ப.சிதம்பரம் சிபிஐ காவலில் எடுக்கப்பட்டதை இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சிதம்பரத்தின் மனு மீதான டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து நாங்கள் உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகினோம். ஆனால், உரிய நேரத்தில் உச்சநீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை என்று கபில் சிபல் தெரிவித்தார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முடிவையோ அல்லது எந்த ஒரு நீதிமன்றத்தையோ நாங்கள் குற்றம் சொல்ல முடியாது. சிதம்பரத்தை தான் சந்தித்ததாக, வெளிநாட்டு நிதி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தன்னிடம் கூறப்பட்டதாகவும் இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார். அதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. அவை எல்லாம், டிஜிட்டல் ஆவணங்களாகவும், இ மெயில் பரிமாற்றங்களாகவும் இருக்கின்றன என்று துஷார் மேத்தா வாதிட்டார்.

மேலும், இது தொடர்பாக இந்தியாவில் வெளிநாட்டிலும் ஏற்பட்டுள்ள பண பரிவர்த்தனைகள் குறித்து சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டும். சிதம்பரத்திற்கு வெளிநாட்டில் குறைந்தது 17 வங்கிக் கணக்குகளும், 20 சொத்துகளும் இருக்கிறதை நாங்கள் இதுவரை கண்டுபிடித்துள்ளோம். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அதற்கான எதிர்த்தரப்பு வாதங்களை சிதம்பரம் தரப்பு எடுத்து வைத்தது.

அவருக்கு இந்த வழக்கில் பல முறை நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் எப்போதும் ஒத்துழைக்காமல் இருந்ததில்லை. ஜனவரி 2019ல் இருந்து ஒருமுறை கூட அவருக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பப்படவில்லை என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை வரும் திங்கட்கிழமை வரை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்டனர்.

இதுதொடர்பான வழக்குகள் மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: