You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே?
- எழுதியவர், பென் டொபையாஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
62, 56 வயதுடைய ஆண்கள், நெருப்பு மூட்டி, நெகிழியால் கூடாரம் அமைத்து வெப்பத்தைத் தக்க வைத்து இருந்ததாக நம்பப்படுகிறது.
அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு தென் கொரியா தேசிய துக்கம் கடைபிடித்து வரும் காலகட்டத்தில் இது நடந்துள்ளது.
நாட்டின் கிழக்கில் உள்ள போங்வாவில் அக்டோபர் 26ஆம் தேதியன்று அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த துத்தநாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் கிட்டத்தட்ட 200 மீட்டர் (650 அடி) ஆழத்தில் சிக்கித் தவித்தனர்.
அவர்கள் இறுதியாக நவம்பர் 4ஆம் தேதி இரவு மீட்கப்பட்டனர். அவர்களுக்கான தேடுதல் தொடங்கி ஒன்பது நாட்களுக்கும் மேலானது. இருவரும் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பூரண குணமடைவார்கள் என்று மருத்துவர் கூறினார்.
அதிபர் யூன் சுக்-யோல் அவர்கள் மீட்கப்பட்டது "உண்மையில் அதிசயம் தான்" என்று கூறினார்.
"வாழ்க்கைக்கும் மரணத்திற்கு நடுவில் இருந்து பாதுகாப்பாக மீண்டு வந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி," என்று அவர் ஃபேஸ்புக்கில் எழுதினார்.
சுரங்கத் தொழிலாளர்கள் கூரையிலிருந்து விழுந்த தண்ணீரைக் குடித்தும் உடனடி காபி மிக்ஸ் பவுடரை உணவாகப் பயன்படுத்தியும் உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, சுரங்கத் தொழிலாளர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவசரக்கால பணியாளர்கள் வியாழக்கிழமையன்று நிலத்தடியில் துளையிட்டு சிறிய கேமராவை செருகியபோது மீட்பு நடவடிக்கை தொடங்கியது.
பல சுரங்கப் பாதைகள் சந்திக்கும் ஒரு விசாலமான அறையில், வெப்பநிலையைத் தக்க வைக்க தோளோடு தோளாக அவர்கள் அமர்ந்திருந்தது இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரின் உறவினர், அவர் மீட்கப்பட்டு வெளியே வந்தபோது அடையாளம் காண முடியவில்லை என்று விவரித்தார். ஏனென்றால், அவர் இருட்டில் கிட்டத்தட்ட பத்து நாட்களாக இருந்ததால், வெளியே வரும்போது கண்களை மறைத்திருந்தார்.
ஏஎஃப்பி செய்தி முகமை, அந்த உறவினர் அவர் மீட்கப்பட்டதை "கனவில் நடப்பதைப் போன்ற விசித்திரமான நிகழ்வு" என்று விவரித்தார் எனத் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்