யுக்ரேன் போர்: கண் முன்னாள் மகள், கணவர் கொல்லப்பட்டதைப் பார்த்த பெண் விவரிக்கும் துயரக் கதை

- எழுதியவர், அன்னா ஃபாஸ்டர்
- பதவி, பிபிசி நியூஸ், கீயவ், யுக்ரேன்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
விக்டோரியா கவலேன்கோ அந்த தருணத்தை நன்றாக நினைவில் வைத்திருக்கிறார்.
"அங்கு குண்டு வெடிப்பு நடந்தது. துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்டது. அது என் காதை அடைத்தது. காரின் பின்னால் உள்ள கண்ணாடி உடைந்தது. 'காரில் இருந்து வெளியில் செல்' என்று என் கணவர் கத்தினார்.
அந்த நாளில் நடந்த கொடூரம் கற்பனை செய்யமுடியாதது.
குறிப்பு: இந்த கட்டுரையில் வரும் காட்சி வர்ணணைகள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
யுக்ரேனில் போர் தொடங்கி ஒன்பது நாட்கள் ஆகி இருந்தது. போர் தீவிரமடைந்த நிலையில், விக்டோரியாவும் அவரது கணவர் பெட்ரோவும் , அந்நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள செரீனிஹிவை விட்டு வெளியேற முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க விரும்பினார்கள்.
12 வயதான வெரோனிகா, விக்டோரியாவின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகள். பெட்ரோ காரை நிறுத்தி, இறங்கி, அவர்களையும் வெளியேற்ற தொடங்கினார்.
சில நொடிகளில், கார் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
'என் மூத்த மகள் வெரோனிகா அழத்தொடங்கினாள். ஏனெனில், பறந்துக்கொண்டிருந்த கண்ணாடி துண்டு ஒன்று என் தலையை வெட்டி, ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது", என்கிறார் விக்டோரியா.
"வெரோனிகா கத்த தொடங்கினாள். அவளது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அதனால், அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்துக்கொண்டிருந்தேன். அவள் காரை விட்டு இறங்கி வெளியில் சென்றாள். நான் அவளை பின் தொடர்ந்தேன். நான் வெளியில் இறங்கியபோது, அவள் கீழே விழுவதைப் பார்த்தேன். நான் மீண்டும் பார்த்தப்போது, அவளது தலை இல்லை", என்றார்.
ரஷ்யப் படை ஷெல் குண்டு மூலம் அவரது காரை தாக்கியது.
"நான் அமைதியாக இருக்க முயற்சி செய்தேன். நான் இன்னொரு மகளை கையில் வைத்திருந்தேன். பாதுகாப்பான இடத்திற்கு அவளை நான் கொண்டு செல்ல வேண்டும்".

பட மூலாதாரம், KOVALENKO FAMILY
அவர் மீண்டும் பெட்ரோவை பார்க்கவில்லை. ஆனால், அவரது சத்தம் கேட்காமல் இருந்தது, அவரது கணவரும் இறந்துவிட்டார் என்று விக்டோரியாவுக்கு தோன்றியது.
தீப்பற்றி எரிந்துக்கொண்டிருந்த காரை விட்டு, அவர் ஓடினார். அடுத்த 24 மணி நேரம், அவர் உயிர் வாழ்வதற்கான போராட்டமாக இருந்தது.
நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் விக்டோரியாவும், அவரது குழந்தை வர்வாராவும் தஞ்சம் புகுந்தனர். ஆனால், மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தது. வீரர்கள் பயன்படுத்திய ஒரு சிறிய கட்டடத்திற்குள் அவர் ஓடிச்சென்றார். அங்கு ஒளிந்துக்கொண்டு, பேட்டரியை காப்பாற்ற அவரது அலைபேசியை அணைத்தார். தன்னையும் தன் குழந்தையையும் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று யோசித்தார்.
அடுத்த நாள், ரோந்து பணியில் இருந்த ரஷ்ய வீரர்கள் அவரை கண்டுப்பிடித்துவிட்டனர். விக்டோரியா யாஹித்னே என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள அடித்தளத்தில் சிறைவைக்கப்பட்டார்.
அங்கு அடுத்த 24 நாட்களுக்கு, விக்டோரியாவும் அவரது குழந்தையும் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தனர். விக்டோரியா, தன்னை சுற்றி இருந்த மக்கள், தேவையான மருத்துவ வசதி இல்லாமல் இறப்பதைப் பார்த்தார். அந்த அடித்தளத்திற்கு பிபிசி சென்று, அங்கிருக்கும் மற்றவர்களுடன் பேசியது. இறந்த உடல்களை பல மணி நேரங்கள், சில சமயங்களில், பல நாட்களாக எடுத்து செல்லாமல் இருந்ததாக சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் கூறினார்கள்.

பட மூலாதாரம், KOVALENKO FAMILY
அந்த அறையில், நகரவோ, நடக்கவோ கூட இடம் இல்லாமல், 40 பேர் இருந்தனர். அங்கு வெளிச்சம் இல்லை; அதனால், மெழுகுவர்த்திகளையும், சிக்ரெட் லைட்டர்களையும் அவர்கள் பயன்படுத்தினர். அங்கு இருட்டாகவும், வெப்பமாகவும் இருந்தது. அங்கு இருப்பவர்கள் சுவாசிக்க கஷ்டப்பட்டதாக விக்டோரியா கூறுகிறார். கழிவறையைப் பயன்படுத்தக்கூட அங்கிருப்பவர்கள் பெரும்பாலான சமயங்களில் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் வாளிகளைப் பயன்படுத்துமாறு கூறப்பட்டது.
"நகர முடியாமல் ஒரே இடத்தில் இருந்ததால், அங்குள்ளவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர்கள் நாற்காலியில் உட்கார்ந்தார்கள்; அந்த நாற்காலியிலேயே உறங்கினார்கள். அவர்களின் நாளங்களை எங்களால் பார்க்க முடிந்தது. அவர்கள் ரத்தம் சிந்தினர். ஆதனால், நாங்கள் கட்டுகள் போட்டோம்", என்று விக்டோரியா நினைவுகூர்கிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில்தான், விக்டோரியா தனது கணவரையும் மூத்த மகளையும் இறந்த பெருந்துயரத்தை தாங்க வேண்டிய நிலையில் இருந்தார். அவரால் முடிந்த அளவுக்கு, அவர் அமைதியாகவும், மனதிடத்துடனும் இருக்க தீர்மானித்தார். தன் மற்றொரு குழந்தையைக் காப்பாற்றுவதே அவரது நோக்கமாக இருந்தது.
ஆனால், பெட்ரோ மற்றும் வெரோனிகாவின் உடல்களை கொண்டு வருமாறு தன்னை சிறைப்பிடித்த ரஷ்யர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். இதனால், அவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என்று அவர் நினைத்தார்.
வெரோனிகாவின் தந்தையான தன் முன்னாள் கணவரை, சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, எஞ்சியுள்ளவற்றை புகைப்படம் எடுத்து வருமாறு அவர் கூறினார். அவர்களின் உடல், மனித உடல் என்று அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தது.

பட மூலாதாரம், KOVALENKO FAMILY
எரிந்துபோன காரில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை: அதில், வெரோனிகாவின் ஆடைகளில், துளைகள் இருந்தன. காரின் இரண்டு நம்பர் பிளைட்கள், தீயில் கருகிய கார் என இவையே எஞ்சி இருந்தன.
அவர்களின் உடல்கள் வந்த நாளை விக்டோரியா நினைவுகூர்கிறார்.
"அன்று மார்ச் மாதம் 12 ஆம் தேதி. அவர்கள் என்னை அழைத்தார்கள். "வாருங்கள் போகலாம். அவர்கள் எங்கே புதைக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்," என்றனர். அவர்கள் ஒரு காட்டில் இரண்டு கல்லறைகளில் புதைக்கப்பட்டனர். ஒரு பெட்டி பெரியதாகவும், மற்றொரு பெட்டி சிறியதாகவும் இருந்தன.
"நாங்கள் அங்கே பெட்டிகளை புதைக்க தொடங்கினோம். ஆனால், ஷெல் தாக்குதல்கள் தொடங்கியது. அதனால், நாங்கள் அவற்றை புதைப்பதற்கு முன்பே தப்பி ஓடி விட்டோம். அது மிகவும் பயங்கரமாக இருந்தது", என்கிறார்.
அவரது குடும்பத்திற்கு இதனை செய்தவர்களிடம் அவர் என்ன கூறுவார் என்று கேட்டேன்.
"புதினை சுடுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், நான் அதை செய்வேன். அப்போது என் கைகள் நடுங்காது", என்று அவர் பதிலளிக்கிறார்.

பட மூலாதாரம், KOVALENKO FAMILY
தற்போது மேற்கு யுக்ரேனில் உள்ள லுவீவ் பகுதியில், விக்டோரியாவும் வர்வாராவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். நாங்கள் சந்திப்பதற்கு ஒரு நாள் முன்னர், அவர் மனநல மருத்துவரை முதன்முறையாக சந்தித்திருந்தார். "நான் மற்றவர்களுடன் இருக்கும்போது, நான் எதையாவது செய்கிறேன்; பேசுகிறேன். என்ன நடந்தது என்பதை மறக்கிறேன். ஆனால், நான் தனியாக இருக்கும்போது, நினைவுகளில் தொலைந்து போகிறேன்", என்கிறார்.
அவர் இந்த வார்த்தைகளைக் கூறும்போதே, கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது.
அவர் என்னிடம் ஒரு கீ-செயினை காட்டுகிறார். அது ஒரு சிறிய பசுவின் மார்பில் இதயம் இருப்பதை போன்ற படத்தை கொண்டிருந்தது. அது வெரோனிகா அவருக்கு அளித்த பரிசு.
அத்துடன் ஒரு சிறிய தங்க மோதிரம் இணைக்கப்பட்டிருந்தது.
"இதனை தேவாலயத்தில் இருந்து அவள் எனக்கும் வாங்கி வந்தாள். அது தாயத்து போன்றது. அதுதான் என்னை காப்பாற்றியது என்று தோன்றுகிறது. அது என் பாக்கெட்டில் இருந்தது. அச்சமயம் முழுவதும், இதுவே என்னை பாதுகாப்பாக வைத்திருந்தது", என்று கூறிமுடிகிறார் விக்டோரியா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



















