ட்ரெண்டாகும் யோகி ஆதித்யநாத்: மத்திய அரசின் திட்டத்தில் முதலிடம் பிடித்த உத்தர பிரதேசம்

பிரசுரிக்கப்பட்டது

பிபிசி நேயர்களுக்கு வணக்கம். உலக, இந்திய மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2019-ம் ஆண்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும் பிரதமரின் நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்கு முதல் பரிசை நேற்று (ஜனவரி 2) நடைபெற்ற விழாவில் காணொளிக் காட்சி மூலமாக வழங்கினார் பிரதமர் நரேந்திர மோதி.

இதனால் நேற்று மாலை முதல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவுகள் வரத் தொடங்கி பின்பு அது டிரெண்டானது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் பின் தங்கிய குடும்பத்தினருக்கு சொந்த வீடு ஏற்படுத்தி கொடுக்கும் பணியில், தன் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், 17.58 லட்சம் குடும்பத்தினருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டத்தின் (நகர்புறம்) கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.

இந்த 17.58 லட்சம் வீடுகளில் 10.58 லட்சம் வீடுகள் கட்டுமானப் பணியில் இருப்பதாகவும், மீதமுள்ள வீடுகளின் பணி நிறைவடைந்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் (நகர்புற) திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தையும், ஆந்திரபிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

புத்தாண்டில் அடித்த ஜாக்பாட்: 400 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற அதிர்ஷ்டசாலி

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

2020ஆம் ஆண்டை கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆக்கிரமித்துவிட்டது, இந்த புத்தாண்டிலாவது ஏதாவது நல்லது நடக்க வேண்டுமென்று நினைக்காதவர்கள் கிட்டத்தட்ட யாருமே இருக்கமாட்டார்கள்.

ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு அந்த எண்ணம் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதியே நிறைவேறியுள்ளது.

ஆம், ஒன்பது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குபெறும் லாட்டரி சீட்டு குலுக்கலில் பிரிட்டனை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு 40 மில்லியன் பவுண்ட், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்துள்ளது.

புத்தாண்டில் அடித்த ஜாக்பாட்: 400 கோடி ரூபாய் பரித்தொகை வென்ற அதிர்ஷ்டசாலி

பட மூலாதாரம், PA

இதுவரை தனது பெயர், இடம் குறித்த தகவலை பொதுவெளியில் வெளியிடுவதற்கு விருப்பம் தெரிவிக்காத அந்த புதிய மில்லியனர், வேண்டுமென்றால் இதே நிலையை தொடரவும் அனுமதியுண்டு.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற குலுக்கலில் ஜாக்பாட்டை வென்றுள்ள நபரின் லாட்டரியில் உள்ள ஐந்து எண்களும், இரண்டு அதிர்ஷ்டசாலி நட்சத்திரங்களும் ஒத்தியிருந்ததாக யூரோமில்லியன்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பிரிட்டனின் தேசிய லாட்டரி அமைப்பின் ஆலோசகரான ஆண்டி கார்ட்டர், "பிரிட்டனின் யூரோமில்லியன்ஸ் ஆட்டக்காரர்களுக்கு 2021ஆம் ஆண்டு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. 400 கோடி ரூபாய் ஜாக்பாட் கிடைத்துள்ள நபர் பரிசை பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என்று கூறினார்.

எனினும், பிரிட்டனின் வரலாற்றில் ஒரு தனிநபரால் வெல்லப்பட்ட அதிகபட்ச ஜாக்பாட் இதுவல்ல. 2019ஆம் ஆண்டு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு ஒரே ஜாக்பாட்டில் சுமார் 1,700 கோடி ரூபாய் கிடைத்திருந்தது. அதேபோன்று, கடந்த ஆண்டு மற்றொரு நபருக்கு 570 கோடி ரூபாய் பரிசு கிடைத்திருந்தது.

இந்த நிலையில், தற்போது 400 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ள பிரிட்டனை சேர்ந்த அதிர்ஷ்டசாலி, பரிசுத்தொகையை பெறும்பட்சத்தில் அந்த நாட்டின் சில பணக்காரர்களின் சொத்து மதிப்பையே அவர் பின்னுக்குத்தள்ளக் கூடும் என்று அந்த நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :