You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தொற்றுடன் தஞ்சம் கோரிய பெண்ணுக்கு ஹெலிகாப்டரில் பிரசவம் மற்றும் பிற செய்திகள்
இத்தாலியின் லம்பேடுசா தீவிலிருந்து சிசிலி தீவுக்கு ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்யப்பட்ட போது தஞ்சம் கோரி ஒருவருக்கு குழந்தை பிறந்தது.
மகப்பேறுக்கு முன்பே இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பெண் லம்பேடுசா தீவிலுள்ள தஞ்சம் கோரிகளுக்கான தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
அதன் கொள்ளளவைவிடப் பத்து மடங்கு பேர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அந்த மையத்திலிருந்து சிசிலியின் தலைநகர் பலெர்மோவுக்கு ஹெலிகாப்டர் மூலம் அவரை இடம் மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அந்த ஒரு மணி நேரப் பயணம் முடியும் முன்னர் ஹெலிகாப்டரிலேயே அவருக்குக் குழந்தை பிறந்தது.
தாயும் சேயும் பலெர்மோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்ளனர். அந்தப் பெண் யாரென்று இதுவரை அடையாளப் படுத்தப்படவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இத்தாலிக்கு வரும் அகதிகள் மற்றும் தஞ்சம் கோரிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 19,400 குடியேறிகள் தஞ்சம் கோரி இத்தாலிக்கு கடல் மார்க்கமாக வந்துள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 5,200 ஆக இருந்தது.
''ஏழைகள் சாப்பாட்டு செலவை குறைத்து விட்டார்கள்''
மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு பதிலாக விலைவாசியை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு பதிலாக சரிவை ஏற்படுத்தும் முடிவுகளை பாஜக அரசு எடுத்ததுதான் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என பொருளியல் பேராசிரியர் ஜோதி சிவஞானம் கூறுகிறார்.
தமிழகம் வந்தால் என்ன செய்யப்படும்?
தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் அல்லது யூனியன் பிரதேசங்களில் இருந்து விமானம், ரயில் அல்லது சாலை வழியாக வருபவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து விமானம் அல்லது கப்பல் வழியாக வருபவர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த பரிசோதனை நடைமுறைகள் செப்டம்பர் முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன
விரிவாகப் படிக்க: வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தால் என்ன செய்யப்படும்?
கிழக்கு லடாக் பதற்றம்
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரியின் தெற்குப் பகுதியில் ஆத்திரமூட்டும் செயல்பாடுகளில் சீனா ஈடுபடுவதாகக் கூறி அங்கு முகாமிட்டிருந்த சீன படையினர் மேலும் முன்னேறாத வகையில் இந்திய படையினர் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையாகி வருகிறது.
விரிவாகப் படிக்க: கிழக்கு லடாக் எல்லையில் மீண்டும் சீன படையினர் - இந்தியா குற்றச்சாட்டு
ஜிடிபி சரிவுக்கு கொரோனா பரவல் காரணமா?
இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட கொரோனா மட்டுமே காரணமல்ல என்றும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்றும் விமர்சிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன்.
விரிவாகப் படிக்க: ஜிடிபி சரிவுக்கு கொரோனா பரவல் காரணமா? பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் என்ன கூறுகிறார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: