You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முக்கிய பரிசோதனையை நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவிப்பு
தனது அணுஆயுத தடுப்பு திறனை அதிகரிக்க வடகொரிய ஒரு செயற்கைக்கோள் ஏவுத்தளத்தில் இருந்து முக்கிய பரிசோதனையை நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சோகே செயற்கைக்கோள் ஏவுத்தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இந்த பரிசோதனை நடத்தப்பட்டதாக வடகொரியா அரசு ஊடகத்திடம் தெரிவித்த ஒரு செய்தித் தொடர்பாளர், அதன் விவரங்களை வெளியிடவில்லை.
ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களில் சோகே ஏவுத்தளத்தில் நடைபெறும் இரண்டாவது பரிசோதனை இதுவாகும்.
அணுஆயுத பயன்பாடு தொடர்பாக, அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
வடகொரியா அதனுடைய அணுஆயுத திட்டங்களை முழுமையாக கைவிடும் வரை அந்நாட்டை மிகவும் பாதிக்கும் தடைகளை அகற்ற முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.
ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவிடம் இருந்து புதிய சலுகைகளை வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கேட்டுவருகிறார்.
அமெரிக்கா இதற்கு ஒத்துவராவிட்டால், அச்சுறுத்தும் "கிறிஸ்துமஸ் பரிசை" எதிர்பார்க்கலாம் என்றும், புதிய வழியை வடகொரியா எடுக்கும் என்றும் அந்நாடு தெரிவித்திருகிறது.
என்ன பரிசோதனை?
இந்த தளத்தில் வடகொரியா என்ன பரிசோதித்துள்ளது என்று தெளிவாக தெரியவில்லை.
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் வடகொரிய நிபுணர் அங்கிட் பாண்டா பிபிசியிடம் இது பற்றி தெரிவிக்கையில், பாலிஸ்டிக் ஏவுகணை இயந்திரத்தின் தரை பரிசோதனையாக இது இருக்கலாம் என்று கூறினார்.
கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் நோக்கம் இதுதான் என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
ஆயுத சோதனைகளை அதிகரித்துள்ள வடகொரியா சமீபத்திய வாரங்களில் வலுவான வாதங்களை பரிமாறி வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்ட பின்னர் ஜப்பான் வடகொரியாவை கண்டித்தது,
ஆனால், மிகப் பெரிய பல்முனை ராக்கெட் ஏவுகலனை சோதிப்பதாக கூறிய வடகொரியா, ஜப்பான் மிக விரைவில் உண்மையான பாலிஸ்டிக் ஏவுகணையை பார்க்கலாம் என்று மிரட்டல் விடுத்திருந்தது.
வட கொரியா இப்போது பரிசோதனை செய்வது ஏன்?
இந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது,
வடகொரியாவின் ஆயுத திட்டத்தை பற்றி விவாதிக்க அமெரிக்காவின் வேண்டுகோளின்படி, கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவை கூறியது. இதனை தீவிர ஆத்திரமூட்டல் என்று வடகொரியா கூறியிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை வடகொரியாவுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஸ்டீபன் பியேகுன் தென்கொரியாவில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வடகொரியாவோடு ஒப்பந்தம் ஏற்படும் என்று தான் இன்னும் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: