அமெரிக்காவில் ஒரு துயர கதை: ஒரு மரணமும் தாயின் கேள்வியும் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் ஒரு துயர கதை: ஒரு மரணமும் தாயின் கேள்வியும்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரித்த போது, அந்த மனிதர் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
ரொனால்ட் எனும் அந்த நபர் அமெரிக்க கடற்படையில் பணியாற்றி இருக்கிறார். விவகாரத்து ஆன அவர் தனியாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்திருக்கிறார். "முன்பெல்லாம் தினமும் பேசுவான். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவன் அழைப்பது நின்றுவிட்டது" என்கிறார் அந்த தாய்.
மகனின் சரியான வசிப்பிடம் தெரியாததால், இவர் பல்வேறு காவல் நிலையங்களில் மகனை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார். "என் மகன் எங்காவது வெளியூர் பயணம் சென்றிருக்கலாம் என்று காவல் அதிகாரிகள் கூறிவிட்டனர்" என்கிறார்.
இறந்த அந்த நபருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 51 வயது. "எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. என் மகன் இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள். ஏன் என் மகனை என்னை தவிர யாரும் தேடவில்லை. ஏன் இதுகுறித்து யாருக்கும் எதுவுமே தெரியவில்லை" என்று கேள்வி எழுப்புகிறார் இறந்த ரொனால்டின் தாய்.

அமெரிக்கா சிரியாவில் இருந்து 'எண்ணெய் திருட' முயற்சிக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க துருப்புகள் சிரியாவில் நிலைகொண்டிருக்கும் நிலையில், சிரியாவின் எண்ணெய் வருவாயில் இருந்து மாதம் தோறும் மில்லியன் கணக்கான டாலர் அமெரிக்காவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தனது நாட்டிலிருந்து அமெரிக்கா எண்ணெய் திருடுவதாக சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிபர் அசாத்தின் மிக பெரிய ஆதரவு நாடான ரஷ்யா அமெரிக்காவின் இந்த செயலை "சர்வதேச கொள்ளை" என்று விவரித்துள்ளது.
விரிவாகப் படிக்க:சிரியாவில் இருந்து 'எண்ணெய் திருட' அமெரிக்கா முயற்சிக்கிறதா?

'மகாராஷ்டிர பாஜக அரசு மீது நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும்'

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித் பவாரின் முடிவை தாங்கள் ஆதரிக்கவில்லை என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது. நாளையே (ஞாயிற்றுக்கிழமை) பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
விரிவாகப் படிக்க:'மகாராஷ்டிர பாஜக அரசு மீது நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு வேண்டும்'

'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்'

இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க முடியும் என டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
விரிவாகப் படிக்க:'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்'

'கடைசி ஓவரில் வெல்வது தோனி மட்டுமல்ல, அமித் ஷாவும்தான்'

பட மூலாதாரம், Twitter
மகாராஷ்டிரா மாநில அரசியலில் சனிக்கிழமை காலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம் குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான பதிவுகள் வலம் வருகின்றன.
சிவசேனை தலைமையிலான ஆட்சி அமையும் என்று பேசப்பட்டுவந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம், மீண்டும் பாஜகவின் தேவந்திர பட்னவிஸ் முதல்வராக இன்று (சனிக்கிழமை) காலை பதவியேற்றார்.
இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் பாஜகவின் அரசியல் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பதிவுகள் பகிரப்பட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












