சினிமா: தமிழ் திரையுலகுக்கு மீண்டும் வரும் எமி ஜாக்சன், சென்னையில் ஷாரூக் கான் - திரையுலகின் இந்த வார சுவாரஸ்ய நிகழ்வுகள்

    • எழுதியவர், நபில் அஹமது
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

எமி ஜாக்சன் தமிழ்த் திரைத்துறைக்கு வருவது முதல், விக்ரம் படத்தின் 90வது நாள், சென்னையில் ஷாருக்கான் என்று தமிழ்த் திரையுலகின் இந்த வார நிகழ்வுகளின் தொகுப்பு இது.

1. விக்ரம் 90வது நாள் கொண்டாட்டம்...

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'விக்ரம்', இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாஸில், நரேன், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர், படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றது 1986ம் ஆண்டு வெளியான 'விக்ரம்' படத்தின் தொடர்ச்சியாக இப்படம் எடுக்கப்பட்டதாக கூறி இருந்தாலும் முழுக்க புதிய திரைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திரையரங்குகளில் 90 நாள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு விழா ஒன்றும் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் படத்தின் தமிழக விநியோக உரிமையை பெற்று இருந்த ரெட் ஜயண்ட் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தன, நடிகர்கள் ஆமிர் கான், விக்ரம், சிவகார்த்திகேயன், ஆரி,விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டமாக அமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2. மீண்டும் தமிழ் திரையுலகத்திற்கு வரும் எமி ஜாக்சன்...

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'மதராசப்பட்டினம்', திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் லண்டனை சேர்ந்த மாடல் அழகி நடிகை எமி ஜாக்சன். இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில், 'ஏக் தீவானா தா', தெலுங்கில் 'யவடு' கன்னடத்தில் 'தி வில்லன்' ஆகிய படங்களின் மூலம் அறிமுகமான இவர் சிறுது காலம் ஓய்வில் இருந்தார், இதற்கிடையில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.

தற்போது மீண்டும் இவர் தமிழ் திரையுலகத்திற்கு திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவரை அறிமுகம் செய்த இயக்குநர் ஏ.எல்.விஜய் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் எமி ஜாக்சனை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

3.சென்னையில் ஷாருக்கான்!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இயக்குனர் அட்லி, பிகில் திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்தப் படத்திற்கு ஜவான் என தலைப்பு வைத்துள்ளனர்.

இதற்கான படப்பிடிப்பு கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைப்பெற்றது தற்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர், இப்படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பது உறுதியான நிலையில் அவரும் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பிலேயே பங்கு பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

4. இணைந்து பயணித்த ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா

ஹங்கேரி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. அமெரிக்கா மற்றும் கனடா சென்றிருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்நிலையில் இளையராஜாவுடன் பேட்டரி வாகனத்தில் தான் பயணிக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த வீடியோவைப் பற்றிக் கூறும்போது, "நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து திரும்பி வருகிறோம். ஆனால் எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்" என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

5. ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் தனது முன்னாள் காதலிக்கு ஏன் 1,20,000 டாலர் அளித்தார்?

ஹாலிவுட் திரை உலகில் மிகவும் பிரபலபடைந்தவர் நடிகர் சார்லி ஷீன், திரைத்துறையைத் தாண்டி அவ்வப்போது தன்னுடைய தவறான செயல்களால் தலைப்புச் செய்திகளிலும் இடம்பெறுவார், போதை பொருட்கள் உட்கொள்தல் போன்று இவர் மீதான தொடர் புகார்களால் வார்னர் ப்ரோஸ் மற்றும் சி.பி.எஸ் போன்ற நிறுவனங்கள் இவருடனான ஒப்பந்தத்தை ரத்தும் செய்தன. இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக பகிரங்கப்படுத்தினார் சார்லி ஷீன், இச்செய்தி ஹாலிவுட் திரையுலகினர், ரசிகர்கள், சார்லி ஷீன் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் மேலும் ஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அது அவருடைய காதலி!

சார்லி ஷீனுடன் குடும்ப வாழ்க்கையில் இருந்த காதலி, தன்னிடம் ஹெச்.ஐ.வி தொற்று இருந்ததை மறைத்ததாக ஷீன் மீது வழக்கு தொடர்ந்தார், இதை விசாரித்த நீதிபதி, சார்லி ஷீன் 1,20,000 அமெரிக்க டாலர்களை அபராதமாக அவருடைய முன்னாள் காதலிக்கு அளிக்கவேண்டும் என்று கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: