கமலின் இந்தியன்-2 முதல் யுவனின் புதிய போஸ்டர் வரை - சினிமா உலகில் இந்த வார சுவாரஸ்ய நிகழ்வுகள்

    • எழுதியவர், நபில் அஹமது
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்த வாரம் தமிழ் திரையுலகில் நடந்த சில சுவாரஸ்யமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்த ஆண்டில் அதிகமாக மக்கள் ரசித்தது அனிருத் இசையமைத்த பாடல்கள் தான் என பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான சோனி தெரிவித்துள்ளது. இதற்காக சோனி நிறுவனத்தின் நிர்வாகிகள் சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத்தை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறி நினைவு பரிசும் வழங்கி உள்ளனர். அந்த நினைவு பரிசில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் கமலஹாசன், ஃபகத் ஃபஸில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' ஆகிய படங்களின் புகைப்படங்களும் இடம்பெற்று இருந்தன.

போஸ்டர் வெளியிட்ட யுவன்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைத்துறைக்கு வருகை தந்து 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன சமீபத்தில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் 2 நாட்கள் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து அடுத்த மாதம் 10ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் பணி துவங்கியுள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் போஸ்டராக வெளியிட்டுள்ளார்.

மீண்டும் களைகட்டும் 'இந்தியன் - 2'

மிகப்பெரிய இழுபறிக்கு பின்பாக இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 2வது வாரத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா- வும் இயக்குநர் ஷங்கர் தரப்பு தயார் படுத்தி வருகிறது. இதனிடையே நடிகர் கமல் ஹாசன் தற்போது ஓய்விற்காக சிகாகோ சென்றுள்ளார் படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார்.

ஜெயிலர் ஷூட்டிங் - வாய் திறந்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராக உள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 15 அல்லது 22ஆம் தேதி துவங்குமென நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இந்த தகவல்களை பகிர்ந்தார். அப்போது மீண்டும் அரசியலுக்கு வர எண்ணம் உள்ளதா? என்ற நிருபரின் கேள்விக்கு 'இல்லை' என்றும் கூறினார்.

மன்னிப்பு கேட்ட ஆமிர் கான்

நடிகர் ஆமீர் கான் நடிப்பில் 'ஃபாரஸ்ட் கம்ப்' என்ற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட 'லால் சிங் சத்தா' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் தோன்றியது ரசிகர்களுக்கு ஆச்சர்யமூட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது முன்னதாக ஆமீர் கான் இந்தியா பற்றி கூறிய கருத்து மிகவும் சர்ச்சையானது. அதன் தொடர்ச்சியாக படம் வெளியாவதற்கு முன்பாக படத்தை புறக்கணிக்க கோரி சமூக வலைதளங்களில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில், தான் கூறிய கருத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக ஆமீர் கான் தெரிவித்திருந்தார்.

கோப்ரா விநியோக உரிமை பெறும் உதயநிதியின் நிறுவனம்

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குதில் உருவாகியுள்ள திரைப்படம் ' கோப்ரா'. 2019ஆம் ஆண்டே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் கொரோனா தொற்று உட்பட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு முடிவதற்கு தாமதமானது இதற்கு இடையில் 2 முறை வெளியீட்டு தேதி அறிவித்த பின்பும் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. தற்போது அனைத்து வேலைகளும் முடிவு பெற்றதால் இம்மாதம் 31ம் தேதி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரமின் திரை உலக பயணத்தில் இப்படம் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ளது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஷூட்டிங்கில் விஷாலுக்கு காயம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், 'மார்க் ஆண்டனி'. எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்‌ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷால் கால் முட்டியில் காயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: