You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியன்- 2 விபத்து விசாரணைக்கு சம்பவ இடத்துக்கு கமல் செல்லவேண்டியதில்லை: உயர்நீதிமன்றம்
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பான போலீஸ் விசாரணைக்காக, நடிகர் கமல்ஹாசன் விபத்து நடந்த இடத்திற்கு நாளை நேரில் செல்வது அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்குத் தேவைப்பட்டால் அவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தன் உத்தரவில் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பூந்தமல்லி அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் கடந்த பிப்22-ம் தேதி நடைபெற்ற இந்தியன் 2 படப்பிடிப்பின்போது, கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இது தொடர்பாக லைகா படத்தயாரிப்பு நிறுவனம் மீது வழக்குப் பதிவானது.
படப்பிடிப்பின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தன என்பது தொடர்பாக வழக்கின் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, விபத்து குறித்து இயக்குநர் சங்கரிடமும், நடிகர் கமலிடமும் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கடந்த மார்ச் 3 அன்று நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டு வேப்பேரியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்து நேரத்தில் என்ன நடந்தது என விளக்கம் அளித்ததாக தெரிவித்தார். மேலும், தமிழ் சினிமா துறையில் இனி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முதல்படியாக இந்த விசாரணையை எடுத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் விபத்து நடந்தது குறித்து நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்துவதாக நடிகர் கமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து, அதற்கு விலக்கு கோரினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பவ இடத்துக்கு கமல் நேரில் செல்லவேண்டியதில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன?
"நடிகர் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிக்கும் இந்தியன் 2 படத்தை சங்கர் இயக்கி வருகிறார். வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை புறநகரிலுள்ள படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு படப்பிடிப்பு தளத்தில் மிகப் பெரிய மின்விளக்குகளை ராட்சச கிரேன்களின் மீது அமைத்து கொண்டிருந்தபோது, கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கிரேன் விழுந்த இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், "எத்தனையோ விபத்துகளை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கத்தின் தலைவர் செந்தில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் இருக்கும் படங்களை எடுக்கும்போது கேமரா மேன் பெரிய லைட்கள் வைத்து காட்சியமைக்க நினைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, கிரேனில் லைட்களை கட்டச் சொல்லி ஒளிப்பதிவு செய்கிறார்கள். நேற்று இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திலும் அதுதான் நடந்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.
இந்த வகை கிரேன்கள் ஓரளவிற்கு தான் எடையைத் தாங்கும். இன்னும் லைட் வையுங்கள் என்று சொல்லும் போது லைட் மேன் என்ன செய்ய முடியும்? என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"அதிக அளவில் கிரேனில் லைட் கட்டியிருக்கிறார்கள். அப்பொழுதே கிரேன் ஒரு பக்கமாக சாய்ந்து இருந்துள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஷூட்டிங்கிற்கான வேலைகளை செய்திருக்கிறார்கள். கிரேன் ஆப்ரேட் செய்பவர் இதற்கு மேல் எடை அதிகமானால் கிரேன் விழுந்துவிடும் என எச்சரித்ததாக அங்கே பணியில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்ன என்பது அங்கே இருந்தவர்களுக்குத் தான் தெரியும்."
விரிவாகப் படிக்க:இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்துக்கு காரணம் என்ன?
"பாதுகாப்பு குறித்து அவமானமாக உணர்கிறேன்" - கமல்
இந்தியன்-2 படப்பிடிப்பின்போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தது குறித்து முன்னதாக கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன் இந்தத் தொழிலில் இருக்கவேண்டிய அளவு பாதுகாப்பு இல்லை என்றும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை சென்ற கமலஹாசன், அங்கு பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார். உயிரிழந்தோர் குடும்பங்கள் மற்றும் காயமடைந்தோருக்கு தம் சார்பில் அவர் ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாகவும் அறிவித்தார்.
"இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த உதவி இயக்குநர் கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை.
என் குடும்பத்தில் நடந்த விபத்தாகவே இதை கருதுகிறேன். நான் எந்த நிறுவனத்தையும் சார்ந்து இங்கே வரவில்லை.
நான் சிறுவயதிலிருந்து இந்தத் தொழிலில் இருக்கிறேன். இந்தத் தொழிலில் இருக்க வேண்டிய அளவிற்கு பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு அசம்பாவிதம் தற்போது நடந்துள்ளது.
விரிவாகப் படிக்க:"கடைநிலை ஊழியனின் பாதுகாப்பு குறித்து அவமானமாக உணர்கிறேன்"
பிற செய்திகள்:
- இத்தாலியில் ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்புகள், ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி
- கொரோனா வைரஸ்: - 'டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது' - இந்தியாவில் அண்மைய தகவல்கள் என்ன?
- ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா, வெறிச்சோடும் நகரங்கள், ரத்தாகும் நிகழ்வுகள் - என்ன நடக்கிறது உலகில்?
- "ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதம், மீண்டும் துவங்கிய புள்ளிக்கே வந்திருக்கிறது"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: