உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்தியவர் சிக்கியது எப்படி?
உத்தரப் பிரதேசத்தில் போலி தூதரகம் நடத்திவந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஸியாபாத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த போலி தூதரகத்தை கண்டுபிடித்து West Arctica எனும் இல்லாத ஒருநாட்டின் தூதராக தன்னை கூறிக்கொண்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்பவரை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படை 22-ம் தேதி கைது செய்துள்ளது.
விசாரணையில் பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் சேர்த்து எடுக்கப்பட்ட போலியான புகைப்படங்களைப் பயன்படுத்தி மோசடியின் ஊடாக வழிநடத்தியதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கூடுதலாக, காவல் உயர் அதிகாரி அமிதாப் யாஷ் கூறுகையில், ஜெயின் ஒரு வாடகை வீட்டிலிருந்து போலி தூதரகத்தை இயக்கியுள்ளார். அவர் West Arctica, Saborga, Poulvia, and Lodonia போன்ற இல்லாத கற்பனையான நாடுகளின் தூதுவராக தன்னை கூறிக்கொண்டு போலி எண் பலகைகள் உள்ள வாகனங்களில் பயணித்ததாக கூறினார்.
அவரிடம் இருந்து நான்கு சொகுசு கார்கள், 12 போலி பாஸ்போர்டுகள், வெளியுறவுத்துறை முத்திரையுடன் கூடிய போலி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



