2022இல் இந்தியாவில் ட்ரெண்டிங் ஆன சில விநோத நிகழ்வுகள்

ttf vasan

பட மூலாதாரம், twin_throttlers_family_fp

பிரசுரிக்கப்பட்டது

'2022' இப்போதுதான் பிறந்ததை போல உள்ளது அதற்குள் இந்த வருடம் முடியப் போகிறது. வருடம் முடியப் போகிறது என்றாலே இந்த வருடம் முழுவதும் நடைபெற்ற வைரல் சம்பவங்களை நினைவுகூர்வது வழக்கமான ஒன்றுதானே. பொதுவாக ஒரு செய்தியோ, நபரோ அல்லது வீடியோவோ வைரல் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

சில சமயங்களில் வைரலான நிகழ்வுகள் நாம் புருவத்தை உயர்த்தி இப்படி ஒரு செய்தியா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவும் வைக்கும்.

அப்படி கடந்த வருடத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக வைரலான சில நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளோம்.

ரோஜா சீரியல் பிளாஸ்டிக் சர்ஜரி

முன்மாதிரியான, நகைச்சுவையான சீரியல்கள் பல இருந்தாலும், சீரியல்கள் என்றாலே நீண்ட காட்சிகளும் அழுகையும் தானே என்று பகடி செய்யக்கூடிய வகையில் பல சீரியல்கள் உள்ளன.

அதன் உச்சமாய் மருத்துவ ரீதியில் அட என்னடா லாஜிக் இது என அனைவரையும் ஆச்சரியமாக பார்க்க வைத்த சீரியலின் சீன் ஒன்று வைரலானது. தனியார் தொலைக்காட்சியின் ரோஜா என்ற சீரியலில் நாயகி கொல்லப்படுவது போலவும், உடனே வேறொரு உடலில் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயகியின் முகத்தை பொருத்துவதை போலவும் காட்சி ஒன்று ஒளிபரப்பானது.

 ‘இட்ஸ் ஏ மெடிக்கல் மிராக்கல்’ என சமூக வலைத்தள பயனர்கள் அந்த வீடியோவை பகிர்ந்ததில் அது வைரலானது. மறுபுறம் ஆயிரம் எபிசோட்களை கடந்து ரசிகர்களிடம் அதிக வரவேற்பை இந்த சீரியல் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேத்திக்காக ஹெலிகாப்டர்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புனேவை சேர்ந்த விவசாயி ஒருவர் புதியதாக பிறந்த தனது பேத்தியையும் மருமகளையும் ஹெலிகாப்டர் வைத்து வீட்டுக்கு அழைத்து சென்ற செய்தி வைரல் ஆனது.

மருமகளின் பிறந்த வீடும் புனேவிலேயே இருந்தாலும் பேத்தி பிறந்த அதீத சந்தோஷத்தில் தனியார் ஹெல்காப்டர் ஒன்றை வாடகைக்கு புக் செய்து அவர்களை பிறந்த வீட்டிலிருந்து அழைத்து வந்துள்ளார் அந்த விவசாயி.

டிடிஎஃப் வாசன்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இது 2கே கிட்ஸ்களுக்கான காலம். சினிமா பிரபலங்கள் பல வருடங்களாக சேர்த்த புகழை சமூக ஊக பிரபலங்கள் ஒரு சில மாதங்களில் பெற்றுவிடுகின்றனர். அதுவும் 2 கே கிட்ஸுடன் தொடர்புடையவர்கள் என்றால் குறுகிய காலத்தில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே சேர்ந்து விடுகிறது.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டு சமூக ஊடகத்தில் இயங்க கூடிய டிடிஎஃப் வாசன் தனது பிறந்தநாள் அன்று ‘மீட்டப்’ ஒன்றை ஏற்பாடு செய்து கோயம்புத்தூர் வந்திருந்தார். அப்போது தனது ரசிகர்களுடன் செஃபி ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார். அந்த செல்ஃபி குறித்து பெரிதும் பேசப்பட்டது. அதில் பலருக்கு யார் இந்த வாசன் என்ற சந்தேகமும் எழுந்தது.

தனது பைக்கில் பயணம் செய்து அது குறித்து தனது சேனலில் பதிவிடுவார் வாசன்.

இவரின் செஃபி மட்டும் அல்ல இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும்  ட்ரெண்டிங்கில் இருந்தார். டிக் டாக் பிரபலமான ஜி.பி.முத்துவை பைக்கின் பின்னால் அமரவைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் வாசன். அதில் வேகமாக சென்றது, பின்னால் அமர்ந்தவர் ஹெல்மெட் அணியாதது, போன்ற குற்றங்களுக்காக டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

elon musk

பட மூலாதாரம், Getty Images

ட்விட்டரின் ப்ளூ டிக்

ட்விட்டரில் கணக்கு சரிபார்க்கப்பட்ட பயனர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவது வழக்கம். அதாவது ‘வெரிவைட் அக்கவுன்ட்’ என்று அதனை அழைப்பர். இது பிரபலங்களின் பெயரில் இயங்கும் போலி கணக்குகளை நாம் பின் தொடராமல் இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.

ஈலோன் மஸ்க் ட்விட்டரின் சிஇஓவாக ஆன பிறகு ப்ளூ டிக் பெற வேண்டும் என்றால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக உருவெடுத்தது. பெரும் குழப்பத்தையும் உருவாக்கியது. இதுதொடர்பாக பலரும் பலவிதமான தகவல்களை பகிர்ந்தனர். ஈலோன் மஸ்கும் அவ்வப்போது ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட்டு தொடர்ந்து ட்ரெண்டிங் பட்டியலில் இருந்து வருகிறார்.

தற்போது ட்விட்டரில் கோல்ட், க்ரே மற்றும் ப்ளூ என பல்வேறு சரிபார்ப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்: வாடகை தாய் மூலம் குழந்தை

இந்த வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தனர். இயக்குநர் விக்னேஷ் சிவன் இதனை தனது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்தார்.

உடனே இது சமூக வலைத்தளங்களில் பேசுப் பொருளானது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமான சில மாதங்களில் எப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற முடியும்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் சிலர் பேசினர்.

இதுகுறித்து விசாரிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்திருந்தார். அதன்பின் கடந்த 2016ஆம் ஆண்டே இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என விக்னேஷ் சிவன் விசாரணையில் தெரிவித்தார் என்று வெளியான செய்திக்கு பிறகு இந்த செய்தி அலை ஓய்ந்தது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

பட மூலாதாரம், WIKKIOFFICIAL INSTAGRAM

மருந்துச்சீட்டு திருமண அழைப்பிதழ்

திருமணங்களும், திருமண ஃபோட்டோ ஷூட்களும் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். ஆனால் திருமண பத்திரிகை ஒன்று கடந்த ஆகஸ்டு மாதம் வைரல் ஆனது. 

மாத்திரையின் அட்டையை போல வடிவமைக்கப்பட்ட அந்த திருமண பத்திரிகையில் மணமகனின் பெயர், மணமகளின் பெயர், திருமணம் நடைபெறும் இடம் என அனைத்தும் மாத்திரை அட்டையின் பின்புறம் உள்ளதை போலவே அச்சிடப்பட்டிருந்தது. 

மணமகள் மணமகன் இருவரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறு வித்தியாசமான திருமண அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகத்தில் பலர் அதுகுறித்து பதிவிட்டிருந்தனர்.

வைரலான புகைப்படம்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு, வைரலான அழைப்பிதழ்

ஆதிபுருஷ் ட்ரெய்லர்

நடிகர் பிரபாஸ் மற்றும் சயிஃப் அலிகான் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஆதிபுருஷ். இதன் டீசர் அக்டோபர் மாதம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக உருவெடுத்தது.

ஆதிபுருஷ் படத்தில் பயன்படுத்தப்பட்ட விஷுவல் எஃபட்ஸ் மிக ‘மலிவாக காட்சியளிக்கிறது’ என பலர் படத்தின் டீசரை கிண்டல் செய்தனர். குறிப்பாக ராவணன் வேடத்தில் வரும் சயிஃப் அலி கானின் பத்து தலைகள் குறித்து பலர் கேலி செய்தனர்.

ஏற்கெனவே பிரபாஸ் பாகுபலி திரைப்படம் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயம் ஆனவர் என்பதால் ஆதிபுருஷ் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதன் விஷுவல் எஃபக்ட்ஸ் குறித்து மோசமாக டிரெண்ட் ஆனதால் பெரிய திரைக்காக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டது  என்று படக்குழு விளக்கம் தந்தனர்.

‘ ஏ எப்புட்ரா’

 ‘ ஏ எப்புட்ர’ இந்த ஒரே வார்த்தையின் மூலம் ஒரு சிறுவன் வைரலாகியுள்ளான். இந்த வார்த்தையும் வைரலாகியுள்ளது. கையில் ரப்பர் பேண்டை வைத்து கொண்டு சிறுவன்  வெளியிட்ட ஒரு காணொளி சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டதுடன் ‘ஏ எப்புட்ரா’ என்ற வார்த்தை மீம் டெம்ப்ளேடுக்கான வார்த்தையாகவும் மாறிவிட்டது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த சொல்லை விளையாட்டாக பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை குளிர்

சென்னையில் பொதுவாக அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை மழை பெய்வது உண்டு. மார்கழியில் குளிர் தெரிவது உண்டு. 

ஆனால் இந்த நவம்பர் மாதம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையின்போது சென்னையில் மழையுடன் குளிரும் இணைப்பாக வந்தது. எனவே மழைக்காக வைத்திருந்த டெம்ப்ளேட்டுகளை குளிருக்காக பயன்படுத்தினார்கள் நெட்டிசன்கள்.

சென்னை ஏதோ மலை பிரதேசத்தை போல காட்சியளிக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் எழுதி சில்லாகித்து கொண்டனர்.

மீம் டெம்ப்ளேட்டுகள் பறந்தன. அவர்வர் தங்களின் அனுபவங்களுக்கு ஏற்றாற்போல சமூக வலைத்தளங்களில் சென்னை குளிர் குறித்து கண்டன்ட்களை ஷேர் செய்து கொண்டனர்.

 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: