சீனாவில் 13 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலநடுக்கம் - பாதிப்பு என்ன?
சீனாவின் வடமேற்கு பகுதியில் திங்கள்கிழமை (டிச. 18) நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், குறைந்தது 126 பேர் உயிரிழந்துள்ளனர்,700-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இதனால், உயிரிழப்புகள் அதிரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சூ மற்றும் சின்காய் மாகாணங்களில் டிச. 18 நள்ளிரவில் ரிக்டர் அளவுகோளில் 6.2 என நிலநடுக்கம் பதிவானதாக சீனா கூறுகிறது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் 5.9 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சின்காய் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீடுகள் மண்ணில் புதைந்தன. 5,000 கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இடிபாடுகளுக்குள்ளே ஏராளமானவர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் சாலைகள், உள்கட்டமைப்புகள் சிதைந்துள்ளன. மின்சாரம், நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
திபெத்திய மற்றும் லோஸ் பீடபூமிகளுக்கு இடையே கான்சூ அமைந்துள்ளது. மங்கோலியாவின் எல்லையாகவும் இது உள்ளது. சீனாவின் ஏழ்மையான மற்றும் பல்வேறு இனத்தவர்கள் வாழும் பகுதியாக கான்சூ இருக்கிறது.
சீனாவின் பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் தீமூட்டி குளிர் காய்கின்றனர். செவ்வாய்க்கிழமை வெப்பநிலை மைனஸ் 13 என்ற அளவை தொட்டிருப்பதாக சீன ஊடகங்கள் கூறுகின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



