'562 எலும்புக்கூடுகள்': செம்மணி மனிதப் புதைகுழி குறித்து மீண்டும் எழுந்த மக்கள் குரல் - பின்னணி என்ன?

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி
    • எழுதியவர், ஜெ.பரணீதரன்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

''22 வயதில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட அமலன் என்ற எனது மகனுக்காக மட்டுமல்லாது யுத்தகாலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட அனைவருக்காகவும் போராடுவதற்காக கிளிநொச்சியில் இருந்து இங்கு வந்துள்ளேன். நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டேன்''

போராட்டக்களத்தில் நின்றுகொண்டிருந்த யோகராசா கனகரஞ்சனி என்ற மகனைப் பறிகொடுத்த தாய் பிபிசி தமிழிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மிகவும் பாரிய மனிதப் புதைகுழியாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வரை 562 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி உட்பட ஏனைய காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்குமாகச் சேர்த்து நீதிகோரி, ஆகஸ்ட் 14-ஆம் திகதி மாலை 'நீதியின் ஓலம் 2' என்ற மக்கள் போராட்டமொன்று ஆரம்பித்தது. 17-ஆம் திகதி யாழி நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் நீதிகோரும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவுபெற்றது.

போராட்டத்தின் பின்புலம் என்ன?

யோகராசா கனகரஞ்சனி

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, யோகராசா கனகரஞ்சனி

1995-ஆம் ஆண்டு யுத்தகாலத்தின்போது, யாழ்ப்பாணம் முழுவதும் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னர், ஏராளமான பொதுமக்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்

அதன்பின்னர், 1999-ஆம் ஆண்டு முதன்முறையாக செம்மணிப் பகுதியில் மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் கடந்த 2025-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பழைய மனிதப் புதைகுழிக்கு மிக அருகில், சித்துப்பாத்தி மயானத்தில் கட்டட வேலைகளுக்காக குழிகள் வெட்டும்போதே, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இதனை கட்டங்கட்டமாக அகழ்ந்து விசாரணை நடாத்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது மூன்றாம் கட்ட அகழ்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழ்வுப் பணிகளின்போதே மேற்படி 562 எலும்பு கூடுகளும் பல சான்றுப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்போது பல சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடங்கலாக, பாடசாலைப் புத்தகப் பை, குழந்தைகளின் விளையாட்டு பொம்மை, மழை அங்கி போன்ற பல சான்றுப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கிருஷாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவி 1996 ஆம் ஆண்டு காணாமலாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவச் சிப்பாயான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது உயர் ராணுவ அதிகாரிகளின் உத்தரவுப்படி சுமார் 600 க்கும் மேற்பட்ட தமிழர்களை செம்மணிப் பகுதியில் கொன்று புதைத்ததாகவும், சுயாதீன விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் தன்னால் அந்த இடங்களை அடையாளம் காட்டமுடியும் எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதைக்கப்பட்ட உடல்களுக்கு நீதி வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, புதைக்கப்பட்ட உடல்களுக்கு நீதி வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

செய்மதிப் படங்கள் மற்றும் நவீன கருவிகள் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு, எலும்பு கூடுகள் இருக்கக்கூடியதாக சந்தேகிக்கப்பட்ட பிரதான புதைகுழியே இதுவரை துறைசார் நிபுணர்களின் மேற்பார்வையில் அகழப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மேலதிகமாக பல சோதனைக் குழிகள் தோண்டப்பட்டன. இதில் அனேகமான குழிகளில் புதிய எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 56 நாட்கள் அனுமதியானது ஆகஸ்ட் 19-ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இந்நிலையிலேயே தற்போது போராட்டம் நடந்துள்ளது. அகழ்வுப்பணிகளை நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி இடைநிறுத்தாமல் தொடர வேண்டியும், மழைக்காலம் ஆரம்பிக்க முன்னர் அகழ்வுப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும், உள்நாட்டு நிபுணர்கள் மட்டுமல்லாது சர்வதேச கண்காணிப்பாளர்களின் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் போன்ற பல கோரிக்கைகளுடன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மட்டுமல்லாது பல கட்சிகளின் அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்து வருகை தந்திருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள்

ஜீவந்த பீரிஸ்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, ஜீவந்த பீரிஸ்

இலங்கையின் தென்பகுதியில் தேவாலயமொன்றின் பாதிரியாராக கடமையாற்றும் ஜீவந்த பீரிஸ், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவிக்கும்போது, ''இலங்கையின் வேறு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் செம்மணி புதைகுழியே தற்போது கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் பாரிய புதைகுழியாகவுள்ளது. மனித குலத்துக்கு விரோதமான இவ்வாறான செயல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு ஓர் இலங்கையராக இன மதம் மொழி கடந்து என்னுடைய ஆதரவை தெரிவிப்பது எனது கடமையாகும். அதனாலேயே நான் இவ்வளவு தூரம் பயணம்செய்து இங்கு வந்துள்ளேன்'' என்றார்.

சம உரிமை இயக்கத்தின் சார்பாக கொழும்புவில் இருந்து வந்து கலந்துகொண்ட லஹிரு வீரசேகர என்ற சிங்கள இளைஞர், ''இந்த பாரிய மனிதப் புதைகுழியில் நூற்றுக்கணக்கான உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் பல பாடசாலைப் பிள்ளைகள், சிறுவர்கள். இவற்றைப் பார்த்துக்கொண்டு எம்மால் சும்மா இருக்க முடியவில்லை. இதற்கு நீதி வேண்டும். எம்மாலான ஆதரவை இவ்வாறான போராட்டங்களுக்கு வழங்கவேண்டும். சில சிங்கள இனவாதிகளாலேயே இவ்வாறான படுகொலைகள் நிகழ்ந்தன. எனவே ஒரு சிங்கள இனத்தவனாக இந்த அநீதிக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக குரல்கொடுக்கவே நான் இங்குவந்துள்ளேன்.'' என்றார்

லஹிரு வீரசேகர

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, லஹிரு வீரசேகர

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மக்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்துக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதில் கலந்துகொள்ளும் தார்மீக கடமை தமக்கு உள்ளதாகவும், கடந்த 13 ஆம் திகதி நீதிமன்ற அனுமதியுடன் தாம் செம்மணி புதைகுழிக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும் தெரிவித்தார்.

''இந்த படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையும், உலகநாடுகளின் தலையீடுகளுடன் கூடிய இலங்கை அரசாங்கம் மீது நீதியான விசாரணைகளுக்கு அழுத்தங்களும் பிரயோகிக்க வேண்டும். கிருஷாந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ, இந்த செம்மணிப் பகுதிக்கு நேரில் கொண்டுவரப்பட்டு, மக்கள் கொன்று புதைக்கப்பட்ட அனைத்து இடங்களும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து விசாரணை நடத்தப்படவேண்டும்'' என அவர் வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு