'போரை நிறுத்தியதாக கூறிய டிரம்புக்கு மறுப்பு தெரிவிக்காதது ஏன்?' - கனிமொழி
பஹல்காம் தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் நாளாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "பயங்கரவாதத்தால் இறப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை, அவர்களின் வம்சமே பாதிக்கப்படுகிறது. இந்த நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு அரசுதான் பொறுப்பு. அவர்களை காப்பாற்றுவதில் இருந்து அரசு ஏன் தவறிவிட்டது? பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு புலனாய்வு அமைப்புகள் என்ன செய்துகொண்டிருந்தன என்பதை அறிய விரும்புகிறேன்." என தெரிவித்தார்.
எந்த விதமான பாதுகாப்பு இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என கனிமொழி கேள்வியெழுப்பினார். பஹல்காம் தாக்குதலால் அங்கு சுற்றுலாவை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய கனிமொழி, "இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் டிரம்ப். அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்தை இந்தியா நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்கள் வெளியுறவு கொள்கையா? பாகிஸ்தான் நிலைப்பாட்டுக்குகூட 2 நாடுகள் ஆதரவு தெரிவித்துவிட்டன. ஆனால் இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவின் அண்டைநாடு கூட ஆதரவு தெரிவிக்கவில்லை; இந்தியாவுக்கு ஒரு நாடுகூட நண்பர் இல்லையா?" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



