நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் - தமிழ்நாட்டில் என்ன நடந்தது?
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
கொல்கத்தா சம்பவத்துக்கு நீதி கேட்டும், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் தேசிய மருத்துவர் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரக் கோரியும் இந்திய மருத்துவர் சங்கம், மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம், கன்னியாகுமரி, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. கிண்டி பல்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் போராட்டம் நடந்தது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த போராட்டத்தில், மாணவி மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என மாணவர்கள் கோஷமிட்டனர்.
கொல்கத்தா சம்பவத்தை தேசிய நிகழ்வாக பார்க்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் சென்னையிலும் நடக்கலாம் எனவே மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
மாணவர்களின் போராட்டத்தால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



