You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மணிப்பூர் சென்ற பிரதமர் மோதி; உள்ளூர் மக்கள் என்ன கூறுகிறார்கள்?
கடந்த 2023-ல் மணிப்பூரில் ஏற்பட்ட கொடிய வன்முறைக்குப் பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோதி முதல்முறையாக சனிக்கிழமையான இன்று அங்கு சென்றார். அங்கு பல திட்டங்களுக்கு நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார். நரேந்திர மோதியின் இந்த பயணத்தில் நடந்தது என்ன? உள்ளூர் மக்கள் அவரது வருகையை எப்படி பார்க்கின்றனர்?. இந்த காணொளியில் பார்க்கலாம்.
ஐந்து மாநிலங்களுக்கான தனது மூன்று நாள் பயணத்தின் ஒருபகுதியாக நரேந்திர மோதி மணிப்பூர் சென்றார். வன்முறைக்கு பிறகு முதல்முறையாக அங்கு செல்வதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மணிப்பூரில் மோதிக்கு வழிநெடுக தேசிய கொடியுடன் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் மக்கள் மற்றும் குழந்தைகளுடன் பிரதமர் மோதி உரையாடினார்.
பின்னர், மணிப்பூர் நகர்ப்புற சாலைகள், வடிகால் மற்றும் சொத்து மேலாண்மை திட்டம் என ரூ.7,300 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், எந்தவொரு பிராந்தியத்திலும் வளர்ச்சிக்கு அமைதி முக்கியம். கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் பல மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளன. மக்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அனைத்து குழுக்களும் தங்கள் கனவுகளை நனவாக்கவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் அமைதிப் பாதையில் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். நான் உங்கள் பக்கம் நிற்பதாக உறுதியளிக்கிறேன். இந்திய அரசு மணிப்பூர் மக்களுடன் நிற்கிறது என கூறினார்.
அதே நேரம் பிரதமர் மோதியின் இந்த மணிப்பூர் பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்த போதிலும், இந்தியப் பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். இரக்கம் வெளிப்படையாகத் தோல்வியடைந்துள்ளது, ஆனால் 2027 தேர்தல் ஏற்பாடுகள் அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளன. என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, 2 வருடங்களுக்குப் பிறகு அவர் அங்கு செல்ல முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் நீண்ட காலத்திற்கு முன்பே அங்கு சென்றிருக்க வேண்டும். அங்கு நடந்து கொண்டிருப்பதை இவ்வளவு காலமாக நடக்க அனுமதித்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என கூறினார்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் கூறும் போது, பிரதமர் மோதி அங்கு செல்ல அதிக காலம் எடுத்துக் கொண்டார். மணிப்பூர் பிரச்னை நீண்ட காலமாக நடந்து வருவதால், விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு