கனடா - இந்தியா பதற்றம்: ஜஸ்டின் ட்ரூடோ என்ன பேசினார்? இந்திய அரசின் பதில் என்ன?
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அது இந்தியாவின் ‘மிகப்பெரிய தவறு’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தத் தவற்றை கனடாவால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா மண்ணில் இந்திய எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், மற்றும் பிற வன்முறைச் செயல்களில் இந்தியா ஈடுபட்டதாகக் கனடா அதிகாரிகள் குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ட்ரூடோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ‘அபாண்டமானவை’ என்று கூறியிருக்கும் இந்தியா, அவற்றை நிராகரித்திருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காகக் கனடாவின் சீக்கியச் சமூகத்தை மகிழ்விக்க ட்ரூடோ முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடா பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்தக் கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



