You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா? இந்திய விமானப்படை பதில்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் இன்று (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தியிடம் இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,"நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் 'ஆம்' பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் 'ஆம்'.'' என்றார்
மேலும் அவர், ''இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றார்
''என்னால் சொல்ல முடிவது இதுதான்,'நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்'. மேலும் 'நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பினர்'' என்று கூறினார் ஏ.கே.பார்தி.