முடிவுக்கு வந்த அமெரிக்க அரசு முடக்கம் - டிரம்புக்கு ஆறுதல் கிடைத்தாலும் சவால் தொடருமா?

    • எழுதியவர், ஆண்டனி ஸுர்கர்
    • பதவி, வட அமெரிக்க செய்தியாளர், வாஷிங்டன்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கம் 43 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க அரசு ஊழியர்கள் மீண்டும் சம்பளம் பெறத் தொடங்குவார்கள். தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு சேவைகள் மீண்டும் தொடங்கும்.

அனைத்தும் அமைதியான பிறகு, நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட மை காய்ந்த பிறகு, இந்தச் சாதனை படைத்த அரசு முடக்கம் என்ன சாதித்தது? அதன் விலை என்ன?

செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்குத் தற்காலிகமாக நிதியளிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததன் மூலம் முடக்கத்தைத் தூண்ட முடிந்தது.

ஆண்டின் இறுதியில் காலாவதியாகவிருந்த குறைந்த வருமானம் உடைய அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டு மானியங்களை நீட்டிக்க குடியரசுக் கட்சியினர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஒரு நிபந்தனையை விதித்தனர்.

அரசாங்கத்தை மீண்டும் செயல்பட வைக்க ஒரு சில ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை, கட்சி ஒழுங்கை மீறி வாக்களித்த பின்னர், மானியங்கள் குறித்து செனட்டில் வாக்கெடுப்பு பற்றிய வாக்குறுதி மட்டுமே கிடைத்தது. ஆனால் குடியரசுக் கட்சியின் ஆதரவோ அல்லது பிரதிநிதிகள் சபையில் அவசியமான வாக்கெடுப்பு குறித்தோ எந்த வாக்குறுதியும் கிடைக்கவில்லை.

இதனால், கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர்.

கோபமடைந்த ஒரு தரப்பு

நிதி மசோதாவுக்கு வாக்களிக்காத ஜனநாயகக் கட்சி செனட் சபை தலைவர் சக் ஷூமர் மீது, இந்த அரசை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு ரகசியமாக உடந்தையாக இருந்தார் அல்லது திறமையற்றவராக இருந்தார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இடைக்காலத் தேர்தல்களில் கிடைத்த வெற்றி தங்களுக்குச் சாதகமாக இருந்தபோதிலும் தங்கள் கட்சி சரணடைந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். இந்த முடக்கத்தின் மூலமாகச் செய்யப்பட்ட தியாகங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசோம் போன்ற பிரதான ஜனநாயகக் கட்சியினர்கூட முடக்க ஒப்பந்தத்தை "பரிதாபகரமானது" மற்றும் "சரணாகதி" என்று அழைத்தனர்.

நியூசோம் 2028இல் அதிபராக வேண்டுமென்ற லட்சியங்களைக் கொண்டவர் என்பதால் கட்சியினரின் மனநிலையை அறிய அவர் ஒரு நல்ல அளவுகோலாக இருக்கலாம். அவர் ஜோ பைடனின் விசுவாசமான ஆதரவாளராக இருந்தார். மேலும் டிரம்புக்கு எதிராக பைடனின் விவாத செயல்திறன் மிக மோசமாக இருந்தபோதும் அப்போதைய அதிபருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வந்தார்.

அவர் கோபமாக இருந்தால், அது ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு நல்ல அறிகுறி அல்ல.

டிரம்ப் மனநிலை என்ன?

டிரம்பை பொறுத்தவரை, செனட் முட்டுக்கட்டை ஞாயிற்றுக்கிழமை உடைந்ததில் இருந்து, அவரது மனநிலை எச்சரிக்கை நிறைந்த நம்பிக்கையில் இருந்து கொண்டாட்டத்தை நோக்கித் திரும்பியுள்ளது.

செவ்வாய்க் கிழமையன்று, அவர் நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அரசாங்கத்தை மீண்டும் இயக்க வாக்களித்ததை "மிகப்பெரிய வெற்றி" என்று அழைத்தார்.

"நாங்கள் எங்கள் நாட்டைத் திறந்து வைக்கிறோம். அது ஒருபோதும் மூடப்பட்டிருக்கவே கூடாது," என்று வீரர் தின நினைவேந்தலில் கூறினார்.

டிரம்ப், ஷூமர் மீதான ஜனநாயகக் கட்சியின் கோபத்தை உணர்ந்து, திங்கள் கிழமை இரவு ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலின்போது அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

"குடியரசுக் கட்சியை உடைக்க முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் குடியரசுக் கட்சியினர் அவரை உடைத்தனர்," என்று ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவரைப் பற்றி டிரம்ப் கூறினார்.

டிரம்ப் சில நேரங்களில் பின்வாங்குவது போலத் தோன்றிய போதும், அரசாங்கத்தை மீண்டும் இயக்க இருந்த முட்டுக்கட்டையை அகற்ற மறுத்ததற்காக, அவர் கடந்த வாரம் செனட் குடியரசுக் கட்சியினரைக் கண்டித்தார். அவர் இறுதியில், குறிப்பிடத்தக்க சலுகைகள் எதையும் வழங்காமல் அரசு முடக்கத்தில் இருந்து வெளியே வந்தார்.

கடந்த 40 நாட்களில் கருத்துக் கணிப்புகளில் அவரது எண்கள் குறைந்து இருந்தாலும், குடியரசுக் கட்சியினர் இடைக்காலத் தேர்தல்களை எதிர்கொள்ள இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.

அடுத்து என்ன?

முடக்கம் முடிவடைந்தவுடன், நாடாளுமன்றம் அதன் வழக்கமான நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்பும். பிரதிநிதிகள் சபை ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயனுள்ள செயல்பாடில்லாமல் இருந்தாலும், அடுத்த ஆண்டு தேர்தல் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு சில முக்கிய சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று குடியரசுக் கட்சியினர் இன்னும் நம்புகிறார்கள்.

முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் சில அரசுத் துறைகளுக்கு செப்டம்பர் வரை நிதியளிக்கப்பட்டாலும், மற்றொரு முடக்கத்தைத் தவிர்க்க ஜனவரி மாத இறுதிக்குள் மீதமுள்ள அரசாங்கத்திற்கான செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தங்கள் காயங்களை ஆற்றி வரும் ஜனநாயகக் கட்சியினர், மீண்டும் மோதுவதற்கான ஒரு வாய்ப்புக்காக ஏங்கலாம்.

இதற்கிடையில், அவர்கள் எழுப்பிய சுகாதார மானியங்கள் பிரச்னை, இந்த வருட இறுதியில் தங்கள் காப்பீட்டுச் செலவுகள் இரு மடங்கு அல்லது மும்மடங்காக அதிகரிப்பதைக் காணப் போகும் கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒரு கவலையாக மாறக்கூடும்.

அத்தகைய வாக்காளர் வலியை புறக்கணித்தால் குடியரசுக் கட்சியினர் தங்கள் சொந்த அரசியல் ஆபத்தை எதிர்கொள்வார்கள். மேலும் அது மட்டுமே டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் எதிர்நோக்கியிருக்கும் ஒரே ஆபத்து அல்ல.

பிரதிநிதிகள் சபையில் அரசுக்கு நிதியளிக்கும் வாக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய நாளில், சமீபத்தில் மரணமடைந்த தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பற்றிப் பேசுவதிலேயே அதிக நேரம் சென்றது.

புதன்கிழமை பிற்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அடெலிடா கிரிஜால்வா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மேலும் எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் வெளியிட நீதித் துறைக்கு உத்தரவிட சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரும் மனுவில் 218வது நபராக, இறுதி நபராக கையெழுத்திட்டார்.

தனது அரசுக்கு நிதி பெறுவதில் பெற்ற வெற்றி மறைக்கப்படுவதாகத் தனது ட்ரூத் சோஷியல் இணையதளத்தில் டிரம்ப் புகார் கூற இதுவே போதுமானதாக இருந்தது.

"முடக்கத்திலும், வேறு பல விஷயங்களிலும் அவர்கள் எவ்வளவு மோசமாகச் செயல்பட்டார்கள் என்பதிலிருந்து திசைதிருப்ப எதையும் செய்யத் துணியும் ஜனநாயகக் கட்சியினர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் புரளியை மீண்டும் கொண்டு வர முயல்கின்றனர்," என்று அவர் எழுதினார்.

சிறப்பாகத் திட்டமிடப்பட்ட திட்டங்கள் மற்றும் அரசியல் உத்திகள் ஒரு நொடியில் தடம் புரளக்கூடும் என்பதற்கான மிகத் தெளிவான நினைவூட்டலாக இது உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு