வெனிசுவேலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

வெனிசுவேலாவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பட மூலாதாரம், Juan Barreto/AFP via Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 அளவாக இருந்தது, இரண்டாவது 7.5 அளவாக இருந்தது.

நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச்சேதமும் பரவலான அழிவும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின்படி (United States Geological Survey), உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பு 44% ஆக உள்ளது.

வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த உரையின்போது அவருடன் உள்துறை அமைச்சரும், தேசிய அவையின் தலைவரும் அவரது சகோதரருமான ஜார்ஜ் ரோட்ரிக்ஸும் உடனிருந்தனர். நிவாரண மற்றும் மீட்புப் பணிகளைக் கண்காணிக்க அதிபர் ஒரு ஜெனரலுக்குப் பொறுப்பு வழங்கியுள்ளார்.

ரோட்ரிக்ஸ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடைக்காலமாக நாட்டிற்குத் தலைமை தாங்கி வருகிறார். தனது உரையில், அவர் முதலில் வெனிசுவேலா மக்களிடம் ஒற்றுமையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நிலநடுக்கத்தில் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்த மக்களுக்கு அவர் தனது இரங்கலையும் தெரிவித்தார், இருப்பினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அவர் குறிப்பிடவில்லை.

ரோட்ரிக்ஸின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக வெனிசுவேலாவின் முக்கிய சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து வெளிவந்த ஆரம்பகட்ட வீடியோக்களில் மக்கள் பாதைகளில் ஓடுவதைக் காண முடிந்தது, அதே நேரத்தில் நிலநடுக்க அதிர்வுகளின் போது கூரைகளில் இருந்து பெரிய அளவில் தூசி துகள்கள் கீழே விழுவதைக் காண முடிந்தது.

இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ மக்களைத் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது வெனிசுவேலாவில் தேசிய விடுமுறை கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது, எனவே பல மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்திருக்கலாம். நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி மாலை 6:04 மணிக்கு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம்

நிலநடுக்கத்தின் மையம் கராகஸுக்கு மேற்கே அமைந்துள்ள மொண்டால்பான் பகுதியில் இருந்தது.

வெனிசுவேலாவின் பல மாநிலங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.

நாட்டின் பல மாநிலங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

"அனைத்து அறிகுறிகளும் இதன் தீவிரம் ஏழை விட மிக அதிகமாக இருந்ததைக் காட்டுகின்றன" என அவர் விடிவியுடன் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தார்.

"இதன் அதிர்வுகள் ட்ருஜிலோ, யாராகுய், கராபோபோ, அராகுவா, மிராண்டா, கராகஸ் மற்றும் லா குவைராவில் தீவிரமாக உணரப்பட்டன" என்றார்.

தலைநகர் கராகஸில் உள்ள பாலோஸ் கிராண்டேஸ் மற்றும் அல்தாமிரா பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொலம்பியா வரை உணரப்பட்ட அதிர்வுகள்

வெனிசுவேலாவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பட மூலாதாரம், Manaure QUINTERO/AFP via Getty Images

பிபிசியின் வட அமெரிக்கச் செய்தியாளர் வில் கிராண்ட் கூற்றுப்படி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் சில கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதையும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதையும், சில இடிந்து விழுந்துள்ளதையும் காண முடிகிறது.

அதே நேரத்தில், நில அதிர்வுகளின் பயம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குத் திரும்பவில்லை.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொலம்பியாவின் தலைநகரான பொகோடா வரை உணரப்பட்டன.

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மதிப்பீடு தொடர்ந்து நடந்து வருவதால், சேதத்தின் உண்மையான அளவு இன்னும் முழுமையாகத் தெளிவாகத் தெரியவில்லை.

வெனிசுவேலாவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பட மூலாதாரம், Juan Barreto/AFP via Getty Images

படக்குறிப்பு, தகர்க்கப்பட்ட கட்டடத்தின் இடிபாடுகளில் உயிருடன் இருப்பவர்களைத் தேடும் மீட்புக் குழுவினர்
வெனிசுவேலாவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடும் மக்கள்
வெனிசுவேலாவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளிக்கு வருமாறு மக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது
வெனிசுவேலாவில் பயங்கர நிலநடுக்கம், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

பட மூலாதாரம், Manaure QUINTERO/AFP via Getty Images

படக்குறிப்பு, நில அதிர்வுகளின் பயம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குத் திரும்பவில்லை

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு