நரிக்குறவர் இன மக்களுக்கு திரையரங்கில் அனுமதி மறுப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், SONY MUSIC SOUTH/YOUTUBE
”நடிகர் சிம்புவின் 'பத்து தல' திரைப்படத்தை காண்பதற்காக, ரோகிணி திரையரங்கம் சென்ற நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.”
ஒபிலி கிருஷ்ணனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் `பத்து தல`. பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு, 'பத்து தல' படத்தை காண வந்த நரிக்குறவர் இன மக்களுக்கு, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு திரையரங்கிற்குள் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ரோகிணி திரையரங்க நிர்வாகம், அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
"டிக்கெட் இருந்தும் அனுமதி மறுப்பு"

பட மூலாதாரம், FACEBOOK
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு, ’பத்து தல’ படத்தை காண்பதற்காக நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், தங்களுடைய குழந்தைகளுடன் சென்றிருக்கின்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுப்புவதற்கு ரோகிணி திரையரங்கின் டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்துள்ளார். இந்த நிகழ்வை காணொளியாக எடுத்த இளைஞர் ஒருவர், அதனை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார்.
அந்த காணொளியில், தங்களை உள்ளே விடுமாறு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் முறையிடுகிறார். ஆனால் அங்கே நிற்கும் டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுக்கிறார்.
காணொளி எடுக்கும் இளைஞர், "அவர்களிடம் டிக்கெட் இருக்கிறது, ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்?" என்று கேள்வியெழுப்புகிறார். ஆனால் அந்த திரையரங்கைச் சேர்ந்தவர்கள் அதற்கு பதிலளிக்க மறுக்கின்றனர்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பதிவானதையடுத்து, அம்மக்களுக்கு நடந்திருப்பது ஒரு தீண்டாமை என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டன.
இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையாக எழுப்பப்பட்டதை தொடர்ந்து, அம்மக்களுக்கு தற்போது திரையரங்கிற்குள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை வெளியிட்ட ரோகிணி திரையரங்கம்

பட மூலாதாரம், ROHINI SILVER SCREENS/TWITTER
இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்து ரோகிணி திரையரங்க நிர்வாகம் சார்பில் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “எங்கள் திரையரங்க வளாகத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து நாங்கள் கவனத்தில் எடுத்திருகிறோம். சிலர் தங்களது குழந்தைகளுடன் 'பத்து தல' படத்தை காண்பதற்காக வந்திருக்கின்றனர். இந்த திரைப்படம் U/A சான்றிதழை பெற்றிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இப்படத்தை காண்பதற்கு விதிமுறைகள் இருக்கின்றன. அதனால்தான் 2,6, 8, 10 ஆகிய வயதுகளைச் சேர்ந்த குழந்தைகளுடன் வந்திருந்த அவர்களுக்கு, எங்களது டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி முழுமையாக தெரியாமலும், சரியான புரிதலும் இல்லாமலும், வெறுப்புணர்வுடன் அனுமதி மறுக்கப்பட்டதாக சிலர் வேறு கோணத்தில் பிரச்னையை அணுகியுள்ளனர். இந்த பிரச்னையின் தீவிரத்தை குறைக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்கவும், தற்போது அதே மக்கள் திரைப்படத்தை காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். படம் துவங்குவதற்கு முன்பாக சரியான நேரத்தில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ரோகிணி திரையரங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் கீழ், நரிக்குறவர் மக்கள் படம் பார்த்துகொண்டிருப்பது போன்ற காணொளியையும் அவர்கள் இணைத்துள்ளனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
சமூக ஊடகங்களில் கிளம்பிய எதிர்ப்பு :
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சர்ச்சைக்குப் பிறகு அவர்கள் திரையரங்கிற்குள் அனுமதியளிக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு நிகழ்ந்தது அநீதியான செயல் என்று சமூக ஊடக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், “அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது , எனினும் முதலில் அனுமதிக்க மறுத்தததை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது” என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் "அவர்களுக்கு அனுமதி மறுத்தவர்கள் மனிதநேயம் இல்லாதவர்கள்" என ட்விட்டர் பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
”நீங்கள் அவர்களிடம் பாகுபாட்டுடன் நடந்துகொண்டீர்கள் என்பதை ஒப்புகொள்ளுங்கள். அவர்களின் பணத்தை திரும்ப கொடுத்து, அவர்களிடம் முறையாக மன்னிப்பு கேளுங்கள். அதேபோல் உங்களது ஊழியர்களுக்கு நிறம், சாதி, பாலினம் ஆகியவற்றில் பாகுபாட்டுடன் நடந்துகொள்ள கூடாது என்று பாடம் எடுங்கள்” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




























