மோதி - டிரம்ப் சந்திப்பு: அதானி குறித்து பேசப்பட்டதா? மோதியின் பதில் என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
மேலும், அதானி நிறுவனம் மீது அமெரிக்காவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் மோதி பதிலளித்தார்.
"அதானி குறித்து பேசுனீர்களா? பிரதமர் மோதி அவர்களே அந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினீர்களா?" என்று பிரதமர் மோதியிடம் அமெரிக்காவில் இரு நாட்டு தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் என்னவென்றால் 'உலகமே ஒரு குடும்பம்' என்பதுதான். நாங்கள் முழு உலகத்தையும் ஒரே குடும்பமாக கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியனையும் 'என்னுடையவன்' என்று நான் கருதுகிறேன். இரண்டாவது விஷயம், இப்படிப்பட்ட ஒரு தனிப்பட்ட விஷயத்துக்காக இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பதில்லை, அமர்ந்து பேசுவதில்லை", என்றார்.
தன் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் அதனை மறைத்ததாகவும் அதானி மீது கடந்த நவம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்டது.
எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



