அமெரிக்கா - இரான் ஒப்பந்தத்தின் 5-வது பிரிவு பதற்றத்திற்கு காரணமாக கூறப்படுவது ஏன்?

இரான்-அமெரிக்க ஒப்பந்தம், ஹோர்மூஸ் நீரிணை, எண்ணெய் வர்த்தகம், கடல்வழி போக்குவரத்து

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஜூன் 17 அன்று 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், சமீபத்திய நாட்களில், அமெரிக்காவும் இரானும் ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

ஆயினும், சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இரானும் தற்போதைக்கு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்தத் தகவலை, ஓர் அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை வழியாக இனி கப்பல்கள் தடையின்றி பயணிக்க முடியும் என்று அந்த அமெரிக்க அதிகாரி, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் உறுதிப்படுத்தினார்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல்களை நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து இரான் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அந்த 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரான்-அமெரிக்க ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை, எண்ணெய் வர்த்தகம், கடல்வழி போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டு விவகாரம், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உள்ள மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக இருந்து வருகிறது
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த தகவலை அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இரு தரப்பின் அர்ப்பணிப்பும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் இரான் மீதான அமெரிக்காவின் தடைகளை நீக்குவது பற்றிய குறிப்புகளும் இதில் அடங்கும்.

இருப்பினும், ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவு மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுவதால், அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவின் சாராம்சம்:

"இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இரான் இஸ்லாமிய குடியரசு தன் தரப்பில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, 60 நாட்களுக்கு வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழிவகை செய்யும். இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இந்த ஏற்பாடு பாரசீக வளைகுடாவிலிருந்து ஓமன் வளைகுடா வரை மற்றும் அங்கிருந்து திரும்பி வரும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும்."

"வணிகக் கப்பல்களின் போக்குவரத்து உடனடியாகத் தொடங்கப்படும். அதே நேரத்தில், மூலோபாய மற்றும் ராணுவத் தடைகளை நீக்குவது மற்றும் கடல்சார் கண்ணிவெடிகளை இரான் அகற்ற வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முழுமையான ஏற்பாடும் 30 நாட்களுக்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்."

"ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்கால நிர்வாகம் மற்றும் கடல்சார் சேவைகளுக்கான கட்டமைப்பைத் தீர்மானிப்பதற்காக, ஓமனுடன் இரான் இஸ்லாமிய குடியரசு பேச்சுவார்த்தை நடத்தும்."

"இவ்விவகாரம் குறித்து பாரசீக வளைகுடாவை ஒட்டியுள்ள பிற நாடுகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். இந்த முழு செயல்முறையும் சர்வதேசச் சட்டம் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையை ஒட்டியுள்ள நாடுகளின் இறையாண்மை உரிமைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட வேண்டும்."

இரான்-அமெரிக்க ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை, எண்ணெய் வர்த்தகம், கடல்வழி போக்குவரத்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை 30 நாட்களுக்கு இரானின் கண்காணிப்பில் இருக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்

ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டுப் பிரச்னை, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியத் தடைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்த கடல்வழிப் பாதையைக் கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது குறித்தும் இரான் பேசியுள்ளது. ஆனால், தங்கள் ஏற்றுமதியில் கணிசமான பகுதி இந்த கடல்வழிப் பாதை வழியாகவே நடைபெறுவதால், அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளன.

சமீபத்தில் இராக் தலைநகர் பாக்தாத்திற்குப் பயணம் மேற்கொண்டிருந்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், "அடுத்த 30 நாட்களுக்கு ஹோர்மூஸ் நீரிணை முழுமையாக இரானின் கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின் கீழ் இருக்கும். அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்ட பிறகு, இந்த கடல்வழிப் பாதையின் முழுத் திறனும் மீட்டெடுக்கப்படும். இந்த இலக்கை அடைவதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

"இந்த பொறுப்பு இரான் இஸ்லாமிய குடியரசுக்கு உரியது. இந்த விஷயத்தில் வேறு எந்தவொரு தரப்பிற்கோ அல்லது நாட்டிற்கோ எவ்விதப் பங்கும் இல்லை" என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த விஷயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு நாடு இதில் தலையிட்டாலோ அல்லது ஒருதலைபட்சமான நடவடிக்கையை எடுத்தாலோ, நிலைமை மோசமடைவதுடன், ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதிலும் கூடுதல் தாமதம் ஏற்படும்" என்று தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணை, அமெரிக்கா, இரான்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணை அருகே இருக்கும் சரக்கு கப்பல்கள் (கோப்புப் படம்)

புதிய தாக்குதல்களால் போர் நிறுத்தத்திற்கு ஆபத்து

சமீபநாட்களில் இரு தரப்பிலும் நடத்தப்பட்ட புதிய தாக்குதல்களால் போர்நிறுத்தம் ஆபத்தில் சிக்கியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையில் இரான் ஏவிய ஏவுகணை ஒன்று சரக்குக் கப்பல் மீது மோதியதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பதற்றம் மீண்டும் அதிகரித்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. வணிகக் கப்பல்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் "ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு" பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் தெரிவித்தது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சனிக்கிழமை குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது இரான் தாக்குதல்களை நடத்தியது.

இந்தத் தாக்குதல்களில் எதுவும் அதன் இலக்கை அடையவில்லை என்றும், எந்தவொரு உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது.

ஹோர்மூஸ் நீரிணை என்பது உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான மிக முக்கியமான கடல்வழிப் பாதையாகும். பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்த கடல்வழிப் பாதையை இரான் தற்காலிகமாக மூடியது.

நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் நோக்கில், வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே உத்தேச உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட வைப்பதில் அமெரிக்கா மத்தியஸ்தராகச் செயல்பட்டது.

இருப்பினும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா அமைப்பிற்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால், இந்த போர்நிறுத்தமும் பலமுறை ஆபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள லெபனானின் ஹெஸ்பொலா அமைப்பின் தலைவர், லெபனானின் இறையாண்மையை சீர்குலைப்பதாக பெய்ரூட் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார்.

ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா அமைப்பால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 200 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

அந்தச் சுரங்கப்பாதைக்குள் பெருமளவிலான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோரின் கூட்டு அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிற்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு பெரிய போர்நிறுத்த ஒப்பந்தம் சாத்தியமாக வேண்டுமெனில், லெபனானில் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று இரான் கூறுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு