நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் உறுப்பினர்களின் மைக்கை அணைக்க முடியுமா? அது எப்படி இயக்கப்படுகிறது?

பட மூலாதாரம், ANI
18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரிலேயே எதிர்க்கட்சிகளுக்கும் ஆளும் கட்சிக்கும் இடையே வார்த்தைப் போர் நடப்பதை பார்க்க முடிகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ’ஒருபக்க சார்புடையவர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஓம் பிர்லா மறுத்திருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள், மக்களவையில் பேசுவதற்காக உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மைக்ரோஃபோன் தொடர்பானவை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், ANI
உண்மையில் என்ன நடந்தது?
வெள்ளிக்கிழமை (ஜூன் 28), காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவையில் பேசிக் கொண்டிருந்தபோது அவரது மைக் அணைந்துவிட்டது. மைக்கை ஆன் செய்யுமாறு மக்களவை சபாநாயகரிடம் ராகுல் வேண்டுகோள் விடுத்தார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை விடுத்திருந்தார்.
"நாட்டின் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும்கட்சி உங்களுடன் இருக்கிறது என்ற செய்தியை நாட்டின் மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு விவாதத்தை நடத்த வேண்டும்" என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
ராகுலின் கோரிக்கைக்கு பதிலளித்த ஓம் பிர்லா, “சபை விதிகளை பின்பற்றி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பிறகு விவாதம் நடத்த பரிந்துரைப்போம்” என்றார். இதற்கிடையில் ராகுல் காந்தியின் மைக் அணைந்துவிட்டது. அதை சுவிட்ச் ஆன் செய்யுமாறு அவர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி சமூக வலைதளம் 'எக்ஸ்' மூலம் பகிர்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மைக்கை அணைப்பது இளைஞர்களின் குரலை நசுக்கும் சதி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

பட மூலாதாரம், ANI
இதற்கிடையில், “மைக்ரோஃபோனை அணைக்க என்னிடம் எந்த பட்டனும் இல்லை. இங்குள்ள அமைப்பும் முன்பு இருந்ததைப் போலவே உள்ளது. மைக்ரோஃபோனை அணைக்க என்னிடம் எந்த வசதியும் இல்லை,” என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
மறுபுறம் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் இந்த விவகாரம் தொடர்பாக கோபமடைந்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் அவர், "தயவுசெய்து உங்களை கேட்டுக்கொள்கிறேன்..." என்று கூறிக்கொண்டிருந்தார். அதே சமயத்தில், காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி இடையில் ஏதோ பேசினார்.
இதனால் கோபமடைந்த தன்கர், ”நான் பேசிக் கொண்டிருக்கும் போது யாருடைய மைக்கும் ஆன் ஆகாது. உங்களுக்கு இது தெரியும். உங்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது” என்று கூறினார்.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக மக்களவையில் மைக்ரோஃபோன் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, உறுப்பினர்களின் மைக்ரோஃபோனை சபாநாயகர் அணைக்க முடியுமா, சபையின் கட்டமைப்பு என்ன என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பட மூலாதாரம், ANI
சபையின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு எம்.பி.க்கும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒரு குறிப்பிட்ட இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி.யின் மேஜையில் மைக் வைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மக்களவை செயலகம் ஒரு தகவல் புத்தகத்தை வெளியிட்டது. இதன்படி ஒவ்வொரு எம்.பி.க்கும் மைக் மற்றும் சுவிட்ச் போர்டு வழங்கப்படுகிறது. இந்த சுவிட்ச் போர்டில் வெவ்வேறு வண்ண பொத்தான்கள் உள்ளன. ஒரு எம்.பி. பேச விரும்பினால், அவர் சாம்பல் பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அவருக்கு முன்னால் இருக்கும் மைக் ஆக்டிவேட் ஆகி சிவப்பு பட்டன் ஆன் ஆகும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு அறை உள்ளது. இந்த அறையில் ஒலி தொழில்நுட்ப வல்லுநர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் சபை நடவடிக்கைகளை பதிவு செய்கிறார்கள். இந்த அறையில் ஒரு மின்னணு பலகை நிறுவப்பட்டுள்ளது. அதில் எல்லா உறுப்பினர்களின் இருக்கை எண்கள் எழுதப்பட்டிருக்கும்.
மைக்ரோஃபோன்கள் இங்கிருந்துதான் இயக்கப்படுகின்றன அல்லது அணைக்கப்படுகின்றன.
மக்களவையில் இந்த செயல்முறை மக்களவை செயலகத்தாலும், மாநிலங்களவையில், மாநிலங்களவை செயலகத்தாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

பட மூலாதாரம், SANSAD TV
எம்.பி.க்களின் மைக்கை அணைக்க சபாநாயகரால் முடியுமா?
சபாநாயகர் மைக்கை அணைக்க உத்தரவிடலாம். இதைச்செய்ய விதிகள் அனுமதிக்கின்றன. நேரடியாக மைக்கை முடக்கும் கட்டுப்பாடுகள் அவரிடம் இல்லை என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகள் குறித்து செய்திகள் எழுதும் மூத்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
சபை நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டால், மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.
அப்போது சபையில் உள்ள மைக்குகள் தொழில்நுட்ப வல்லுனர்களால் அணைக்கப்படுகின்றன.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு முந்தைய 'zero hour'இன் போது ஒவ்வொரு உறுப்பினருக்கும் மூன்று நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. ஒரு உறுப்பினரின் நேரம் முடிந்ததும் அவர்களின் மைக் தானாகவே ஒலியடக்கப்பட்டுவிடும்.
மசோதா முதலியவற்றை விவாதிக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு கட்சிக்கும் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. சபாநாயகர் கால அட்டவணையைப் பின்பற்றி ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மைக் தொடர்பான முந்தைய குற்றச்சாட்டுகள்
மைக் அணைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், ராஜ்யசபாவில் தான் பேசிய போது மைக் அணைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியிருந்தார்.
“இது எனது உரிமைகளை மீறுவதாகும். நான் அவமதிக்கப்பட்டேன். எனது சுயமரியாதைக்கு சவால் விடப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தல்களின்படி இந்த சபை இயங்குமானால் அது ஜனநாயகம் அல்ல என்பது எனது கருத்து,” என்று மல்லிகார்ஜுன் கார்கே குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களின் மைக்ரோஃபோன்கள் அணைக்கப்படுவதாக தெரிவித்தார். வெளிநாட்டில் ராகுல் காந்தி தெரிவித்த இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)




























