பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்களா? பிபிசி கள ஆய்வு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்களா? பிபிசி கள ஆய்வு
பிரசுரிக்கப்பட்டது

சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது.

திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டம் பெரிய ஊடக கவனம் இன்றி 600 நாட்களைக் கடந்திருக்கிறது.

600வது நாள் போராட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று ஒப்பாரிப் போராட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் விவசாயிகள். சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பரந்தூர்.

இந்த பரந்தூர் கிராமம் உள்பட அருகில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு உத்தேசித்திருக்கிறது.

சென்னை விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் அதற்கு இணையாக ஒரு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாகவே, கிட்டத்தட்ட 80களில் இருந்தே உத்தேசிக்கப்பட்டு வந்தது. இதற்காக போரூர், ஸ்ரீபெரும்புதூர் என பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டுவந்தன. இறுதியாக தற்போது பரந்தூர் பகுதி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)