அதானிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் சீனாவின் சாங் சுங்-லிங் யார்?

பட மூலாதாரம், Getty Images
அதானி குழுமத்தின் நடவடிக்கைகளில் சீன நாட்டவர் ஒருவருக்கு பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது' என்றும் ஏதேனும் முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இவரை குழு சேர்த்திருக்கிறதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தை நடத்திய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டது.
"சாங் சுங்-லிங்குடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வடகொரியாவிற்கு பெட்ரோலியம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது, இது ஐக்கிய நாடுகள் சபை விதித்த தடைகளுக்கு எதிரானது. 2005 ஆம் ஆண்டில் சாங் சுங்-லிங் தனது முகவரியாக சிங்கப்பூரின் ஒரு முகவரியை அளித்தார். இது கௌதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் முகவரி,"என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.
”2014ஆம் ஆண்டு அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தின் முதல் குற்றப்பத்திரிகையில் கோதாமி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் இந்த நிறுவனத்தின் பெயர் காணாமல் போய்விட்டது. அதானியின் நெருக்கம் காரணமாகத்தான் இந்த க்ளீன் சிட் கொடுக்கப்பட்டதா?" என்று அவர் வினவினார்.
ஜனவரி 24 அன்று வெளியான அதானி குழுமம் தொடர்பான அமெரிக்க நிறுவனம் ஹிண்டன்பர்க்கின் அறிக்கையிலும் சீன குடிமகன் சாங் சுங்-லிங்கின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அதானி குழுமத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இந்த சீன குடிமகன் யார் என்ற விவாதம் வலுத்தது.
அதானி குழுமம் தனது பங்குகளின் விலைகளை மிகைப்படுத்தி, சந்தையை தன்போக்கிற்கு திருப்ப முயற்சிப்பதாக ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியது. இந்த அறிக்கை வெளியான பிறகு அதானி குழுமத்தின் பல நிறுவனங்களின் பங்குகள் வேகமாக வீழ்ச்சியடைந்தன. மேலும் கௌதம் அதானி ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தில் இருந்து கீழே சரிந்தார்.
காங்கிரஸால் குறிப்பிடப்படும் அந்த சீன நபரைப் பற்றியும், இந்த முழு சர்ச்சையில் சீனாவின் தொடர்பு பற்றியும் பார்ப்போம்.
அதானி சர்ச்சையில் சீனாவின் தொடர்பு
ஹிண்டன்பர்க் அறிக்கையில் மொத்தம் மூன்று முறை, சாங் சுங்-லிங் பற்றி சொல்லப்பட்டுள்ளது. சாங் சுங்-லிங்கை முதன்முறையாகக் குறிப்பிட்டு, மொரீஷியஸில் க்ரோமோர் என்ற ரகசிய நிறுவனம் இருப்பதாக அறிக்கை கூறுகிறது, இந்த நிறுவனத்தை அதானி பவர், 42.3 கோடி டாலர் கொடுத்து வாங்கியது.
இந்த நிறுவனத்தை சாங் சுங்-லிங் நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் உள்ள கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் உள்ளூர் முகவரியை சுங்-லிங் தனது முகவரியாக கொடுத்துள்ளார்.
சுங்-லிங்குக்கும் அதானி குழுமத்துக்கும் நீண்டகால தொடர்பு இருப்பதாகவும், அவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானிக்கு நெருக்கமானவர் என்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகிறது.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் இந்த சீன நபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது இடம் பிஎம்சி திட்டத்துடன் தொடர்புடையது. அதானி எண்டர்பிரைஸ் நிறுவனம், பிஎம்சி ப்ராஜெக்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடந்த 12 ஆண்டுகளில் 6300 கோடி ரூபாய் வழங்கியதாக அறிக்கை கூறுகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சாங் சுங்-லிங்கின் மகன். 2014 ஆம் ஆண்டில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இந்த நிறுவனத்தை 'டம்மி நிறுவனம்' என்று அழைத்தது.
ஹிண்டன்பர்க்கிற்கு அதானி குழுமத்திடம் இருந்து 413 பக்க பதில் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த நீண்ட பதிலில் சீன குடிமகன் சாங் சுங்-லிங்குடனான குழுமத்தின் உறவு குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
“ஹிண்டன்பர்க் பற்றிய செய்தி வந்ததும், அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் மூவர்ணக் கொடியின் முன் நின்று அறிக்கை வெளியிட்டார். இது இந்தியா மீதான தாக்குதல் என்று கூறப்பட்டது. ஒரு குழுமம், முழு நாடு போல முன்வைக்கப்பட்டது. அதானி அல்லது அவரது குழுமத்தைப்பற்றி நீங்கள் ஏதாவது சொன்னால், வலதுசாரிகளால் நீங்கள் தேசதுரோகியாக அறிவிக்கப்படுவீர்கள் என்பது போன்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்று அதானி குழுமம் குறித்து விரிவான செய்திகள் அளித்துள்ள பரஞ்சோய் குஹா தாகுர்தா கூறினார்.
"முதலாளித்துவத்தின் பல்வேறு வடிவங்கள் உள்ளன. க்ரோனி கேபிடலிசம் என்பது ஒரு புதிய விஷயம் அல்ல. பல தசாப்தங்களுக்கு முன்பு நட்பு காரணமாக அரசுகள் சில வணிக நிறுவனங்களின் வசதிக்காக விதிகளை உருவாக்கின. ஆனால் இப்போது ஒரு சிறிய செல்வந்தர்களின் கூட்டம் நாட்டை நடத்துகிறது. ஒரு வணிக நிறுவனத்திற்கும் அரசுக்கும் இடையிலான கோடு முடிவடையும் அமைப்புமுறை இது,” என்று அவர் குறிப்பிட்டார்.
அதானிக்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் மோதி மீது குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதிக்கும் கெளதம் அதானிக்கும் இடையேயான நெருக்கம் நீண்ட காலமாக விவாதத்தில் உள்ளது. அதானி குழுமத்தின் விரிவாக்கம் மோதி அரசுடன் இணைத்து பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், அதானி குழுமம் ஆறு பெரிய விமான நிலையங்களை உருவாக்குவதற்கான ஏலத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அது நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டராக ஆனது.
இந்த ஒப்பந்தத்தின் போது மோதி அரசு அதானி குழுமத்திற்கு முன்னுரிமை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது, ஏனெனில் இதற்கு முன் அதானி குழுமத்திற்கு விமான நிலையத்தை இயக்குதல் மற்றும் நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை. மோதி அரசு க்ரோனி கேப்பிட்டலிஸம் செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
முத்ராவில் விமான ஓடுதளத்தை இயக்குவதில் ஆரம்பித்து, நாட்டின் மிகப்பெரிய விமான நிலையத்தை உருவாக்கும் தனியார் டெவலப்பராக ஆவதற்கு அதானி குழுமத்திற்கு வெறும் 24 மாதங்களே ஆனது என்று கடந்த மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.
2019 ஆம் ஆண்டில், அகமதாபாத், லக்னெள, ஜெய்ப்பூர், மங்களூரு, குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களுக்கான ஒப்பந்தங்களை கொளதம் அதானியின் நிறுவனம் பெற்றது.
பொருளாதார விவகாரங்கள் துறையும் (நிதி அமைச்சகத்தின் துறை) மற்றும் NITI ஆயோக் அமைப்பும், ஆறு விமான நிலைய ஒப்பந்தங்களையும் அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன என்று 2021 ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
"இந்த துறையில் அனுபவம் இல்லாததால் நஷ்டம் ஏற்படலாம். இந்தத்திட்டம் மீது தாக்கம் ஏற்படுவதோடு கூடவே விமான நிலையத்தில் வழங்கப்படும் சேவைகளின் தரத்தையும் அது பாதிக்கலாம்." என்று NITI ஆயோக் கூறியது,
லண்டனில் அதானி குறித்து ராகுல் காந்தி கூறியது என்ன?
லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமம் தொடர்பாக நரேந்திர மோதி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
609 வது பெரிய பணக்காரராக இருந்த கெளதம் அதானி கடந்த 3 ஆண்டுகளில் 2 வது பெரிய பணக்காரராக மாறிவிட்டார் என்றும் பிரதமர் நரேந்திர மோதியுடன் அவருக்கு நல்ல உறவு இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்ட 5 மில்லியன் டன் லித்தியம் இருப்பு மற்றும் அதன் ஏல அறிவிப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, அவர் அதானி குழுமத்தை சுட்டிக்காட்டினார்.
"அதானி பங்கேற்கும் ஒவ்வொரு ஏலத்திலும் அவர் வெற்றி பெறுவார் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். வணிகத்தில் நுழைவதற்கு அவருக்கு அனுபவம் தேவையில்லை. அதனால் லித்தியம் இருப்பு அதானிக்கு கிடைக்கும் என்று என்னால் ஆரூடம் சொல்லமுடியும் ,” என்றார் ராகுல் காந்தி.
“அன்னிய மண்ணில் அழும் வேலையை ராகுல் காந்தி மீண்டும் செய்துள்ளார். முடிவு என்னவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். மேலும் பெகாஸிஸ் விவகாரம் அவரது மனதில் குடிகொண்டிருக்கிறது,” என்று ராகுல் காந்தி பற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்































