You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரதமர் மோதியின் கண்ணில் பயத்தை பார்த்தேன் - ராகுல் காந்தி
அதானி குறித்து தான் பேசியபோது பிரதமர் மோதியின் கண்களில் பயத்தை பார்த்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், நான் நாடாளுமன்றத்தில் முக்கிய கேள்விகளை எழுப்பியிருந்தேன். அதானி குழுமத்தில் போலி நிறுவனங்கள் மூலம் 20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதானி குழுமம் கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதால் அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை திரட்டியிருக்க முடியாது.
பின்னர் எங்கிருந்து இந்தப் பணம் வந்தது. யாருடைய பணம் இது? இந்த நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகின்றன. இந்த விவகாரத்தில் சீன நாட்டவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. யார் அந்த சீன நபர் என்று ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினேன்.
இரண்டாவதாக, பிரதமர் மோதிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்துக் கேள்வி எழுப்பினேன். உடனடியாக பாஜகவினர் அவர்களின் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டனர். எனது நாடாளுமன்ற பேச்சு நீக்கப்பட்டது. இது தொடர்பாக என் பேச்சுக்கான ஆதாரம் குறித்து சபாநாயகருக்கு விரிவாக விளக்கமளித்து கடிதம் எழுதினேன். நேரில் சந்தித்தும் விளக்கம் கேட்டேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை, எனது பேச்சு நாடாளுமன்ற குறிப்புகளில் சேர்க்கப்படவில்லை. கார்கேவுக்கும் இதுவே நடந்தது.
என்னை குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர்கள் பொய் கூறினர். அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட 20,000 கோடி ரூபாய் யாருடையது என்ற என்னுடைய கேள்வியை திசைத் திருப்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "என் அடுத்த பேச்சு குறித்து பிரதமர் மோதி அச்சம் கொள்கிறார். அதனால்தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன். அதானி குறித்து அடுத்த என்ன பேச்சு வரும் என்று அவர் அஞ்சுகிறார். அவர் கண்ணில் நான் அச்சத்தை பார்த்தேன். அதானி குறித்த அடுத்த பேச்சு நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்று அவர் எண்ணுகிறார். அதனால் முதலில் திசைத் திருப்பினார்கள், தற்போது தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். அதானிக்கும் மோதிக்கும் இடையே ஆழமான உறவு உள்ளது," என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்