காணொளி: வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் - என்ன நடக்கிறது?
வெனிசுவேலா மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு வெனிசுவேலாவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார். என்ன நடக்கிறது?
வெனிசுவேலா தலைநகரான கராகஸில் இன்று தாக்குதல் நடந்தது. ராணுவத் தளங்கள் உட்பட கராகஸில் பல இடங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் வந்தன. கராகஸில் இருந்து வெளியான காணொளிகளில் தொடர்ந்து வெடிப்புச் சத்தம் கேட்பதை பார்க்க முடிகிறது. அதே போல, சில ஹெலிகாப்டர்கள் செல்வதையும் பார்க்க முடிகிறது. இதனால் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
இதற்கு வெனிசுவேலா கண்டனம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிமவளங்களைக் கைப்பற்ற அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சி என கண்டித்த அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் தேசிய அவசர நிலையையும் அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில்,வெனிசுவேலா மற்றும் அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிபர் மதுரோவும் சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



