You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை உள்பட உலகம் முழுவதும் சந்திர கிரகணம் எப்படி தெரிந்தது?
இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர்.
பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும்.
பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது.
சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும்.
இந்திய நேரப்படி இரவு 9:57 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழ தொடங்கியது. இரவு 11:01 மணிக்கு பூமியின் நிழல் நிலவு முழுவதையும் மறைத்த்து, முழு சந்திர கிரகணம் தோன்றியது. அப்போது நிலவு செந்நிறமாக தோன்ற ஆரம்பித்தது.
இந்தக் காட்சி இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, டென்மார்க், எகிப்து, என உலகின் பல்வேறு நாடுகளில் தெரிந்தது. எனினும் லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் வானிலை காரணமாக சந்திர கிரகணத்தை காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு