பறவைகளை துல்லியமாக ஓவியம் தீட்டும் சிவக்குமார்: தமிழ் களக் கையேட்டில் இடம் பெற்ற படங்கள்

பட மூலாதாரம், Sivakumar
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
உண்மையோடு தங்கள் கற்பனை மற்றும் படைப்புணர்வைக் கலந்து வரையும் ஓவியங்கள் ஆற்றல் மிக்க கலைப்படைப்புகளாக வளரத் தொடங்கிய நிலையில், உள்ளதை உள்ளபடி வரையும் துல்லிய ஓவியங்களுக்கான மதிப்பு குறையத் தொடங்கியது.
ஆனால், அளவுகடந்த துல்லியத்தோடு அழகியல் உணர்ச்சி கொப்பளிக்கும் ஓவியங்களை வரைந்து உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஓவியர் இளையராஜா. பல்வேறு இசங்களை உள்வாங்கிக் கொண்டு வெளிப்பட்ட நவீன முறை ஓவியங்களைப் போலவே துல்லிய ஓவியங்களும் ஆற்றல்மிக்க கலைவடிவம்தான் என்பதை அவரது ஓவியங்கள் பறைசாற்றின.
இதைப் போல துல்லிய ஓவியங்களால் புகழ்பெறும் பல ஓவியர்கள் தங்களுக்கென ஒரு தனித்துவமான களத்தைத் தேர்வு செய்துகொண்டு அதிலே தனித்திறனோடு வெளிப்படுகிறார்கள். அப்படி, வழக்கத்துக்கு மாறான ஒரு களத்தில் துல்லிய ஓவியம் வரைந்துவருகிறார் திருவண்ணாமலையை சேர்ந்த ஓவியர் குமார் என்ற சிவக்குமார்.
சுமார் 20 ஆண்டுகள் முன்பு பதாகை ஓவியம் என்ற வணிக ஓவியத் தொழிலில் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் பறவைகளாலும், உயிர்ச்சூழலாலும் ஈர்க்கப்பட்டு பறவை ஆர்வலர் ஆனார். வண்ணங்களையும், வடிவங்களையும், கோடுகளையும் கூர்ந்து நோக்கும் ஓவியர்களின் பார்வை, தொடக்கத்தில் அவர் பறவைகளை உற்று நோக்குவதற்கும், பறவைகளை அடையாளம் காண்பதற்கும் உதவியாக இருந்தன.
காலம் செல்லச் செல்ல பறவைகளைப் பற்றிய அவரது அறிவு விரிவடைந்து, அவரது ஓவியத் திறனோடு கலந்து வெளிப்படத் தொடங்கியது.

பட மூலாதாரம், Siragan
திருவண்ணாமலை அருணகிரி சிறுவர் பூங்காவிலும், அதை ஒட்டியுள்ள செடிப் பண்ணையிலும் உள்ள கடப்பா கற்களில் பறவைகளின் துல்லிய ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினார் குமார். கடப்பா கற்களில் உள்ள உடைசல்கள், பள்ளங்கள், மொரமொரப்பான பகுதிகள் ஆகியவற்றை லாவகமாக ஓவியத்தின் பகுதிகளாகப் பயன்படுத்த தொடங்கினார் அவர். காட்டை ஒட்டிய அந்த சூழலில் அமைந்த அந்த கடப்பா கல் ஓவியங்கள் சில நேரங்களில் பறவைகள் அங்கே உயிருடன் இருப்பதைப் போன்ற பிரமையைத் தரும்.
கூடவே, பறவைகள் குறித்த அவரது அறிவு விரிவும் ஆழமும் அடைந்துகொண்டே இருந்தது. இதன் விளைவாக, சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபாரஸ்ட் வே அமைப்பு வெளியிட்ட திருவண்ணாமலை பறவைகள் என்ற ஆங்கில நூலின் உருவாக்கத்தில் கணிசமான பங்காற்றினார். அந்த நூலையும் அவரது ஓவியங்கள் அலங்கரித்தன.

பட மூலாதாரம், Sivakumar
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, அதே அமைப்பு ‘திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள்’ என்ற விரிவான ஒரு களக்கையேட்டை தமிழில் வெளியிட்டது. இந்தக் கையேடு தமிழில் வெளியான முதல் களக் கையேடு அல்ல என்றபோதும், இரண்டு விஷயங்களுக்காக இது முக்கியத்துவம் பெறுகிறது.
வழக்கமாக பறவையியல் களக் கையேடுகள் பறவைகளின் புகைப்படங்களையே தாங்கி வரும் நிலையில், இந்தக் கையேடு சிவக்குமார் வரைந்து துல்லிய ஓவியங்களோடும், உள்ளூர்ப் பறவைகள் குறித்த சிவக்குமாரின் துல்லிய அனுபவங்களோடும் வெளியாகியுள்ளன. இந்தக் கையேடு கோவிந்தா பௌலே, வி.அருண், சிவக்குமார், வினோத், ஹரீஷ் போன்ற பல சூழலியல் ஆர்வலர்களின் கூட்டு உழைப்பின் விளைபொருள் என்றபோதும், இந்த நூலின் உருவாக்கத்தில் சிவக்குமாரின் படைப்பாற்றலுக்கும், கள அனுபவத்துக்கும் ஒரு தூக்கலான பங்கு இருப்பதை இந்த நூலுக்கு வழங்கப்பட்ட முன்னுரைகள், அணிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Sivakumar
பேர்ட் வாட்ச்சிங் எனப்படும் ‘பறவை நோக்கல்’ மேல்தட்டு மக்களுக்கான ஓய்வுக் கால செயல்பாடு என்ற பார்வையே ஓரிரு பத்தாண்டுகள் முன்புவரை இருந்தது. மறுபுறம் இயற்கையோடு நெருக்கமாக வாழும் ஊரக, பழங்குடி, உழைக்கும் சமூகங்களை சேர்ந்த மக்களுக்கே பல்வேறு பறவைகளை வேறுபடுத்தி அறியும் அறிவு இருந்துவந்தது. அவர்களிடையேதான் அந்தப் பறவைகளுக்கான தமிழ்ப் பெயர்களும் புழக்கத்தில் இருந்தன.
நகரமயம் தீவிரமாகி, நடுத்தர வர்க்கம் பெருக்கத் தொடங்கிய நிலையில், இயற்கை குறித்தும், பறவைகள் குறித்தும் கள அறிவு உள்ளோர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனால், பல்வேறு சமூகப் பிரிவினரை உள்ளடக்கி விரிவடைந்த நடுத்தர வர்க்கத்தில் இருந்து பறவை நோக்கும் ஆர்வத்துடன் புதிய இளைஞர்கள் வரத் தொடங்கினர்.
பறவை நோக்கல், வெறும் ஓய்வுக் கால செயல்பாடு என்பதைத் தாண்டி, இயற்கை குறித்த அறிவுத் தொடர்ச்சியை தக்கவைக்கவேண்டும் என்ற தாகத்துக்கான வடிகாலாகவும் மாறியது.

பட மூலாதாரம், Sivakumar
இப்படி புதிய தாகத்தோடு பறவை நோக்க வந்த புதிய தலைமுறை ஓர் உறுத்தலை எதிர்கொண்டது. பறவைகள் குறித்த பாரம்பரிய அறிவு மண்ணில் வேர்கொண்ட சமூகங்களிடமே இருந்தாலும், பறவைகள் குறித்த நூல்களிலோ, பறவை நோக்கும் வல்லுநர்கள், ஆர்வலர்கள் நடுவிலோ பறவைகளுக்கான தமிழப் பெயர்கள், உள்ளூர்ப் பெயர்கள் புழக்கத்தில் இல்லை.
இதையடுத்தே இயற்கையை, விலங்குகளை, பறவைகளைப் பற்றி தமிழில் எழுதுதல், தமிழ்ப் பெயர்களை கண்டெடுத்து காப்பாற்றுதல் ஒரு இலக்கிய செயல்பாடு போல வளரத் தொடங்கியது.
தமிழில் பறவைகளைப் பற்றி எழுதுதல்

பட மூலாதாரம், Sivakumar
க.ரத்னம், தியடோர் பாஸ்கரன், ச.முகமது அலி, ப.ஜெகந்நாதன், ஆசை, கோவை சதாசிவம் என்று பலர் தமிழில் சூழல் எழுத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். குறிப்பாக ரத்னம், ஜெகநாதன், சண்முகானந்தம், ஆசை, போன்றவர்கள் பறவைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்டெடுத்துப் பயன்படுத்த தொடங்கினர்.
இவர்களில் மிகவும் மூத்தவரான ரத்னம் தமிழில் பறவையியல் எழுத்திலும் எல்லோருக்கும் முன்னோடி. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்ற அவரது நூல் தமிழ்நாடு அரசின் விருது பெற்றது.

பட மூலாதாரம், Sivakumar
இப்படி தமிழில் பறவையியலை எழுதுவோர் பெருகத் தொடங்கியதும், குருகு, குக்குறுவான், இருவாச்சி, உழவாரன், தகைவிலான், வைரி, ஆலா போன்ற பறவைப் பெயர்களெல்லாம் அச்சேறி அவற்றின் புழக்கம் பரவலாயிற்று.
ஆனாலும், பெரும்பாலும் பறவையியல் எழுத்துகளை மட்டுறுத்தும் இரண்டு கூறுகள் இருந்தன. ஒன்று மொழிபெயர்த்து எழுதுவது, இன்னொன்று, சொந்தமாக எழுதுவதிலும், ஒரு பறவையின் பழக்க வழக்கம், வாழ்க்கை சுழற்சிகள் என பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஆனால், திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் நூல் இந்த வரையறைகளை கடந்து செல்கிறது.
உள்ளூர் மாறுபாடுகள்

பட மூலாதாரம், Sivakumar
இது பற்றிக் கேட்டபோது, “ஒரு பறவை ஜூன் – ஜூலை மாதத்தில் கூடு கட்டும் என்று பொதுவான வரையறை இருக்கும். ஆனால், உள்ளூரில் அந்தப் பறவைகளைப் பார்க்கும்போது அந்த காலகட்டத்தில் சிறிய மாற்றம் இருக்கும்.
ஒரு பறவை இந்தவகை செடி கொடிகளைக் கொண்டு கூடு அமைக்கும் என்று பொதுவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், திருவண்ணாமலையில் பார்க்கும்போது இங்கே கிடைக்கும் வேறு சில வகை பொருள்களை கூடமைப்பதில் அதே பறவைகள் பயன்படுத்தும். திருவண்ணாமலை மாவட்டத்தில் பறவைகளின் வாழ்வில் வெளிப்படும் இத்தகைய மாறுபாடுகளை இந்த நூலில் பதிவு செய்துள்ளோம்,” என்கிறார் சிவக்குமார்.
இது தவிர, வேறொன்றயும் இந்த நூல் செய்துள்ளது. ஒவ்வொரு பறவைக்கும் தமிழ்ப் பெயர்கள் என்ன என்று ஆராயும்போது பறவை எழுத்தாளர்கள் பலவிதமான பெயர்களை எதிர்கொண்டனர். இதைக் கடந்து பறவைகளுக்கான பெயர்கள் தமிழில் ஒருவிதமாக தரப்படுத்தப்படுவதுண்டு.
உள்ளூர்ப் பெயர்கள்

பட மூலாதாரம், Sivakumar
பொதுவாகத் தரப்படுத்தப்பட்ட இப்படிப்பட்ட பெயர்களுக்கு மாற்றாக உள்ளூர் அளவில் சில பறவைகளுக்கு சுவாரசியமான பெயர்கள் இருக்கும். இத்தகைய உள்ளூர் அளவிலான பெயர்களையும், அவை எந்த ஊரில் வழங்குகின்றன என்பதையும் இந்த நூல் ஆவணப்படுத்துகிறது.
ஆள்காட்டி (red wattled lapwing) பறவை கோசாலை என்ற ஊரில் தித்தித்தாங் குருவி என்று அழைக்கப்படுவதாக இந்நூல் பதிவு செய்கிறது.
ஒரு காட்டுக்குள் மனிதர்கள், வேட்டைக்காரர்கள் வந்தால், உயரப் பறந்து எச்சரிக்கை ஒலி எழுப்பும் பறவை இது என்பதால் ஆக்காட்டி அல்லது ஆள்காட்டி என்பது இந்தப் பறவைக்கு பொதுவாக ஏற்கப்பட்ட தமிழ்ப் பெயர் ஆகும். ஆனால், தித்தித்தாங்குருவி என்ற இந்த உள்ளூர்ப் பெயர் அந்தப் பறவையின் எச்சரிக்கை ஒலி அமைப்பை ஒத்திருப்பது சுவாரசியமானது.
அதைப் போலவே செம்போத்து என்று பொதுவில் அழைக்கப்படும், குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஆடையூர் என்ற ஊரில் கள்ளி காக்கா என்று அழைக்கப்படுவதையும் இந்த நூல் ஆவணப்படுத்தியுள்ளது.
இது தவிர இ பேர்ட் என்னும் பறவை ஆவணப்படுத்தும் தளத்தில் புவியிடக் குறிப்போடு திருவண்ணாமலையில் பார்க்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு, வல்லுநர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட்ட பறவைகள் மட்டுமே இந்த கையேட்டில் இடம் பெற்றுள்ளன என்று கூறுகிறார் சிவக்குமார்.
ஓவியங்களுக்கு என்ன முக்கியத்துவம்?

பட மூலாதாரம், Sivakumar
இப்படி பறவைகளுக்கான உள்ளூர் களக் கையேட்டில் துல்லிய ஓவியங்கள் இடம் பெறுவது எந்த அளவுக்கு முக்கியம் என்று கேட்டபோது, “என்னுடைய துல்லிய ஓவியங்களைப் பொறுத்தவரை, பறவைகள் எந்த நிறத்தில் எந்த அளவில் உள்ளனவோ அவற்றை துல்லியமாக அதே நிறத்தில், அதே அளவு விகிதத்தில் வரைகிறேன். ஈர்ப்புக்காக அவற்றை மாற்றியோ, வண்ணம் கூட்டியோ வரைவதில்லை.
ஆனாலும், சில பறவைகளை அடையாளம் காண்பதில் ஒரு வகையில் ஓவியங்கள் கூடுதலாக உதவுகின்றன. வேறுசில வகையில் புகைப்படங்களே சிறந்தவை என்பதால் புகைப்படங்களையும் இந்த நூலில் பயன்படுத்தியுள்ளோம். இப்படி பயன்பாட்டு நோக்கில் மட்டுமல்லாமல், ஆவண மொழியில் எழுதப்பட்ட நூலைப் படிப்பது சலிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்கவும் ஓவியம் என்ற அழகியல் வடிவம் உதவி செய்யும்” என்கிறார் சிவக்குமார்.
இந்த களக் கையேடு, பழைய நூல்கள், இணைய தளம் ஆகியவற்றில் உள்ள தரவுகளை மட்டும் பயன்படுத்தாமல் அவற்றை உள்ளூரில் கண்ட தரவுகளைக் கொண்டு மேம்படுத்தி தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Sivakumar
“வெறும் பறவைகளை மட்டும் ஆவணப்படுத்தாமல், அந்தப் பறவைகள் வாழும் நிலவியல் அமைப்பு, அது சார்ந்து வாழும் மரம் செடி கொடிகள், பாலூட்டிகள், ஊர்வன போன்றவற்றையும் உள்ளூர் அளவில் நேரில் கண்டு, உறுதி செய்து தொகுத்துள்ளோம். 10-15 ஆண்டுகளில் பெற்ற கள அனுபவத்தின் அடிப்படையில் இதைச் செய்துள்ளோம்.
எடுத்துக்காட்டாக பொதுவாக வீண் என்று பார்க்கப்படும் தரிசு நிலங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், தரிசு நில அமைப்பு எப்படி குறிப்பிட்ட வகைப் பறவைகளுக்கு, குள்ளநரி போன்ற விலங்குகளுக்கு வாழிடமாக பங்கு வகிக்கிறது என்பதையும் இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளோம்,” என்கிறார் சிவக்குமார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்





















