புதினை சந்தித்த பிறகு இந்தியா பற்றிய டிரம்பின் பேச்சு எதைக் காட்டுகிறது?

டிரம்ப் - புதின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் 10 நிமிடங்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இருவருமே கூறினர். டிரம்ப் - புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பில் என்ன நடந்தது?

புதினுக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்காவில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியைப் போல அல்லாமல், ரஷ்ய அதிபர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு காத்திருந்தது. அலாஸ்காவில் தனது சிறப்பு விமானத்தில் இருந்து புதின் இறங்கி சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த போதே, காத்திருந்த டிரம்ப் கைத்தட்டி உற்சாகமாக வரவேற்றார். இருவரும் கைகுலுக்கிக் கொண்ட பிறகு ஒன்றாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்றனர்.

புதின் தனக்காக காத்திருந்த ரஷ்ய அதிபருக்கான காரை விடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் இணைந்து அவரது காரிலேயே சந்திப்பு நடக்கவிருந்த இடத்திற்கு சென்றார். இருவரது முகத்திலுமே உற்சாகம் தென்பட்டது.

டிரம்ப் - புதின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters

கடைசிக் கட்டத்தில் திடீர் மாற்றம்

அலாஸ்காவில் டிரம்ப் - புதின் ஆகிய இருவரும் தனியே சந்திப்பார்கள் என்றே முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசிக் கட்ட மாற்றமாக, அமெரிக்கா - ரஷ்யா இருதரப்பில் இருந்தும் தலா 3 பேர் இந்த சந்திப்பில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ரஷ்ய தரப்பில் அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், வெளியறவு கொள்கை வகுப்பு உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகிய மூவர் இதில் பங்கேற்றனர். அமெரிக்கா தரப்பில் அதிபர் டிரம்ப், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிரம்ப் - புதின் அல்லாத மற்ற நால்வருமே கடந்த பிப்ரவரியில் சௌதி அரேபியாவில் நடைபெற்ற யுக்ரேன் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"அமைதியை நாடுதல்" மற்றும் "அலாஸ்கா 2025" என்று எழுதப்பட்ட பின்னணியில், உச்சி மாநாட்டில் புதினும் டிரம்பும் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருக்கும் படங்கள் வெளியாயின. மூடிய கதவுகளுக்குப் பின்னால் டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரம் நீடித்தது.

வெள்ளை மாளிகை பகிர்ந்த படங்கள்

"அமைதியை நாடுதல்" மற்றும் "அலாஸ்கா 2025" என்று எழுதப்பட்ட பின்னணியில், உச்சி மாநாட்டில் புதினும் டிரம்பும் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருக்கும் படங்களை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது.

அத்துடன், புதினும் டிரம்பும் அமெரிக்க அதிபருக்கான காரை நோக்கி சிவப்புக் கம்பளத்தில் நடந்து செல்லும் புகைப்படத்தை பதிவிட்டு, 'வரலாற்று நிகழ்வு' என்று வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

டிரம்ப் - புதின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், White House/X

சந்திப்பு 'நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக' நடந்தது - ரஷ்ய பிரதிநிதி

டிரம்ப்-புதின் சந்திப்பு "நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக" இருந்ததாக இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் ரஷ்ய சிறப்பு பிரதிநிதி கிரில் டிமிட்ரிவ் கூறினார். மேலும் விவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போது, அவர் கேள்விகளைத் தவிர்த்தார்.

டிரம்ப் - புதின் ஒன்றாக செய்தியாளர் சந்திப்பு

மூடிய கதவுகளுக்குப் பின்னால் சுமார் 3 மணி நேர பேச்சுவார்த்தை நடத்திய பிறகு டொனால்ட் டிரம்பும் விளாடிமிர் புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

மேடையின் பின்னணியில் "சமாதானத்தைத் தொடர்தல்" என்று எழுதப்பட்டிருந்தது. ரஷ்ய மற்றும் அமெரிக்க கொடிகள் அருகருகே வைக்கப்பட்டிருந்தன. .

டிரம்ப் புதினுக்கு சைகை செய்து, அவரை முதலில் பேசுமாறு கேட்டுக் கொண்டார். புதின், டிரம்பை 'அண்டை நாட்டவர்' என்று கூறி வரவேற்றதாகக் கூறினார்.

அமெரிக்காவும் ரஷ்யாவும் "கடல்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நெருங்கிய அண்டை நாடுகள்" என்று புதின் குறிப்பிட்டார்.

டிரம்ப் - புதின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters

"வெறும் 4 கி.மீ. மட்டுமே தொலைவில் அமெரிக்கர்கள் உள்ளனர். நாங்கள் நெருங்கிய அண்டை நாடுகள், அது ஒரு உண்மை," என்று அவர் தொடர்ந்தார்.

இன்று கைகுலுக்கியபோது, அவர் டிரம்பிடம் "ஹலோ, அண்டை நாட்டவர்" என்று குறிப்பிட்டதாக புதின் தெரிவித்தார்.

1800 களின் நடுப்பகுதியில் அமெரிக்காவிற்கு விற்கப்படுவதற்கு முன்பு ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த அலாஸ்காவின் வரலாற்றை புதின் விவரித்தார்.

அமெரிக்க மாநிலத்தில் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் இருப்பதை அவர் குறிப்பிடுகிறார், செய்தியாளர்களிடம் கூறினார்: "இந்த பாரம்பரியம் பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் சமமான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பவும் வளர்க்கவும் உதவும் என்று நான் நம்புகிறேன்." என்று அவர் குறிப்பிட்டார்.

டிரம்புடனான சந்திப்பை 'தாமதமாக நடந்த ஒன்று' என்று புதின் குறிப்பிட்டார்.

"பனிப்போருக்குப் பிறகு மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன"

மேலும் தொடர்ந்த புதின், இரு நாடுகளுக்கும் இடையே சில ஆண்டுகளாக எந்த உச்சிமாநாடுகளும் இல்லை என்றும், இருதரப்பு உறவுகள் "பனிப்போருக்குப் பிறகு மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன" என்றும் கூறினார்.

மோதல் போக்கில் இருந்து உரையாடலுக்கு மாற வேண்டிய நேரம் இது என்று கூறிய அவர், இந்த சந்திப்பை "நீண்ட காலமாக தாமதமாகிவிட்ட ஒன்று" என்று குறிப்பிட்டார்.

தனக்கும் டிரம்பிற்கும் பல "வெளிப்படையான" தொலைபேசி அழைப்புகள் இருந்ததாகவும், டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உரையாடலைத் தொடர்ந்ததாகவும் புதின் தெரிவித்தார்.

டிரம்ப் - புதின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, புதின்

யுக்ரேன் பற்றி புதின் குறிப்பிட்டது என்ன?

யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர போர் மூண்டதற்கு அடிப்படையான 'முதன்மை காரணங்கள்' நீக்கப்பட வேண்டும் என்று புதின் தெரிவித்தார். தங்களது விவாதத்தின் மையப் பிரச்னை யுக்ரேன் மோதல் என்று புதின் கூறினார்.

"நீடித்த மற்றும் நீண்டகால தீர்வை ஏற்படுத்த, மோதலுக்கான முதன்மை காரணங்களை நாம் அகற்ற வேண்டும்" என்றார் புதின். யுக்ரேனியர்களும் ஐரோப்பியர்களும் சமாதான செயல்முறையில் "தலையிடக்கூடாது" என்றே தீர்மானிப்பார்கள் என்று நம்புவதாக புதின் கூறினார்.

"டிரம்பின் முயற்சிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்ற புதின், "இரு தரப்பினரும் முடிவுகளை சிறப்பான நோக்கியவர்களாக இருக்க வேண்டும்" என்றும் கூறினார்.

"டிரம்ப் தனது நாட்டின் நலனில் தெளிவாக அக்கறை கொண்டுள்ளார். அதேநேரத்தில் ரஷ்யாவிற்கு அதன் சொந்த நலன்கள் இருப்பதைப் புரிந்துகொள்கிறார்," என்று அவர் கூறினார்.

பிரதமரின் அறிவிப்புகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமைதி ஒப்பந்தம் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

புதினைத் தொடர்ந்து பேசிய டொனால்ட் டிரம்ப், தானும் புதினும் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தி "சில முன்னேற்றங்களை" அடைந்துவிட்டதாகக் கூறினார்.

"நேட்டோ கூட்டாளிகள் மற்றும் யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி உட்பட மற்றவர்களை அழைப்பேன். ஏனெனில், முடிவில் இந்த ஒப்பந்தத்திற்கு அவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை எந்த ஒப்பந்தமும் இல்லை, "பெரிய முன்னேற்றம்" ஏற்பட்டது, ஆனால் "நாங்கள் ஒப்பந்தத்தை எட்டும் நிலைக்குச் செல்லவில்லை" என்றார் டிரம்ப்

"அதிபர் புதினுடன் எனக்கு எப்போதும் அருமையான உறவு இருக்கிறது. விளாடிமிர்," என்று டிரம்ப் தெரிவித்தார்.

அவர் தங்கள் சந்திப்பை "மிகவும் பயனுள்ள" என்று குறிப்பிட்ட டிரம்ப், சில விஷயங்கள் இன்னும் முடிவு செய்யப்பட வேண்டும் என்றார். ஆனால் மேலும் முன்னேற்றம் ஏற்பட "மிக நல்ல வாய்ப்பு" இருப்பதாக அவர் கூறினார்.

டிரம்ப் - புதின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்ப்

'மாஸ்கோவில் மீண்டும் சந்திப்போம்' - புதின்

செய்தியாளர் சந்திப்பு முடிவுக்கு வருவதற்கு சற்று முன்பாக, "வாரத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதை இருவரும் தடுப்போம்" என்று டிரம்ப் கூறினார். "நான் விரும்புவதைப் போலவே அதிபர் புதினும் அதைக் காண விரும்புகிறார்," என்று அவர் கூறினார்.

'விளாடிமிர்' என்று விளித்து, புதினுக்கு நன்றி கூறி செய்தியாளர் சந்திப்பை டிரம்ப் நிறைவு செய்தார்.

"நாம் மிக விரைவில் மீண்டும் பேசுவோம், குறிப்பாக உங்களை மிக விரைவில் சந்திக்கலாம்" என்று டிரம்ப் கூறினார்.

"அடுத்த முறை மாஸ்கோவில்" என்று புதின் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.

செய்தியாளர் கேள்விகள் தவிர்ப்பு

டிரம்ப் - புதின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. பின்னர், அவர்கள் கைகுலுக்கி, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, கூடியிருந்த செய்தியாளர்களின் கேள்விகளைப் புறக்கணித்து மேடையை விட்டு வெளியேறினர்.

இந்தியா பற்றிய டிரம்ப் பேச்சு எதைக் காட்டுகிறது?

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மீண்டுமொரு முறை இந்தியா பற்றி பேசியுள்ளார் டிரம்ப்.

"அவர்கள் (ரஷ்யா) தங்களின் 40% எண்ணெயை வாங்கி வரும் வாடிக்கையாளரான இந்தியாவை இழந்துள்ளனர். சீனாவும் அதிகமாக எண்ணெய் வாங்கி வருகிறது. நான் இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை விதித்தால் அவர்களின் கண்ணோட்டத்தில் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். நான் செய்ய வேண்டுமென்றால் செய்வேன், ஆனால் அதற்கான தேவை வராது என நினைக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ரஷ்ய விவகாரங்கள் நிபுணரும் சர்வதேச படிப்புகளுக்கான ஜே.என்.யூ. ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மையத்தில் பணிபுரியும் பேராசிரியருமான ராஜன் குமார் இதனை 'அழுத்தம் கொடுக்கும் முயற்சி' என பிபிசியிடம் குறிப்பிட்டார்.

இது ரஷ்யாவுக்கு சேதி சொல்லும் வழி என்றார் ராஜன். "இந்தியா மற்றும் இதர வழிகள் மூலம் ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சீனா மீது அழுத்தம் கொடுக்க முடியாது என டிரம்புக்கு தெரியும். எனவே இந்தியா எளிமையான இலக்காக கருதுவதால் தொடர்ந்து அதைப் பயன்படுத்தி வருகிறார்" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், "இந்தியா மீது இந்த வழியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் அவர் வரிகளை குறைக்கவோ அல்லது பூஜ்ஜியம் ஆக்கவோ விரும்புகிறார். அதே நேரம் ரஷ்யாவிடமிருந்து அதன் நட்பு நாடுகளை தங்களால் பிரிக்க முடியும் என சேதி அனுப்பவும் விரும்புகின்றனர். அவர்களால் சீனாவை ரஷ்யாவிடமிருந்து பிரிக்க முடியாது, ஆனால் இந்தியா பிரிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தச் செய்ய முடியும் என டிரம்ப் நம்புவதாக ராஜன் தெரிவிக்கிறார். "இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் இந்தியா அமெரிக்காவுடனான தனது உறவுகள் மோசமடைய விரும்பவில்லை. இரண்டாவது, ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெயின் பலன்கள் சமீப நாட்களில் கணிசமாக குறைந்துள்ளன."

டிரம்ப் - புதின், அலாஸ்கா சந்திப்பு, யுக்ரேன் போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Contributor/Getty Images

படக்குறிப்பு, டிரம்ப்-புதின் பேச்சுவார்த்தை

"அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருந்தால், இந்தியா தனது இறக்குமதியை பன்முகப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன, அதற்கான முயற்சிகளும் நடந்து வருகிறது. அதனால் தான் இந்தியா தற்போது தாங்கள் எதிர்பார்க்கும் திசையில் நகர்ந்து வருவதாகக் கூறும் டிரம்ப், அழுத்தம் கொடுத்தால் மேலும் நகரும் என நம்புகிறார். ஆனால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியை நிறுத்துவது பற்றி இந்தியா எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் சந்தைக்கு எங்கு லாபம் கிடைக்கிறதோ அங்கிருந்தெல்லாம் நாங்கள் வாங்கிக் கொள்வோம் என இந்தியா சொல்ல முயற்சிக்கிறது" எனத் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் முடிவுகள் பற்றி கூறிய ராஜன், டிரம்பின் பார்வையில் இந்த சந்திப்பு தோல்வியல்ல எனத் தெரிவித்தார். "அவரைப் பொருத்தவரை, இது நேர்மறையான முதல் படி. அவர் பெரிய குழுவுடன் வந்தார். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் நேர்மறையான செய்தியை வழங்க முயற்சித்தனர்." என்றார் ராஜன்.

எனினும் செய்தியாளர் சந்திப்பில் எந்தக் கேள்விகளுக்கும் பதில் அளிக்காதது எந்த ஆக்கப்பூர்வமான ஒப்பந்தமும் எட்டப்படவில்லை அல்லது அதனை பொதுவெளியில் தற்போது சொல்ல முடியாத நிலை உள்ளதை தான் காட்டுகிறது எனக் கூறுகிறார் ராஜன். "ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இதர சக்திகள் தலையிடலாம் என அவர்கள் உணர்கின்றனர்" என்று தெரிவித்தார்.

இந்தியா மீதான வரிகளை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் தற்போது குறைவாகவே உள்ளதாக கூறுகிறார் ராஜன்.

"டிரம்பின் பார்வையில் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. எனவே இந்தியா மீது மேலும் அழுத்தம் கொடுப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. போர்நிறுத்தம் அல்லது வான் தாக்குதல்கள் மீதான தடை போன்ற முக்கியமான பிரச்னைகள் மீது எந்த விவாதங்களும் நடக்காததால் யுக்ரேன் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது." எனத் தெரிவித்தார் ராஜன்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு