ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசத் துணிந்த நபரின் பின்னணியில் இருப்பது யார்?
சென்னையில் ஆளுநர் மாளிகையின் மீது கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார். இது ஆளுநர் மாளிகை முன்புறம் சாலையில் விழுந்து வெடித்தது. ஆளுநர் மாளிகையின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரைப் பிடித்தனர்.
கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபர், நீதித் துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பட மூலாதாரம், TNDGP OFFICE
இதுதொடர்பாக, தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் ஒரு விரிவான விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே ஒரு நபர் என்றும் ஆளுநர் மாளிகை சொல்வதைப் போல பலர் ஈடுபடவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
அதேபோல, முந்தைய சம்பவங்கள் எதிலும் ஆளுநர் தாக்கப்படவில்லையென்றும் ஆளுநரின் வாகன வரிசைக்குப் பின்னால் வந்த வாகனங்கள் மீதே கொடிகள் வீசப்பட்டன என்றும் அது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



