காணொளி: பாப் அல்- மண்டாப் நீரிணையை குறிவைத்து தாக்கும் ஹூத்தி குழு - என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, பாப் அல்- மண்டாப் நீரிணையை குறிவைத்து தாக்கும் ஹூத்தி குழு - என்ன நடக்கிறது.
காணொளி: பாப் அல்- மண்டாப் நீரிணையை குறிவைத்து தாக்கும் ஹூத்தி குழு - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

உலகின் மிகவும் பரபரப்பான இரண்டு கப்பல் போக்குவரத்துப் பாதைகள் தற்போது மத்திய கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை பல மாதங்களாக செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

தற்போது இரானின் நெருங்கிய கூட்டாளியான ஏமனின் ஹூத்தி குழு, பாப் அல்- மண்டாப் நீரிணையை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தக் குறுகிய கால்வாய் உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாகும்.

சௌதி அரேபியாவிலிருந்து வரும் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என அறிவித்த பிறகு, அங்கு எண்ணெய் டேங்கர்களைத் தாக்கியதாக ஹூத்தி குழு கூறுகிறது.

ஹூத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் மீது சௌதி விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹூத்திகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் மூடப்பட்டுள்ளதால், சௌதி அரேபியா குழாய் வழியாக எண்ணெயை செங்கடலுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து பாப் அல்-மண்டாப் நீரிணை வழியாக ஏற்றுமதி செய்து வருகிறது.

அந்தப் பாதையும் தடைப்பட்டால், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மேலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

மேலும், இந்த நீரிணை சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய கடல் பாதையாக இருப்பதால் இங்கு முற்றுகை ஏற்பட்டால், கப்பல்கள் தென்னாப்பிரிக்காவின் கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக நீண்ட சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை உருவாகும்.

இதனால் கப்பல் போக்குவரத்து நேரம் சுமார் 10 நாட்கள் கூடும்.

எனவே, ஹூத்திகளின் இந்த அச்சுறுத்தல் உலக வர்த்தகத்தில் மேலும் இடையூறுகளை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அதனால் பொருட்களின் பற்றாக்குறையும் விலை உயர்வும் மேலும் தீவிரமடையக்கூடும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு