You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை - ஜின்பிங் அரசால் சமாளிக்க முடியுமா?
சீனாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு ஐந்தில் ஒருவர் அறுபது வயதுக்கு மேற்பட்டவராகும். இந்த பிரச்னையை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் குண்டு பொருளாதார நிபுணர்கள் விவரிக்கிறார்கள். சில குழந்தைகளையே பெண்கள் பெற்றெடுக்க விரும்பும் நிலையில், ஓய்வூதிய மற்றும் மருத்துவ அமைப்புகள் தடுமாறி வருகின்றன.
முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதை சீனாவால் சமாளிக்க முடியுமா? என்பது தொடர்பாக பிபிசியின் சீன செய்தியாளர் லாரா பிக்கர் வழங்கும் தொகுப்பை பார்க்கலாம்.
இந்த தலைமுறை கம்யூனிச சீனா உருவானதை பார்த்துள்ளது. ஆனால், சிலர் ஆடம்பரமாக வாழ்ந்து வருகையில், பலரும் வாழ்க்கை முழுவதும் உழைக்க வேண்டியுள்ளது. ஃபெங் (Feng) பாட்டி முதியோர் இல்லத்தில் உள்ள தனது அறையை எனக்கு காட்டுகிறார். அவருடைய மகனை சார்ந்திருப்பதற்கு பதிலாக இந்த காப்பகம் வழங்கும் நீண்ட கால பராமரிப்புக்கு அவர் பணம் செலுத்தியுள்ளார்.
பிபிசியிடம் பேசிய சீனப் பெண் ஒருவர் "நான் மிகவும் திறந்த மனது உடையவள். என்னுடைய வயதினர் என்னை போல சிந்திப்பது மிக குறைவு. என்னை போன்றவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ விரும்புகின்றனர். நான் யோசித்து எடுத்த முடிவு இது. வீட்டை மகனுக்கு கொடுத்துவிட்டேன். எங்களுக்கு தேவை எங்களுடைய இரண்டு ஓய்வூதிய அட்டைகள்தான்.
சீனாவின் எதிர்காலத்துக்கான மாதிரி காப்பகமாக இது கருதப்படுகிறது. தன்னார்வலர்களாக இளைஞர்களும் இங்கே வாடகையின்றி வாழலாம். ஆனால், இதை லாப நோக்கோடு நடத்தினால் பலனளிப்பது கடினம்." என்று கூறினார்.
தனியார் நிறுவனங்கள் இந்த காப்பகங்களில் முதலீடு செய்துள்ளன, ஆனால் அவை தற்போது நஷ்டத்தில் இயங்குவதால் சீனாவுக்கு வேறு வழிகள் தேவைப்படுகின்றன.
ஹாங்ட்ச்சோ (Hangzhou) நகரத்தில் பணி ஓய்வு பெற்ற இந்த பாட்டிமார்கள், மாடல் அழகிகளாகவும், சமூக ஊடக நட்சத்திரங்களாகவும் புதிய தொழிலை கண்டறிந்துள்ளனர். பொருளாதாரம் மந்தமடையும் நிலையில், அறுபது வயதுக்கு மேலும் உழைப்பதை மக்கள் தொடர்வார்கள் என்று சீனா எதிர்பார்க்கிறது.
பிபிசியிடம் பேசிய ஷுய்ஷுய் என்ற பெண், "குறிப்பாக எங்களுக்கு, இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். சீனாவின் சீர்திருத்தங்களால் பயன்பெற்ற தலைமுறையை சேர்ந்தவள் நான். அதனால், எங்களுடைய பிம்பத்தை உலகுக்கு விளம்பரப்படுத்துவது எங்கள் கடமையாக இருக்கலாம்." என்று கூறினார்.
அத்தகைய பிம்பம் சீனாவில் உள்ள லட்சக்காணக்கானவர்கள் சந்திக்கும் மோசமான எதார்த்தத்தை பொய்யாக சித்தரிக்கிறது. வட கிழக்கு சீனாவின் கிராமப்புறத்தில் உள்ள இந்த தம்பதியருக்கு ஓய்வூதியம் இல்லை. அவர்கள் வேலை செய்வதை நிறுத்தினால் அல்லது நோய்வாய்ப்பட்டால் மிகவும் பாதிக்கப்படுவர்.
" எனது குழந்தைகளுக்கு சுமையாக இருப்பேன் என நினைக்கிறேன். அவர்கள் என்னை பராமரிக்க வேண்டும். எழுபத்திரண்டு வயதாகும் நான், இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள்தான் இதனை செய்யமுடியும். மேலும் வலுவிழந்துவிட்டால் படுத்த படுக்கையாகிவிடுவேன். எல்லாம் முடிந்துவிடும். என்னை மாதிரி சாதாரணமானவர்களுக்கு இதுதான் நிலைமை" என்கிறார் ஹுவான்ச்சுன்.
பல தசாப்தங்களாக சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையால், சீனாவின் பெரும்பாலான சீன கிராமப்புறங்களில் முதியவர்களை பராமரிக்க சில இளைஞர்களே உள்ளனர். முதியவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பது, சமநிலையை சீர்குலைத்து, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது. சீனா பணக்கார நாடு ஆவதற்கு முன்பே, அதிக முதியோர் வாழும் நாடாகி போகலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)