'3 பெல்லட்கள் கண்ணில் உள்ளன': டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் காந்தி பல மணி நேரம் தர்ணா - என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் சாஹில் லோச்சப் என்பவர் அளித்த புகாரின் பேரில், பெல்லட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது.

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது லோச்சப் காயமடைந்தார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி, "இது நீதிக்கான முதல் படி. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் காலை 11:30 மணிக்கு வந்தோம், மாலை 6:45 மணிக்குத்தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. டெல்லியிலேயே இதுதான் நிலைமை என்றால், ஒரு கிராமத்தில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இங்கும் அமித் ஷா தான் இறுதி அனுமதி வழங்க வேண்டியிருந்தது." என்று கூறினார்.

இதற்கிடையில், புகாரளித்த சாஹில் லோச்சப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் காந்தியும் அவரது குழுவினரும் எந்த ஊடக வெளிச்சமும் இன்றி எனக்கு தொடர்ந்து உதவி வந்தனர். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களிடம் பேசியபோது, எனது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று கூறினேன். உடனே அவர்கள், நாம் சந்தித்து பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யச் செல்வோம் என்று கூறினர்" என்றார்.

மேலும் அவர், "எனக்கு உதவியதற்காக அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நீதிக்குக் கிடைத்த வெற்றி. இந்த எஃப்.ஐ.ஆர் அதற்கான முதல் படியாகும்." என்றார்.

முன்னதாக டெல்லியில், சாஹில் லோச்சப் அளித்த எழுத்துப்பூர்வ காவல் புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ராகுல் காந்தி அராஜக அரசியல் செய்வதாக பாஜக குற்றம் சாட்டியதுடன், 'அவருக்கு சட்டத்தின் மீது மரியாதை இல்லையா?' என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் இது தொடர்பாக கூறுகையில், "பாதிக்கப்பட்ட மக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியதும், உச்ச நீதிமன்றமே ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு உயர் அதிகாரக் குழுவை அமைத்திருப்பதும்தான் இதில் மிகப்பெரிய விஷயம்" என்றார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி என்ன சொன்னார்?

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், "ஒரு மாதம் ஆகிவிட்டது. உடம்பில் பெல்லட்கள் உள்ளன. மூன்று பெல்லட்கள் கண்ணில் உள்ளன. அந்த கண்ணால் பார்க்க முடியாது. மூன்று அல்லது நான்கு பெல்லட்கள் இதயத்திற்கு அருகில் உள்ளன. ஒரு இளைஞனுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்று கூறினார்.

"நான் இன்று காலை 11:30 மணிக்கு வந்தேன். இப்போது 7 மணி மேல் ஆகிறது. இப்போதுதான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறார்கள். எத்தனை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள், எத்தனை குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், எத்தனை பேர் சுடப்படுகிறார்கள், எத்தனை பேரின் உடலில் பெல்லட்கள் உள்ளன என்று இப்போது எண்ணிப் பாருங்கள். இந்தக் காவல் நிலையம் டெல்லியின் மையப்பகுதியில் உள்ளது. இங்கேயே நீதி கிடைக்கவில்லை. ஒரு கிராமத்திலோ அல்லது சிறிய நகரத்திலோ உள்ள காவல் நிலையத்தில் என்ன நடக்கும் என்று யோசனை செய்து பாருங்கள்."

"நாங்கள் இங்கு தவறாக எதையும் செய்யவில்லை. ஒரு இந்தியக் குடிமகனுக்காக, அவருடைய தாயாருக்காக நாங்கள் நீதியைத் தேடியிருக்கிறோம், அதற்கு எட்டு மணி நேரம் ஆகியிருக்கிறது."

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் தலைவர் ராகுல் காந்தி சுமார் ஏழரை மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தி அமித் ஷாவையும் அவரது டெல்லி காவல்துறையையும் பணிய வைத்துள்ளார். இறுதியில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டியதாயிற்று. உலகம் வணங்குகிறது, அதை வணங்க வைக்க யாராவது தேவை என்று சொல்வது சரியே" என்று குறிப்பிட்டுள்ளது.

சாஹில் லோச்சப்பின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரையும் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.

காங்கிரஸ் வழங்கிய எஃப்.ஐ.ஆர் நகலின்படி, பெல்லட் துப்பாக்கி காயங்கள் வழக்கில் டெல்லி காவல்துறை இரண்டு பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதையடுத்து, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

என்ன நடந்தது?

ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கியால் காயமடைந்த சாஹில் லோச்சப்புடன் வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு சென்றார்.

சாஹில் லோச்சப் அளித்த எழுத்துப்பூர்வ புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கோரினார். இந்தக் கோரிக்கை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராகுல் காந்தியைத் தவிர, பல மூத்த காங்கிரஸ் தலைவர்களும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தை வந்தடைந்தனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு வெளியே திரண்ட திரளான காங்கிரஸ் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

தனது புகாரின் பேரில் காவல்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தார். சாஹில் லோச்சப் மற்றும் கட்சியின் எம்பி குமாரி செல்ஜா ஆகியோருடன் டிபிசி (DPC) அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர் பேசினார்.

அதன்பிறகு ராகுல் காந்தி, சாஹில் மற்றும் அவரது தாயாருடன் காவல் நிலையத்திற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தார்.

பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் உத்தரவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில், "நாட்டின் குழந்தைகள் மீது பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்த அமித் ஷா உத்தரவிட்டார், அதில் சாஹிலுக்கு பெல்லட் பட்டு பலத்த கண் காயம் ஏற்பட்டது. சாஹிலும் அவரது தாயாரும் தொடர்ந்து காவல் நிலையத்திற்குச் சென்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி வந்தனர், அதை காவல்துறை புறக்கணித்து வந்தது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சாஹில் மற்றும் அவரது தாயாருடன் காவல் அதிகாரிகளைச் சந்தித்து விசாரணை குறித்து தகவல்களைக் கேட்டறிந்தார்." என்று குறிப்பிட்டிருந்தது.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படக் கூடாது என்பதற்காக சாஹிலின் புகாருக்கு விசாரணை எண் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பெல்லட் துப்பாக்கிகள் பயன்பாடு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது என்ன?

முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகலே, சிஜேபி போராட்டத்தின் போது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்களைப் பெற்றிருந்தார்.

ஆர்டிஐ மூலம் பெல்லட் துப்பாக்கியால் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளதாக கோகலே கூறியிருந்தார்.

"மருத்துவமனைகளின் பதிவுகள், உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் அதைவிட இரண்டு மடங்கு, அதாவது 10 பேர் என்று காட்டுகின்றன," என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

கோகலே சேகரித்த தகவலின்படி, பெல்லட் துப்பாக்கிக் குண்டால் காயமடைந்த ஒன்பது பேர் லேடி ஹார்டிங்கே மருத்துவமனையிலும், ஒருவர் சஃப்தர்ஜங் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனைகளின் பதிவுகளுக்காக கோகலே இன்னும் காத்திருக்கிறார்.

கோகலே இந்த தகவல்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "காவல்துறை பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதும், அதைப் பற்றி பொய் சொல்வதும், கேள்வி கேட்கும்போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்த மறுப்பதும் என்ன வகையான ஜனநாயகம்?" என்று எழுதியுள்ளார்.

மேலும் அவர் , "இந்தியத் தலைநகரின் மையப்பகுதியில் அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கமும் காவல்துறையும் இன்னும் விவரங்களை மறைத்து வருகின்றன. பெல்லட் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை மோடி அரசு இதுவரை ஏன் வெளியிடவில்லை?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எஃப்.ஐ.ஆர் பதிவதற்கு முன்பாக ராகுல் காந்தி என்ன சொன்னார்?

முன்னதாக ராகுல் காந்தி, "ஜூலை 20 அன்று ஜந்தர் மந்தரில் பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது" என்று கூறியிருந்தார்.

அப்போது, ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெல்லட்களைக் காட்டிய ராகுல் காந்தி, இவை சாஹிலின் உடலில் இருந்து எடுக்கப்பட்டவை என்று கோரினார்.

அவர், "அவரது உடலில் 200 பெல்லட்கள் உள்ளன. மூன்று பெல்லட்கள் அவரது கண்ணில் உள்ளன" என்றார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவமனைகளின் அறிக்கைகளை அவர் காட்டினார்.

அவர், "இந்த அறிக்கைகள் அவரது உடலில் 200-க்கும் மேற்பட்ட பெல்லட்கள் இருப்பதை தெளிவாகக் கூறுகின்றன. அவரது கண்ணில் மூன்று பெல்லட்கள் உள்ளன. அந்த கண்ணால் அவரால் பார்க்க முடியாது. அவரது இதயத்திற்கு மிக அருகில் பெல்லட்கள் சிக்கியுள்ளன, அவற்றை அகற்ற முடியாது" என்று கூறினார்.

"டெல்லி காவல்துறை நாங்கள் பெல்லட் சுடவில்லை என்று கூறுகிறது, நீங்கள் சுடவில்லை என்றால், யாரோ ஒருவர் சுட்டிருக்க வேண்டும். ஒருவேளை வேறு யாராவது இவர்கள் மீது இந்த பெல்லட்களை சுட்டிருக்கலாம். வேறு யாரும் சுடவில்லை என்றால், ஒருவேளை அவர்களே தங்கள் மீது இந்த பெல்லட்களைச் சுட்டிருக்கலாம். நாங்கள் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறோம். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் வரை நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு