மழை வெள்ளத்தில் சிக்கி சகோதரி தோளிலேயே உயிரிழந்த தங்கை
ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தனது அப்பா அமலன், மற்றும் தங்கை அக்ஷிதாவை ஒரே சமயத்தில் இழந்துள்ளார் ஆன்சி.
"அம்மாவை பாதுகாப்பாக முன்னே அனுப்பிவிட்டு, நான், தங்கை, அப்பா மழையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். திடீரென அதிகளவு வெள்ளம் பாயத் தொடங்கியது. எங்களை காப்பாற்ற முயன்ற அப்பாவை தண்ணீர் ஒரு பக்கம் இழுத்துச் சென்றது.
"நீரில் விழுந்த என் தங்கையை தூக்கி, தோள்களில் ஏந்திக் கொண்டு இரண்டரை மணிநேரம் மரக்கிளையை பிடித்தவாறு வெள்ளத்தில் நின்றிருந்தேன். அப்போது எனக்கு தெரியாது, நீரில் விழுந்த சில நிமிடங்களில் அவள் இறந்து விட்டாள் என்று," மேற்கொண்டு பேச முடியாமல் தவிக்கிறார் ஆன்சி.
தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் பல இடங்கள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை எத்தனை உயிர்கள் இந்த வெள்ளத்திற்கு பலியாகியுள்ளன என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



