காணொளி: மந்தனா - பலாஷ் திருமணம் ரத்தானது பற்றி இருவரும் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, ஸ்மிரிதி மந்தனா - பலாஷ் முச்சல் திருமணம் ரத்தானது ஏன்?
காணொளி: மந்தனா - பலாஷ் திருமணம் ரத்தானது பற்றி இருவரும் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பாடகர் பலாஷ் முச்சலுடன் திட்டமிடப்பட்டிருந்த தனது திருமணம் ரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார்.

அவர் தனது இன்டாகிராம் பதிவில், "கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல யூகங்கள் பரவி வருகின்றன. தற்போது அதைப்பற்றி தெளிவாக பேச வேண்டும் என உணர்ந்தேன். நான் தனியுரிமையை விரும்பும் நபர், அப்படியே இருக்க விரும்புகிறேன். அந்த திருமணம் இனி நடக்காது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்." என்றார்.

"இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்." எனவும் தெரிவித்துள்ளார்.

பலாஷ் முச்சலும் தனது தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "உறுதிசெய்யப்படாத வதந்திகளை அடிப்படையாக வைத்து ஒருவரை மதிப்பிடுவதற்கு முன்பு, ஒரு சமூகமாக நாம் நிதானித்து யோசிப்போம் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான மற்றும் அவதூறான பதிவுகளை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பலாஷ் எச்சரித்துள்ளார்.

மந்தனா - பலாஷ் திருமணம் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், மந்தனாவின் தந்தை உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் திருமணம் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் சமூக ஊடகங்களில் இதுதொடர்பாக பல ஊகங்கள் வெளியான நிலையில், இருவருமே தன்னிலை விளக்கம் அளித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு