"என் உயரம் எனக்கு தெரியும்" - தந்தையை பின்பற்றி தேசிய அரசியலில் பயணிக்கிறாரா மு.க.ஸ்டாலின்?

திமுக, மு.கஸ்டாலின், கருணாநிதி, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

"2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாம் வெல்வதற்கு பணி செய்ய வேண்டும்" என்று கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து தொடர்ச்சியாக தேசிய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். பாஜகவுக்கு எதிராக ஒரணியில் தேர்தலை சந்திக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார்.

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகவால் தேசிய அளவில் செல்வாக்கு செலுத்தி பிற மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பது மிக முக்கியமான சவாலாக இருக்கும் என பத்திரிகையாளர் சிகாமணி பிபிசி தமிழிடம் பேசினார்.

தேசிய அரசியலில் திமுக

திமுக, மு.கஸ்டாலின், கருணாநிதி, காங்கிரஸ்

மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியுடன் திமுக உறவில் இருப்பது என்பது 1969ஆம் ஆண்டில் இருந்து தொடர்கிறது.

அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்ற கருணாநிதி தலைமையிலான அரசு, மத்திய அரசில் பதவி வகித்த இந்திரா காந்திக்கு ஆதரவு அளித்தது.

1969இல் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, தன் வசம் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த திமுக இந்திரா காந்திக்கு ஆதரவு அளித்தது.

1969ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தி களமிறக்கிய வேட்பாளருக்கு திமுக ஆதரவு தெரிவித்தது.

1998ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் கட்சியாக திமுக இருந்தது.

குறிப்பாக 2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 12 அமைச்சர்கள் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்றிருந்தனர்.

"பாஜக தலைவர் வாஜ்பாய் 5 ஆண்டுகள் பிரதமராக ஆட்சியில் நீட்டிக்கவும் திமுக அரசு தனது ஆதரவை வழங்கியிருந்தது. 1999ஆம் ஆண்டு பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக அரசு, வாஜ்பாய் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றது."

"இதனால் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. மீண்டும் பிரதமராக வாஜ்பாய் வந்தபோது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அளித்த ஆதரவால் தனது 5 ஆண்டு கால ஆட்சியை வாஜ்பாய் தலைமையிலான அரசு முழுமை செய்தது. இப்படி மத்தியில் நிலையான அரசு அமைக்க எப்போதும் திமுக முக்கியப் பங்கு வகித்துள்ளது," என்று பிபிசி தமிழிடம் பேசினார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம்.

மாநில கட்சிகள் ஒருங்கிணைப்பு

திமுக, மு.கஸ்டாலின், கருணாநிதி, காங்கிரஸ்

தேசிய அளவில் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு எதிராக ஓர் அணியை உருவாக்க காங்கிரஸ் கட்சியுடன் திமுக முயற்சி செய்து வருகிறது.

"இந்த முயற்சியில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க திமுக ஆதார மையமாக இருக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் AS பன்னீர்செல்வம்.

"மத்திய மாநில உறவு, மத்திய அரசில் அதிகார குவியல், ஜி.எஸ்.டி. வரி வருவாயில் மாநிலங்களுக்கு பங்கீடு எனப் பல முக்கிய விவகாரங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிற மாநில கட்சித் தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் இடத்தில் இருக்கிறார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரே அணியில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுக தலைவர் ஸ்டாலினின் பங்கு மிக முக்கியமானது," என்று ஏஎஸ்.பன்னீர்செல்வம் கூறினார்.

கருணாநிதி vs ஸ்டாலின்

திமுக, மு.கஸ்டாலின், கருணாநிதி, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"பிகார், கேரளா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களை ஒருங்கிணைப்பது போல கெஜ்ரிவால், மமதா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் ஆகிய தலைவர்களை ஒருங்கிணைப்பது ஸ்டாலினுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது," என்கிறார் மூத்த பத்திரியாளர் சிகாமணி.

"தேசிய அரசியலில் பிரதமர் மோதிக்கு எதிராக யாரை நிறுத்துவது என்ற கேள்விக்கு காங்கிரஸ் இன்னும் விடையளிக்கவில்லை. அப்படி இருக்கும் போது, கெஜ்ரிவால், மமதா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் ஆகியோர் தங்களை மாற்றுத் தலைவர்களாக முன்னிறுத்தும் முனைப்பில் இருக்கின்றனர்.

அதனால் இவர்களையும் சேர்த்து ஒரே கூட்டணியைக் கட்டுவது ஸ்டாலினுக்கு சவாலான பணியாக இருக்கும். மனிஷ் சிசோடியா, கவிதா ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணையைப் பொறுத்து இந்தக் கட்சிகளின் நிலைப்பாடு மாறக்கூடும்," என்றும் சிகாமணி தெரிவித்தார்.

தேசிய அரசியலில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த கருணாநிதி, 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மிக முக்கிய அங்கமாக இருந்தார்.

சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களில் அறிவுரை வேண்டி அடிக்கடி கருணாநிதியை நாடியுள்ளதாகப் பல முறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

"அவர் அரை நூற்றாண்டு காலமாகப் பொது வாழ்வில் உள்ளார். அவரது அனுபவமும் அறிவும் நாட்டை நிர்வகிப்பதில் உதவுவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டவசமானது," என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

"இந்தியாவின் சில பிரதமர்கள், குடியரசுத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் கருணாநிதியின் பரிந்துரை பல நேரங்களில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டுள்ளது" என்று பத்திரிகையாளர் சிகாமணி தெரிவித்தார்.

"மத்திய அரசுகளுடன் ஆரோக்கியமான உறவைப் பேணும் அதே நேரத்தில் மாநில சுயாட்சி, மாநில உரிமைகளுக்காக இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு ஆதாரமாக கருணாநிதி இருந்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து வந்துள்ள மு.க.ஸ்டாலினால், கருணாநிதி செலுத்திய அளவுக்குத் தாக்கம் செலுத்த முடியாது. மாநில கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கருணாநிதியிடம் இருந்த ஆளுமை மு.க.ஸ்டாலினிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆனால் கருணாநிதி போலவே ஸ்டாலினும் மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் கடுமையாக ஈடுபடுவார் என்பதையே அவரின் சமீபத்திய உரை குறிப்பிடுகிறது. ஆனால் இதை நிர்ணயிப்பதில் பிர அரசியல் காரணிகளும் இருக்கின்றன," என்றார் சிகாமணி.

"இந்திய அரசியல் களத்தில் இன்று முன்னணி தலைவர்களாக இருக்கும் மோதி, அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரையும்விட அதிக அரசியல் அனுபவம் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது," என்று பேசினார் பத்திரிகையாளர் பன்னீர்செல்வம்.

"1968ஆம் ஆண்டில் இருந்து அரசியல் களத்தில் இருக்கும் ஸ்டாலினால், பிற கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும்," என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு கைக்கொடுக்கும் கொள்கைகள்

திமுக, மு.கஸ்டாலின், கருணாநிதி, காங்கிரஸ்

பட மூலாதாரம், FACEBOOK/MKSTALIN

கோவையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை பேச அழைக்கும்போது, ‘வருங்கால இந்திய பிரதமர்’ என்ற அடைமொழியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்தார்.

இதை வைத்து சமூக ஊடகங்களிலும் எதிர் கட்சிகள் மத்தியிலும் விவாதம் எழுந்துள்ளது. தேசிய அரசியல் என்ற விவாதம் திமுக வட்டாரத்தில் எழுவது இது முதல்முறையல்ல.

இதற்கு முன்பு கருணாநிதி ஆட்சிக்காலத்தின்போது அவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற கருத்து அவ்வப்போது எழும்.

தேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியிருந்தாலும், தேசிய அரசியலில் தமக்கென ஓர் இடத்தைப் பிடிக்க அவர் எப்போதுமே முயன்றதில்லை. தமக்கு பிரதமர் ஆவதற்கான சூழல் வந்தபோதும், அந்தப் பதவிக்கு அவர் பிறரையே தேர்வு செய்தார். பிரதமர் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், 'என் உயரம் எனக்குத் தெரியும்,' என்று அவரே பல தருணங்களில் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இதையே மு.க.ஸ்டாலினும் பின்பற்றுவார் என்று தான் கருதுவதாக சிகாமணி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஒரே அணியாகத் தேர்தலைச் சந்தித்துள்ளன.

அனைவரையும் ஒருங்கிணைத்து, தேவையான இடமளித்துச் செல்லும் ஆற்றல் மு.க.ஸ்டாலினிடம் அதிகமாக இருக்கிறது. இந்தப் பண்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிற மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க ஸ்டாலினுக்கு உதவியாக இருக்கும் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக இந்தியாவின் பிற மாநிலங்களில், மாநில சுயாட்சி, மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரத்திற்கு எதிர்வினை என்ற போக்கு காணப்படுகிறது. இதற்கு முன்னோடியான திமுகவால் இந்த கொள்கைகளின் வழிகாட்டுதல் அடிப்படையில் பிற மாநிலங்களில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை ஸ்டாலின் எடுப்பார் என்றும் இதில் வெற்றி - தோல்வி என்பதை இப்போது கணிக்க முடியாது என்றும் சிகாமணி கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: