You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்வெளி நிலையத்தில் புதிய குழுவுக்கு வரவேற்பு - பூமிக்கு திரும்ப தயாராகும் சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நாசா குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று 9 மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன.
வெறும் 8 நாட்கள் பயணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்கு இந்த குழு சென்றது. அந்த விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, இக்குழு தங்களின் திட்டப்படி திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலமாக புதிய குழுவினர் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ள நிலையில், 2 நாட்களில் சுனிதா மற்றும் புட்ச் பூமிக்கு தங்களது பயணத்தை தொடங்குவார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக பணியாளர்களான நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ், விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் சேர்ந்து இவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர்.
அவர்களுக்குப் பதிலாக, தற்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்களும் அங்கு பணிகளைத் தொடர்வார்கள்.
இவ்விரு குழுக்களுக்கான பணிப்பரிமாற்றம் 2 நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு பழைய குழுவினர் பூமிக்குத் திரும்பும் பயணத்தை மேற்கொள்வார்கள். ஆனால், பூமியில் பாதுகாப்பான மறு நுழைவுக்கான சூழ்நிலைக்காகக் காத்திருக்க நேரிட்டால், இன்னும் சிறிது தாமதம் ஏற்படலாம் என்று சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் மேலாளர் டானா வெய்கல் கூறினார்.
"புட்ச் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று நாசாவின் வணிகக் குழு திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)