தெலுங்கு மக்கள் திருவண்ணாமலைக்கு வருவது ஏன்? ஆன்மிக நாட்டம் எப்போது தொடங்கியது?

- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இப்போது தெலுங்கு மக்களிடையே, திருவண்ணாமலைக்கு செல்லும் யாத்திரை மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் ('மஹாத்மியம்') குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.
பக்தி சேனல்களில், இந்து மதக் கூட்டங்களில், அதைவிட முக்கியமாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து விவாதிக்கப்படும் தலைப்பாக திருவண்ணாமலை உள்ளது.
சமீப காலமாக, திருவண்ணாமலை பகுதி தெலுங்கு மொழி பேசும் மக்களால் நிரம்பியுள்ளதாக சில இடங்களில் செய்திகள் வந்துள்ளன. தெலுங்கு மக்கள் திருவண்ணாமலையைப் பற்றி சமீபத்தில்தான் அறிந்துகொண்டார்கள் என்று பலரும் நம்புகிறார்கள்.
ஆனால், தெலுங்கு மக்கள் திருவண்ணாமலையைப் பற்றி பல ஆண்டுகளாகவே நன்கு அறிந்து வைத்துள்ளனர். இது அவர்களுக்குப் புதிதல்ல.
பக்தர்கள் அருணாச்சலத்தை (திருவண்ணாமலை) இந்துக்கள் நம்பும் ஐந்து புனித லிங்கங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள். அவற்றில் ஒன்றான ஸ்ரீகாளஹஸ்தி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு லிங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
ஆன்மிகவாதிகளின் சமீபத்திய உரைகளுக்கு முன்பே, தெலுங்கு மக்கள் திருவண்ணாமலை மீது ஈர்க்கப்பட்டனர். அதற்கான காரணம் ரமண மகரிஷி.

பட மூலாதாரம், SRI RAMANASRAMAM
பல ஆண்டுகளுக்கு முன்பு, ரமண மகரிஷியின் மீது கொண்ட பக்தியால், சில தெலுங்கு குடும்பங்கள் தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் குடியேறினர். இன்றும் அவர்கள் சிலரை அங்கு காணலாம்.
அங்குள்ள ஆசிரமங்களிலும் முதியோர் இல்லங்களிலும் பல தெலுங்கு மக்கள் வசிக்கின்றனர். 1960, 1970களிலிருந்தே அவர்கள் திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
அவர்கள் பெரும்பாலும் அருணாச்சலேஸ்வரர் மீது பக்தி கொண்டவர்கள். அதேபோல், அந்தப் பகுதியில் வாழ்ந்த ரமண மகரிஷி மற்றும் சேஷாத்ரி சுவாமி போன்ற துறவிகளையும் அவர்கள் கடவுள்களைப் போலவே மதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் ரமண மகரிஷியின் மீது கொண்ட ஈர்ப்பால் அங்கு செல்கிறார்கள்.
கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்த குடிபதி வெங்கடாசலம் மற்றும் ஜின்னூர் நன்னகரு போன்ற பிரபல தெலுங்கு எழுத்தாளர்கள், ரமண மகரிஷியின் புகழை தெலுங்கு மக்களிடம் பரப்ப உதவினர்.
திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சில தெலுங்கு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாசிரியர் பாலமுருகன் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த வரலாற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் கூட, தெலுங்கு மண்ணிலிருந்து ஆன்மீகப் பயணமாக திருவண்ணாமலைக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை, பல தசாப்தங்களாக அதிகமாக உள்ளது.
சட்டெனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 64 வயதான அருணாச்சலம், தனக்கு ஏழு வயதாக இருந்தபோது திருவண்ணாமலைக்கு முதன்முதலில் சென்றதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
"நான் 1961-இல் பிறந்தவன். 1968-இல் ஏழு வயதில் முதன்முதலாக திருவண்ணாமலைக்கு வந்தேன். என் அப்பா எழுத்தாளர் வெங்கடாசலத்தின் தீவிர ரசிகர். அவரை நேரில் பார்த்தேன், கூட விளையாடினேன். என் பெற்றோர் வருடத்திற்கு நான்கு முறை வருவார்கள். 2009-ல் என் மனைவி இறந்த பிறகு, ஒவ்வொரு மாதமும் இங்கு வருவது ஒரு பழக்கமாகிவிட்டது." என்று பகிர்ந்துகொண்டார் அருணாச்சலம்.
1972-73 பகுதியில் தனது தந்தை பேருந்துகளை ஏற்பாடு செய்து குண்டூரிலிருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு பக்தர்களை அழைத்து வந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.
2019 ஆம் ஆண்டில், தனது சொந்த ஊரான குனிப்புடியிலிருந்து 645 கிலோமீட்டர் தூரம் 16 நாட்கள் நடந்து சென்று திருவண்ணாமலையை அடைந்ததாகவும் அவர் கூறினார்.

மேற்கு கோதாவரி மாவட்டம், பாலகொல்லுவைச் சேர்ந்த உஷா, ஜின்னூர் நன்னகாரு என்ற ஆன்மீக குருவின் சொற்பொழிவுகள் மூலம் ரமண மகரிஷியின் ஆசிரமத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டார்.
இப்போது, அவர் தனது கணவர் ரங்கராஜுவுடன் திருவண்ணாமலையில் வசிக்கிறார்.
"ஜின்னூர் நன்னகாரு, ரமண மகரிஷியின் 'அக்ஷரமாலா' நூலைப் படிக்கச் சொன்னார். நான் முதன்முறையாக 1984 அக்டோபரில் அருணாச்சலத்திற்கு (திருவண்ணாமலை) வந்தேன். அன்றிலிருந்து, ஒவ்வொரு வருடமும் வர ஆரம்பித்தோம்.
நாங்கள் இங்கே இருக்கும் நாட்கள் முழுவதும், ஒவ்வொரு நாளும் கிரி வலம் செய்தேன். அதிகாலை 2 மணிக்கு நடைபயணம் தொடங்கி, 5 மணிக்குள் கோயிலை அடைந்து அங்குள்ள பிரார்த்தனைகளில் பங்கேற்போம். பின்னர் ரமண ஆசிரமத்திற்குச் செல்வோம். ஸ்கந்தாஸ்ரமத்திற்கும் தினமும் செல்வோம்.
பகவான் ரமண மகரிஷியைப் பற்றி கேள்விப்பட்டதும், இங்கேயே வாழ வேண்டும் என்ற ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது. எனது கடமைகளை முடித்த பிறகு, ஜின்னூர் 2017-ல் காலமானபோது, 2018-ல் என் கணவர் ரங்கராஜுவுடன் இங்கு குடியேறினேன்," என்று உஷா பிபிசியிடம் கூறினார்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சியாமளா, தன் தொழில்களை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, இப்போது பெரும்பாலும் திருவண்ணாமலையில் வசிக்கிறார்.
"சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு, என் ஆன்மீக குருவான ஜின்னூருடன் திருவண்ணாமலைக்கு வந்தேன். அன்றிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். விசாகப்பட்டினத்தில் ஒரு ரமண மையத்தை நிறுவியுள்ளேன். திருவண்ணாமலையில் உள்ள ஆந்திர ஆசிரமத்திற்கும் நாங்கள் நன்கொடை அளித்துள்ளோம். எனக்குத் தெரிந்த அனைவரிடமும், குறைந்தபட்சம் ஒருமுறை திருவண்ணாமலைக்கு செல்லுமாறு கூறுகிறேன்," என்று சியாமளா பிபிசியிடம் கூறினார்.
ஓய்வு பெற்றவர்கள் மட்டுமல்ல. சில இளைஞர்களும் திருவண்ணாமலைக்கு வந்து, அங்கேயே வாழத் தொடங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், SRI RAMANASRAMAM
அனந்தபூரைச் சேர்ந்த 40 வயதான மகேந்திரநாத் ரெட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருவண்ணாமலையில் குடியேறினார். தற்போது அவர் வீட்டிலிருந்தே ஐடி துறையில் வேலை செய்கிறார்.
"என் நண்பரின் தந்தை பகவான் ரமண மகரிஷியின் பக்தர். நான் 9, 10-ம் வகுப்புகளில் நண்பருடன் சேர்ந்து படிக்கும்போது, அவரது வீட்டில் ரமண மகரிஷியின் புகைப்படத்தைப் பார்த்தேன். 19 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தகம் படித்த பிறகு, அவர் மீது எனக்கு ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் என் வாழ்க்கையாக மாறினார்.
நான் திருவண்ணாமலையில் குடியேற முடிவு செய்தபோது, சிலர் 'இவர் சந்நியாசம் மேற்கொள்ளப்போகிறேன் என்று பயந்தார்கள். ஆரம்பத்தில் என் குடும்பத்தினர் இங்கு பழகுவதற்கு சிரமப்பட்டனர். ஆனால் இப்போது எல்லாம் நன்றாகவே இருக்கிறது. பகவான் ரமண மகரிஷிக்காகத்தான் நான் இங்கு வந்தேன். அவர் தான் என் வாழ்க்கை," என்று மகேந்திரநாத் ரெட்டி பிபிசியிடம் கூறினார்.
மாலையில் அருணாச்சலத்தில் (திருவண்ணாமலை) உள்ள ரமணாஸ்ரமத்திற்குச் சென்றால், தெலுங்கு பேசும் பலரை நீங்கள் காணலாம்.
ரமணாஸ்ரமம் மட்டுமல்ல, சேஷாத்ரி சுவாமிகளுக்கும் தெலுங்கு பக்தர்கள் உள்ளனர். அவருடைய ஆசிரமமும் அதற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
பொதுவாக, இந்த வழியைப் பின்பற்றுபவர்கள் ஆன்மீகப் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சிலர் இலக்கியம் வழியாகவும் இங்கு ஈர்க்கப்படுகிறார்கள்.

1879-ஆம் ஆண்டு திருச்சுழியில் வெங்கட்ராமன் ஐயராகப் பிறந்த ரமணர், ஆன்மீக உலகில் ரமண மகரிஷி என்ற பெயரில் புகழ்பெற்றார். பக்தர்கள் அவரை பகவான், ரமணர் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கிறார்கள்.
1896-ல், திருவண்ணாமலைக்கு வந்த அவர், அதன்பிறகு, அங்கேயே தங்கினார். 1922 முதல் 1950-ல் அவர் இறக்கும் வரை, ரமண ஆசிரமத்தில் தங்கியிருந்தார். இந்த ஆசிரமமே இன்று அவரது சமாதியை தாங்கி, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆன்மீகத்தின் மீது ஆர்வமுள்ளவர்களை ஈர்க்கும் புனித இடமாக உள்ளது.

'தன்னைப்' பற்றிய அறிவும் 'மௌனத்தின்' முக்கியத்துவமும் அவரது போதனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேபோல் அவர் தெலுங்கில் பேசவும், எழுதவும் செய்தார்.
இப்போது, ரமண ஆசிரமம் அவரது கையால் எழுதப்பட்ட தெலுங்கு பிரதிகளை ஸ்கேன் செய்து, தெலுங்கு பக்தர்களுக்காக புத்தகங்களை வழங்குகிறது.
ஆந்திராவும் தமிழகமும் ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்திலிருந்தே அவருக்கு இங்கு பக்தர்கள் உள்ளனர்.

குடிபதி வெங்கடாசலம் என்பவர் யார்?
குடிபதி வெங்கடாசலம், தெலுங்கு வாசகர்களுக்கு 'சலம்' என்ற பெயரில் அறிமுகமானவர். பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, பல்வேறு தீவிரமான, புதுமையான இலக்கியங்களை அவர் படைத்துள்ளார்.
இன்றும் அவரது படைப்புகள் இலக்கிய உலகில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்துகின்றன. பல பழமையான மரபுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அவரது எழுத்துக்களுக்கு கடுமையான எதிர்ப்பும் இருந்தது.
தனது இறுதிக் கட்டத்தில், ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்ட சலம், திருவண்ணாமலைக்குச் சென்று அங்கேயே குடியேறினார். அவரது சமாதியும் அங்கே அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு, அவரது மகளும் சந்நியாசம் ஏற்றுக்கொண்டார். சலத்தின் எழுத்துக்களுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக, பல தெலுங்கு பக்தர்கள் திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்குச் செல்லத் தொடங்கினர்.

ஜின்னூர் நன்னகாரு என்பவர் யார்?
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜின்னூரைச் சேர்ந்த பூபதி ராஜா வெங்கடலட்சுமி நரசிம்ம ராஜு, அவரது பக்தர்களால் 'ஜின்னூர் நன்னகாரு' என்று அழைக்கப்படுகிறார்.
1957 ஆம் ஆண்டு முதல் ரமண மகரிஷி மீது அவருக்கு பக்தி இருந்ததாகவும், 1959 ஆம் ஆண்டு முதன்முதலில் திருவண்ணாமலைக்குச் சென்றதாகவும் அவரது பக்தர்கள் கூறுகின்றனர்.
தெலுங்கு கலாச்சாரத்தில் ரமணர் மீதான பக்தியை ஊக்குவித்த அவர், 1984-85 க்கு இடையில் ஜின்னூரில் ரமண க்ஷேத்திரம் கட்டினார். பின்னர், திருவண்ணாமலையில் ஆந்திரா ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றையும் கட்டினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
























