இலங்கை நெருக்கடி: "ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும்"

இலங்கை நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இன்றைய (மே 27) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

இலங்கை அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கையினால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமை ஏற்படும் என, தேசிய விவசாய ஒருங்கிணைப்பின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தவறான விவசாய கொள்கையினால் தற்போது முழு விவசாயத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டுக்கு மட்டும் 33 லட்சம் மெட்ரிக் அரிசி இறக்குமதி செய்யப்படும். டாலர் நெருக்கடி காரணமாக உணவு பொருட்களின் இறக்குமதியும் எதிர்வரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படலாம்.

எதிர்வரும் காலங்களில் பெரும் உணவு தட்டுப்பாடு ஏற்பட போகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வெறும் பேச்சளவில் மட்டும் குறிப்பிட்டுக் கொள்கிறதே தவிர செயல் ரீதியில் முன்னேற்றகரமான வகையில் எவ்வித தீர்மானங்களையும் செயற்படுத்தவில்லை.

உணவு தட்டுப்பாடு தீவிரமடைந்தால் எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலப்பகுதியில் மக்கள் உனவின்றி பட்டினியால் உயிரிழக்கும் அவலநிலை ஏற்படும்.

ஆகவே, பொதுமக்கள் வெற்று நிலங்களில் தங்களால் முடிந்தவரை வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது அத்தியாவசியமானது. தமக்கான உணவு பொருட்களை தாமே உற்பத்தி செய்துகொண்டால் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை இயன்ற வரையில் எதிர்கொள்ளலாம்" என தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் கடந்த 9ஆம் தேதி காலி முகத்திடல் பகுதி மற்றும் கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சிஐடி 3 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்ததாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில், "அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற குழப்ப நிலை, அதனையடுத்து காலி முகத்திடலில் அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக மூத்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்" என கூறப்பட்டுள்ளது.

அந்த உயரதிகாரி, "குற்றத்தடுப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இருப்பிடத்துக்குச் சென்று வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும்" தெரிவித்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

"2023 ஜூலை வரை தேவையான மருந்துகள் பெற்றுக்கொடுக்கப்படும்"

இலங்கை நெருக்கடி

ஜூலை 2023 வரை இலங்கைக்கு போதுமான மருத்துவப் பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என, இலங்கைக்கான உலக சுகாதார மையத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை, வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கலாநிதி. அலகா சிங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது, தற்போதைய சுகாதாரம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கான உலக சுகாதார மையத்தின் முழுமையான ஆதரவை கலாநிதி. சிங்கை உறுதிப்படுத்தியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையத்திடமிருந்து, குறிப்பாக இலங்கையிலுள்ள நாட்டுக்கான அலுவலகம் மற்றும் தற்போதைய சுகாதாரம் சம்பந்தப்பட்ட சவால்களின் நிலையைக் கையாள்வதில் அரசாங்கத்துக்கு உதவுவதற்கு பல வெளிநாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள வலுவான, நிலையான மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தின் உண்மையான பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: