You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இலங்கையில் பாஜக கிளை 100 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் நடக்கலாம்"
இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் தமது அரசியல் கிளையை விரிவுபடுத்த உத்தேசித்துள்ள இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் வெளியிட்ட கருத்து, இலங்கையில் தொடர்ந்து பேசு பொருளாகி வருகிறது.
இந்த விவகாரத்தில், இலங்கை மீது கண் வைப்பதற்கு முன்பாக முதலில் இந்தியாவிற்குள் முழுமையாக ஆட்சி அமைய பாஜக முயற்சிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், பாரதிய ஜனதா கட்சி வென்று அங்கெல்லாம் ஆட்சி அமைக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அது சாத்தியமான பிறகே, இந்தியாவிற்கு வெளியில் இருக்கக்கூடிய இலங்கையில் ஆட்சி அமைப்பது பற்றி அக்கட்சி கவலை கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
வேண்டுமானால், சுமார் 100 வருடங்களுக்கு பிறகு இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கலாம் என மனோ கணேசன் கூறினார்.
இந்த விடயத்தில் நேபாளத்தில் தனது கிளையை பாஜக விரிவுபடுத்துவது தொடர்பில் நான் கருத்து வெளியிட போவதில்லை என்றும் அது எனது வேலை கிடையாது என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை, பாரதிய ஜனதா கட்சியில் வளர்ந்து வரும் இந்தியாவின் திரிபுரா மாநில முதலமைச்சரை பார்த்து, ஒருபுறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் அவரது எண்ணத்தை ரசிப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதில்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் தனித்துவம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய கட்சிகள் வருவதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ள தாம் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் கிளை விரிவாக்கம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரிலான கட்சியின் ஊடாகவே, இலங்கையில் இணைந்து வடகிழக்கில் தமிழ் மக்களின் இறைமை ஏற்றுக்கொள்ளப்படுவதாக இருந்தால், அந்த கட்சியை தாம் வரவேற்பதாக அவர் கூறினார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களே ஆள வேண்டும். ஒருவேளை தமிழர்களின் பகுதிகளுக்கு அவ்வாறான கட்சிகள் வருவதாக இருந்தால், அதனை தாம் எதிர்க்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
"சிங்கள மக்களின் இறைமைகள், சிங்கள மக்களின் சுயாதீபத்தியம், சிங்கள மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள், சிங்கள மக்களின் மொழி ஆகியவற்றை நான் அங்கீகரிப்பேன். அதேபோன்று, தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாடு, சுயாதீபத்தியம், இறைமை, தமிழ் தேசியகம், மொழி ஆகியவற்றை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்."
இவ்வாறான விடயங்களை அங்கீகரிக்கும் கட்சியொன்று, ஆரம்பிக்கப்படுவதாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்வேன் என்று சிறிதரன் குறிப்பிட்டார்.
நாடு விட்டு நாடு வந்து, அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாரதிய ஜனதா கட்சி கொண்டிருக்கவில்லை. எனினும், இலங்கை அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு செய்தியை கூறக்கூடிய வகையில் இந்த விடயத்தை அக்கட்சியை சேர்ந்த மாநில முதல்வர் தெரிவித்திருக்கலாம்.
எவ்வாறாயினும், பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் இலங்கையில் கட்சி ஆரம்பிக்கப்பட்டு,அதனூடாக தமிழர்களுக்க தீர்வொன்று கிடைப்பதாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று சிறிதரன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- பிபிசி ஸ்போர்ட்ஸ் ஹேக்கத்தான் என்றால் என்ன?
- இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்
- தமிழக தேர்தல்: 1957இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
- வீடுகட்ட வைத்திருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை கரையான் தின்ற சோகம்
- ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?
- புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: