காங்கோ ஜனநாயக குடியரசில் எரிமலை வெடிப்பு: பொங்கும் எரிமலைக் குழம்பு, அச்சத்தில் மக்கள்

நியாயிராகாங்கோ என்னும் அந்த மலையிலிருந்து தீக்குழம்பு பொங்கி வருவதில் வானம் சிவந்து காணப்பட்டது. இந்த எரிமலை வெடிப்பால் கோமா என்ற நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்,

    இன்று காலை முதல் பல முக்கிய செய்திகள் குறித்து இந்த பக்கத்தில் வழங்கியிருந்தோம். இத்துடன் இந்த நேரலை நிறைவடைகிறது. இணைந்ததற்கு நன்றி.

  2. இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து

    ஞாயிறன்று இத்தாலியின் வடக்கு பகுதியில் மகியோரே என்ற ஏரிக்கு அருகில் உள்ள மலையின் மீதிருந்த கேபிள்கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 2 குழந்தைகள் பலத்த காயமடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சேதமடைந்த கேபிள்கார்அடர்ந்தகாட்டுப்பகுதியில் மிக ஆழத்தில் வீழ்ந்திருப்பது தெரிகிறது.

    இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஐந்து வயது மற்றும் ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  3. 10 நாட்களுக்கு பிறகு சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை துவங்கியது

    சென்னை டூ சேலம் விமான சேவை 10 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இன்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு ட்ரூ ஜெட் விமானம் வந்து சென்றது.

    சென்னையில் இருந்து 16 பயணிகளுடன் சேலம் வந்த விமானம் மீண்டும் சேலத்தில் இருந்து 16 பயணிகளுடன் சென்னை திரும்பியது.

    குறைவான பயணிகளே வந்தனர்.இனி வழக்கம் போல் விமானம் இயக்கப்படும் என ட்ரூ ஜெட்விமான சேவை அதிகாரிகள் தகவல் தெவிந்தனர்

  4. காங்கோவில் எரிமலை வெடித்து பொங்கும் தீக்குழம்பு தப்பிச் செல்லும் மக்கள்

    congo

    பட மூலாதாரம், GETTY IMAGES

    congo

    பட மூலாதாரம், EPA

    காங்கோ ஜனநாயக குடியரசில் நேற்றிரவு பெரிய எரிமலை ஒன்று வெடித்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனர்.

    நியாயிராகாங்கோ என்னும் அந்த மலையிலிருந்து தீக்குழம்பு பொங்கி வருவதில் வானம் சிவந்து காணப்பட்டது.

    இந்த எரிமலை வெடிப்பால் கோமா என்ற நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

    இதற்கு முன்பு இந்த எரிமலை 2002ஆம் ஆண்டு வெடித்தது. அதில் 250 பேர் உயிரிழந்தனர் மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

    சமீபத்திய இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. மேலும் எத்தனை வீடுகள் இதில் சேதமடைந்துள்ளன என்பது குறித்தும் தகவல் இல்லை.

  5. இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித், மனைவிக்கு கொரோனா

    இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  6. இலங்கையில் றிசாட் கட்சி எம்.பி.க்கள் கட்சியை விட்டு நீக்கம்

    இலங்கையில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக, அந்தக் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில், இடைநிறுத்தப்பட்டவர்களில் ஒருவரான அலிசப்றி ரஹீம் எம்.பி, - தான் அந்தக் கட்சியின் உறுப்பினரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

  7. புதுவையில் ஊரடங்கு நீட்டிப்பு

    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

    இந்த நிலையில், ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த தளர்வுகளுடன் கூடிய‌ ஊரடங்கை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

  8. சுஷில்குமார் கொலை வழக்கில் கைது

    இரண்டு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில்குமார் சக மல்யுத்தவீரரை கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    23 வயது இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணா மற்றும் அவரது இரண்டு நண்பர்களை டெல்லி சத்ரசால் ஸ்டேடியத்தில் கடந்த மே 4-ம் தேதி சுஷில்குமாரும் அவரது கூட்டாளிகளும் தாக்கியதாகவும், அதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதில் சாகர் ராணா மட்டும் உயிரிழந்ததாகவும் டெல்லி போலீஸ் வழக்குத் தொடர்ந்தது.

    இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவந்த சுஷில்குமார் இன்று மே 23 காலை டெல்லி முண்ட்கா பகுதியில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது டெல்லி போலீஸ்.

    sushil kumar muder arrest

    பட மூலாதாரம், Getty Images

  9. 'சாமியார் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்'

    பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் சாமியாருமான பாபா ராம்தேவ் "இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அல்லது ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர்; அலோபதி மருத்துவ முறை அறிவிலித்தனமானது, காலாவதியானது," என்று கூறும் காணொளி ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாகி வருகிறது.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கம் தாம் கூறிய கருத்தை, சாமியார் ராம்தேவ், திரும்பப் பெற வேண்டும் என்றும் அதற்காக எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ சங்கத்தின் 3.5 லட்சம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா மெடிகல் அசோஷியேஷன் எனும் அமைப்பும் அவருக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

    ராம்தேவின் கூற்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, திரிக்கப்பட்டுள்ளது என்று பதஞ்சலி நிறுவனம் கூறியுள்ளது.

    பாபா ராம்தேவ்

    பட மூலாதாரம், Getty Images

  10. இந்திய திரிபுக்கு எதிராக கோவிஷீல்டு, ஃபைசர்

    ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராசெனீகாமருந்து நிறுவனமும் தயாரித்த கொரோனா தடுப்பூசியும், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியும் இந்தியாவில் கண்டறியப்பட்ட, B1.617.2 கொரோனா வைரஸ் திரிபுக்கு எதிராக 80 சதவிகித்தைவிட அதிக வீரியத்துடன் செயல்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    இங்கிலாந்து அரசு நடத்திய இந்த ஆய்வில் இந்த இரண்டு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்டால் அவை பிரிட்டன் வகை திரிபுக்கு எதிராக 87% பாதுகாப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி இந்தியாவில் 'கோவிஷீல்டு' எனும் பெயரில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

  11. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    சர்வதேச அளவிலும், இந்திய மற்றும் இலங்கை அளவிலும், தமிழ்நாட்டிலும் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை உங்களுக்கு இந்தப் பக்கத்தில் செய்தியாகத் தொகுத்து வழங்குகிறோம்.