You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மமதா ஆதரவு
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், அங்கு நடக்கும் நிகழ்வுகளுக்கு மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் ஜனநாயகத்தின் மீது புல்டோசர் இயக்கப்படுகிறது என்று மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
எம்.ஆர். ஷோபனா
நேயர்களுக்கு நன்றி!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது.
இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- ஆப்கானிஸ்தானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 1000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளிடம் தாலிபன் உதவி கோரியுள்ளது.
- தமது மகன் ரவீந்திரநாத், அதிமுகவில் உள்ள தமது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் டெல்லி புறப்பட்டுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
- அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
- பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
- ஜி7 மாநாட்டில் பங்கேற்க வரும் 26 – 27 ஆகிய தேதிகளில் ஜெர்மனி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோதி
- மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், தங்களது கட்சி இன்றும் வலுவான நிலையில் உள்ளது என்று சிவசேனை எம்.பி சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
- தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 1063ஆக பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- பிரதமர் நரேந்திர மோதியை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மூ சந்தித்து பேசினார்.
- எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழ் இணையதளம், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.
திரெளபதி முர்மூ பாஜக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரானது எப்படி?
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: கன மழையால் மோசமாகி வரும் மீட்பு நடவடிக்கைகள்
ஆப்கன் நிலநடுக்கம்: மீட்பு நடவடிக்கைகளை சிக்கலாக்கும் கன மழை, மோசமான வசதிகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையை கனமழை மற்றும் போதிய மனித ஆற்றல் இல்லாதது மேலும் சிக்கலாக்கி வருகிறது.
கடினமான நிலப்பரப்பு காரணமாக அங்கு நிவாரணம் மற்றும் மீட்புப் பணி களத்தில் உள்ள மீட்புதவி ஊழியர்களுக்கு சிரமமாக உள்ளது.
ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பு ஏற்கெனவே மோசமாக உள்ளது. அது தற்போதைய பேரழிவு பிரச்னைகளை மேலும் தீவிரமாக்கியுள்ளது. நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில், தாலிபன் நிர்வாகம் சர்வதேச உதவி நிறுவனங்களிடம் உதவி கோரியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டிகா மாகாணத்தின் தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும் பணிகளை தன்னார்வ அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கொண்டுள்ளன.
"என் மார்பகங்கள் குறித்து பெருமை அடைகிறேன்" முன்னாள் இலங்கை எம்.பி. ஹிருணிகா
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மமதா ஆதரவு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 771 ஆக பதிவாகியிருந்த நிலையில், இன்று 1063 ஆக பதிவாகியுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 1063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 497 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5174ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 567 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு: டெல்லி செல்வது ஏன்? ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
மிரட்டல் புகாரில் பாஜகவைச் சேர்ந்த சூர்யா கைது - அண்ணாமலை கண்டனம்
தனியார் பேருந்து நிறுவன உரிமையாளரை மிரட்டிய புகாரில், திருச்சி சிவாவின் மகனும் பாஜகவைச் சேர்ந்தவருமான சூர்யா கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “ ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது மாநில அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று மு.க ஸ்டாலின் மற்றும் மமதா பானர்ஜி ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது என குறிப்பிட்டுள்ள அவர், தங்கள் நேரம் வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
மகளிர் கிரிக்கெட் - இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி தம்புல்லாவில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்ய இலங்கை அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, மூன்று டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
திருச்செந்தூர் அருகே 2 டன் பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே உள்ள ஓடக்கரை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் பீடி இலைகளை கடலோர காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்செந்தூர் கடலோர காவல் உதவி ஆய்வாளர் கோமதிநாயகத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, கடலோர காவல்துறை கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓடக்கரை கடற்கரையில் சரக்கு வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனை சோதனை செய்ததில், அதில் 82 சாக்கு மூட்டைகளில் 2460 கிலோ பீடி இலைகள் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுடலைமுத்து(26) என்பவரை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மிரட்டல் புகார் - திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது - அண்மையில் பாஜகவில் சேர்ந்தவர்
தனியார் பேருந்து நிறுவன உரிமையாளரை மிரட்டிய புகாரில், திமுக மாநிலங்களவை எம். பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை காவல்துறை கைது செய்துள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து ஒன்று, தனது கார் மீது மோதியதாக சூர்யா பணம் கேட்டு மிரட்டியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரில் சூர்யாவை கைது செய்து திருச்சி கன்டோன்மெண்ட் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: உத்தவ் தாக்கரேவை ஆதரிக்கும் மமதா பானர்ஜி
மகாராஷ்டிராவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியுள்ளதாக ஏ. என். ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், “உத்தவ் தாக்கரேவுக்கும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று (பாஜக) நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். பணம், ஆட்கள் பலம், மாஃபியா பலம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், ஒருநாள் நீங்களும் அதிகாரத்தை விட்டு செல்ல வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைப்பார்கள். இது தவறு. இதை நான் ஆதரிக்க மாட்டேன்,” என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
கடலூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் எம்.புதூர் பகுதியில் வனிதா மோகன்ராஜ் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. வழக்கம் போல பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் இன்று காலை முதல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பிற்பகல் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காயமடைந்த 2 பேரை மீட்டு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், கடலூர் மாவட்டம் பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு: தமிழ்மகன் உசேன் யார்? அவைத் தலைவர் நியமனம் எடப்பாடிக்கு துருப்பு சீட்டா?
அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம்
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும், பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை, தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பொதுக்குழுவே செல்லாது என்றும் அவர் செய்தியாளர்களிடம் இன்று பிற்பகலில் தெரிவித்தார்.
மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம்: தொழிலாளர்கள், விவசாயிகள் எதிர்ப்பது ஏன்?
சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி - அரசு உத்தரவு
பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த திரெளபதி முர்மூ
பிரதமர் நரேந்திர மோதியை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மூ சந்தித்து பேசினார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது ட்வீட்டர் பக்கத்தில், “குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மூ தேர்வு செய்யப்பட்டது சமூகத்தில் அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அடிப்படை பிரச்னைகள் குறித்த அவரது புரிதலும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அவருடைய பார்வையும் சிறப்பு வாய்ந்தது,” என்று தெரிவித்துள்ளார்.