You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

யுக்ரேனில் 38 இடங்களில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்

யுக்ரேன் நாட்டின் ராணுவ கிடங்கு, கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட தாக்குதல் இலக்குகள் 38ல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. இலங்கை வரலாறு: மஹிந்த பிரதமரான 'அரசியல்' - ராஜபக்ஷக்கள் வளர்ந்த கதை

  2. இன்றைய நேரலை நிறைவு பெறுகிறது

    வணக்கம். இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இது வரையிலான முக்கிய நிகழ்வுகள்.

    • இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 3,157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,500 ஆக இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
    • யுக்ரேனில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டு பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
    • மன அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் மோதிக்கொண்டார்களா? ஹீரோசத்தில் மோதிக் கொண்டார்களா? என்று கேள்வி எழுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
    • கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை தாக்கி அழித்ததாக யுக்ரேன் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
    • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் சிறப்பு குழு, முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் விசாரணை நடத்தியது.
    • இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
    • மக்கள் நல்லாட்சியை நோக்கி பயணிக்க உள்ளேன் என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
    • கடலூர் மாவட்டம் கண்டமங்கலத்தில் கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலணியால் தாக்கியதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர்‌ கைது செய்யப்பட்டுள்ளார்.
    • இலங்கை நெருக்கடி: உணவு, மருந்துகள் அனுப்பி உதவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இலங்கை எம்.பிக்கள் சுமந்திரன், ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளனர்.
    • இந்திய பிரதமர் மோதியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகத்தால், மின்சாரம், வேலை, பணவீக்க நெருக்கடி என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
    • இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அலுவலக ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தருண் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டணப் பிரவேச நிகழ்வில், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    • நாமக்கல்லில் லாரி ஓட்டுநரின் மகளை கடத்திய கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • இந்தியா ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற தமிழ்நாடு அணியினர் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.
    • பிரதமர் நரேந்திர மோதி ஐரோப்பாவின் மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் முதலாவதாக ஜெர்மனி சென்றடைந்துள்ளார்.
    • சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை எனவும், ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி ஏற்றோம் எனவும், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.
    • தடுப்பூசி கட்டாயம் என்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
    • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குறிப்பாக, யுக்ரேன் மற்றும் இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய பிபிசி தமிழின் இணையதளம், ட்விட்டர், முகநூல், இண்ஸ்டாகிராம் பக்கங்களில் இணைந்திருங்கள்.

  3. உலக ஆஸ்துமா தினம்: ஆஸ்துமா பரம்பரை நோயா? தடுக்கும் வழிமுறைகள் என்ன ?

  4. பிரசாந்த் கிஷோருக்கு வாழ்த்து தெரிவித்த நவ்ஜோத் சித்து

    தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தனது சொந்த மாநிலமான பிகாரில் இருந்து புதிய தொடக்கத்தை மேற்கொள்வதாக சூசகமாக கூறியதை அடுத்து, பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அவரது புதிய முயற்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "முதல் அடியே யுத்தத்தில் பாதி தூரத்துக்கு சமம் நண்பரே... நல்ல ஆரம்பம் எப்போதுமே நல்ல முடிவைத் தரும்... நமது அரசியலமைப்பின் உணர்வை மதிக்கும் உங்களின் நேர்மையான முயற்சி எப்போதும் சிறந்தவை கிடைக்கட்டும்... 'மக்களின் சக்தி மக்களிடமே திரும்ப வேண்டும்', பன்மடங்கு வர வேண்டும்...," என்று சித்து தெரிவித்துள்ளார்.

    பல மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகத்தை உருவாக்குவதற்காக அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பிறகு அந்த கட்சியில் சேரவும் அதிகாரம் பெற்ற செயல் குழுவில் அங்கம் வகிக்கவும் காங்கிரஸ் மேலிடம் வழங்கிய முன்மொழிவை நிராகரித்தார்.

    அதே நாளில், பிரசாந்த் கிஷோருடன் தாம் இருக்கும் புகைப்படத்தை சித்து வெளியிட்டிருந்தார்.

    "எனது பழைய நண்பர் பிகே உடன் ஒரு அற்புதமான சந்திப்பு இருந்தது. பழைய மது, பழைய தங்கம் மற்றும் பழைய நண்பர்கள் எப்போதும் சிறந்தவர்கள் !!!" என்ற வரியை சித்து அந்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

  5. இலங்கை நெருக்கடி: பாதியாக குறைந்த ஆடை உற்பத்தி

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் பல்வேறு பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன. பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

  6. தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல தடை - கோட்டாட்சியர் உத்தரவு

    தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறும் பட்டணப் பிரவேச நிகழ்வில், பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி மறுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படும்.

    அப்போது, ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள், பக்தர்கள் பல்லக்கை சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    நடப்பாண்டில் தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திராவிடர் கழகத்தினரின் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்,

    இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

    மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த ராஜ் இந்நிகழ்ச்சியை தடை செய்திட கேட்டு அனுப்பிய அறிக்கையின் படியும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இன்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

  7. நாமக்கல்லில் சிறுமியை கடத்திய கணவன், மனைவி கைது

    நாமக்கல் - துறையூர் சாலை அலங்காநத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சரவணன்.

    இவரின் மனைவி கெளசல்யா; இந்த தம்பதியின் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

    கடந்த 1ம் தேதி குழந்தைகளுடன் வீட்டினுள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் சரவணன், கெளசல்யா ஆகியோரை கட்டிப்போட்டுவிட்டு அவர்களின் மகளை கடத்திச் சென்றனர். பின் அதிகாலையில் மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளி்த்தனர்.

    கெளசல்யாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிறுமியை விடுவிக்க வேண்டுமெனில் ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டுமென மிரட்டியுள்ளனர்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி உத்திரவின் பேரில் சிறுமியை மீட்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல் துறையினர் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், நேற்று காலை அலங்காநத்தம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இருவர் சிறுமியை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் இருவரையும் மடக்கிப் பிடித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஓட்டுநர் மணிகண்டன் அவரது மனைவி பொன்னுமணி என்று தெரியவந்தது. இருவரும் சரவணனிடம் கடன் வாங்கியுள்ளனர். அதனை திருப்பித் தர கால தாமதம் செய்து வந்தனர்.

    இருப்பினும் கடந்த சில தினங்களக்கு முன் இருவரும் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனர். அப்போது பொன்னுமணியை, சரவணன் தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் சரவணனை மிரட்ட அவரது மகளை கடத்திய விவரம் தெரியவந்தது.

    இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்

  8. கிராம சபையில் அதிகாரியை பெண் ஊராட்சி துணை தலைவர்‌ காலணியால் தாக்கியதாக புகார்: சாதிக் கோணமா?

  9. இந்திய ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு 2வது இடம் - முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 12வது இந்திய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, 2-ஆம் இடத்தைப் பிடித்தது.

    இதையடுத்து சென்னை அறிவாலயத்தில், சாம்பியன்ஷிப் போட்டியில் 2ம் இடத்தை வென்ற தமிழ்நாடு ஹாக்கி அணிவீரர்கள், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அப்போது, வீரர்கள் தாங்கள் வென்ற கோப்பையை முதலமைச்சரிடம் காட்டி மகிழ்ந்தனர். தமிழ்நாடு அணி வரலாறு படைத்திருக்கும் வெற்றிக்கு வாழ்த்துகள் என்று முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.

    இந்த சந்திப்பின் போது, தூத்துக்குடி எம்.பி கனிமொழி மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  10. பள்ளிகளில் மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்

    தமிழ்நாட்டில் மாணவர்கள் நலனுகென வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

    இதன்படி, பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். கல்வி, விளையாட்டுத் திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக, இந்திய, மாநில அளவில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

    கோடை விடுமுறையில் மலை சுற்றுலாத் தளங்களில் கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.

    செயல்வழிக்கற்றலை ஊக்கும்விக்கும் வகையில் பள்ளிகள் தோறும் காய்கறித் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.

    மாணவர் குறித்து பெற்றோர் கருத்தையும் ஆசிரியரின் கருத்தையும் இருதரப்பும் உணர்ந்து கொள்ளும் வகையில், மாதந்தோறும் பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்பு பள்ளி மேலாண்மைக் குழு உறுதுணையுடன் நடத்தப்படும்.

    போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் குறித்து விழிப்புணர்வு. மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையின் பேரில் நிபுணர்களைக் கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்படும்.

    மாணவர்களின் வாசிப்புத் திறனை ஊக்குவித்து அவர்தம் படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களுக்கென இதழ்கள் வெளியிடப்படும். உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

  11. பிரதமரின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அலுவலக ஆலோசகராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தருண் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தருண் கபூர், 1987 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, இமாச்சல பிரதேச கேடரைச் சேர்ந்தவர். பெட்ரோலியத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார்.

    அதேபோல் தற்போது பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ஹரி ரஞ்சன் ராவ், அதிஷ் சந்த்ரா ஆகியோர் பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  12. மாணவர்கள் மோதல்: ''மன அழுத்தமா? ஹீரோயிசமா? '' அமைச்சர் மகேஷ் கேள்வி

    மோதலில் ஈடுபடும் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    ''பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது.

    தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது. திருநெல்வேலியில் சாதிக் கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது.

    அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. மாணவர்களும் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும்.

    இரண்டு ஆண்டுகள் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக மாணவர்கள் மோதிக்கொண்டார்களா? ஹீரோசத்தில் மோதிக் கொண்டார்களா? சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை பார்த்து கற்றுக் கொண்டார்களா? என கேள்வி எழுந்துள்ளது என்றும் மகேஷ் கூறினார்.

    இது மாதிரியான சம்பவங்களை தடுக்க யுனிசெஃப் மூலம் 2.50 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுளது.'' என்றார்.

  13. ஜெர்மனியில் இந்திய பிரதமர் மோதி

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஜெர்மனிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார் மோதி. அந்நாட்டு அதிபர் ஓலப் ஸ்கால்சின் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் அவர். வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாட உள்ளார்.

    இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில், பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் செல்ல பிரதமர் மோதி திட்டமிட்டுள்ளார்.

  14. ரஷ்ய கப்பல்களை அழித்ததாக கூறும் யுக்ரேன்: ரஷ்யா மௌனம்

    கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் ரோந்து கப்பல்கள் இரண்டை தாக்கி அழித்ததாக யுக்ரேன் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

    யுக்ரேன் மீதான படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''இன்று அதிகாலை ஸ்மினி (பாம்பு) தீவு அருகே ரஷ்யாவின் ராப்டார் பிரிவு படகு இரண்டை, டிரோன் மூலம் தாக்கியதாக யுக்ரேன் ராணுவ ஜெனரல் வலேரி ஸலுஸ்னி தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்யா பதில் எதுவும் கூறவில்லை.

  15. யுக்ரேனில் 38 இடங்களில் ரஷ்யா தாக்குதல் - ராணுவ அதிகாரி தகவல்

    கிழக்கு டோன்யெட்ஸ்க் பகுதியில் வான் வழித் தாக்குதலில் யுக்ரேனின் மிக் 29 ரக போர் விமானத்தை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

    செய்தியாளார் சந்திப்பில் பேசிய ராணுவ செய்தித் தொடர்பு அதிகாரி இகோர் கொனேக்ஸேகோப் கூறுகையில், ''ரஷ்ய வான்படை இரண்டு ஏவுகணைகளையும் 10 ட்ரோன்களையும் தாக்கி அழித்துள்ளதாக'' தெரிவித்துள்ளார்.

    மேலும் ''யுக்ரேனில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும்'' அவர் தெரிவித்தார்.

    ரஷ்யா - யுக்ரேன் இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல், எதிர் தரப்புகான இழப்பு குறித்து தெரிவிக்கின்றன. இவற்றை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

  16. கேப்டனாக இருப்பவருக்கு ஊட்டிவிடுவது பயனளிக்காது - தோனி

  17. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏவின் உதவியாளரிடம் விசாரணை

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கை நீலகிரி காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் மற்றும் அவருடைய சகோதரர் சிபி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அடுத்த கட்டமாக அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில் வைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்தபட்டது.

    இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணசாமியிடம் காவலர் தேர்வு பள்ளியில் வைத்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  18. 'மக்கள் நல்லாட்சியை நோக்கி பயணம்' - பிரசாந்த கிஷோர்

    'மக்கள் நல்லாட்சியை நோக்கி பயணிக்க உள்ளேன்” என்று தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில். ''ஜனநாயகத்தில் அர்த்துள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை வடிவமைக்க உதவுவதற்கான எனது தேடல், ஏற்ற, இறக்கம் கொண்ட பயணமாக இருந்தது.'' என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உத்திகளை வகுத்து கொடுப்பார் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது இப்படி பதிவு செய்துள்ளார்.

  19. கடலூர்: கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரி மீது தாக்குதல் - ஊராட்சி துணைத் தலைவர் கைது

    கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரியை காலணியால் தாக்கிய ஊராட்சி மன்ற துணைத் தலைவர்‌ கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் ஒன்றியம் கண்டமங்கலம்(தனி) ஊராட்சியில் சிவகாசி கலியமூர்த்தி தலைவராக உள்ளார், துணைத் தலைவராக சரண்யா குமார் உள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து துணைக் தலைவர் சாதி ரீதியாக அடக்குமுறையைக் கையாள்வதாக தலைவர் சிவகாசி கலியமூர்த்தி புகார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் பங்கேற்றிருந்தார். அப்போது 2021-22ஆம் ஆண்டிற்கான ஊராட்சி வரவு செலவு பொது நிதி பற்றி பேசிக் கொண்டிருந்த போது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா குமார், திடீரென எழுந்து, தான் அணிந்திருந்த காலணியால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை தாக்கியுள்ளார்.

    அங்கிருந்து செல்ல முயன்ற சரண்யாவை பொதுமக்கள், தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யாவை கைது செய்தனர்.

  20. இலங்கை நெருக்கடி: உணவு, மருந்துகள் அனுப்பிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு இலங்கை எம்.பிக்கள் நன்றி

    இலங்கைக்கு உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை, நுவரெலியா, நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இலங்கை இராசாங்க அமைச்சர், ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதை ஒரு காணொளியாக ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார். இதேபோல் இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.