You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழக மழை: அவசியமற்ற நடமாட்டங்களை தவிர்க்க ஆளுநர் அறிவுரை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும், நாளை மிக கனமழை பெய்யும் என்றும் நாளை மறுநாள் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,இத்துடன் இந்த நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்த அனைவருக்கும் நன்றி.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.

    பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு அதிகன மழை - வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 11ஆம் தேதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  3. அரியலூர்-தொடர் கனமழையால் சேறும் சகதியுமான சாலை கொட்டும் மழையில் நாத்து நட்டு சாலையை சீரமைக்க கோரிக்கை, மணிவண்ணன், திருச்சி

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அறங்கோட்டை கிராமத்தில் வடக்கு தெருவில் உள்ள தார் சாலை தொடர் கன மழையால் சேறும் சகதியுமாக உள்ளது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது வரை சீரமைக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த சாலை சேறாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த சாலையில் காய்கறி உள்ளிட்ட வியாபாரிகள் யாரும் உள்ளே வருவதில்லை.

    அவசரத்திற்காக இருசக்கர வாகனங்களில் செல்ல முடிவதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

    ஆகையால் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்து சாலையை உள்ள சேர் சகதிகளை அகற்றி பயன்பாட்டு கொண்டுவர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  4. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை

    தமிழகத்தில் நீடிக்கும் மழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, மழை பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் வாழும் மக்கள் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்க ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

    தமிழ்நாட்டில் கன மழை பெய்யக்கூடும் என ஊகிக்கப்படுவதையொட்டி மக்கள் விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.

    மழை வெள்ளம் அதிகம் காணப்படும் இடங்களில் வசிப்பவர்கள் அத்தியாவசியமற்ற நடமாட்டங்களை தவிர்த்து அசம்பாவிதத்தை தவிர்க்குமாறும் அவர் தமது ஆளுநர் மாளிகையின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.

  6. தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    தமிழ்நாட்டில் மழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவரை தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  7. திருப்பனந்தாள் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்த பேருந்து - காவல்துறை விசாரணை, மணிவண்ணன், திருச்சி

    தமிழகத்தின் திருப்பனந்தாள் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து வயலுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரியலுாருக்கு சென்றது. அப்போது திருப்பனந்தாளை அடுத்த திருவாய்ப்பாடி திருப்பத்தில் தனியார் பேருந்து வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

    பேருந்து நிறுத்ததில் பயணிகள் நிற்பதை பார்த்து, பிரேக் போடுவதற்கு, டிரைவர் முயன்ற போது, பிரேக் பிடிக்காமல், சாலையின் ஒரத்தில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது. இதில் பேருந்தின் உள்ளே இருந்து 5க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக திருப்பனந்தாள் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, விபத்து நடந்த பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறாடா கோவி.செழியன், வயலில் பாய்ந்த பேருந்தை பார்வையிட்டு, உடனடியாக, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். காயம் அடைந்த பயணிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

  8. முல்லை பெரியாறு: ஜெயலலிதா பெற்றுத் தந்த உரிமையை தமிழக அரசு விட்டுத்தரக்கூடாது - ஓபிஎஸ், பிரபுராவ் ஆனந்தன்

    தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது பெற்றுத் தந்த முல்லைப் பெரியாறு அணையின் 142 அடி அளவுக்கு நீரை உயர்த்தும் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுத்தால் பல கோடி விவசாயிகளை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி கம்பம் நகரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பன்னீர்செல்வம், "தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய முல்லை பெரியாறு அணையின் உரிமையை தமிழக அரசும், கேரள அரசும் வஞ்சித்ததன் மூலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போராடிப் பெற்றுத் தந்த தீர்ப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது," என்று கூறினார்.

    முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை வைத்துக் கொள்ளலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் 138 அடியிலேயே தண்ணீரை திறந்துவிட்டுள்ளது கேரள அரசு. இதனால் அணையை சுற்றிய பகுதிகளில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.

    12 மரங்களை அகற்றிஅணையை பழுது நீக்கம் செய்வதற்கு கேரளா அரசாங்கத்திடம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது பலமுறை அனுமதி கேட்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அந்த வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் கேரளா அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை என்று கூறினார்.

    அந்த அணையை பழுது நீக்கம் செய்வதற்காக அன்றைய அதிமுக அரசு ரூ. 6 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியநிலையில், அது இன்று வரை நடக்காமலே உள்ளது என்று கூறினார் பன்னீர்செல்வம்.

    மேலும் பேபி அணையை வலுப்படுத்தி 142 அடி உள்ள முல்லைப் பெரியாறு அணையை 152 அடி தேக்கிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர் ஜெயலலிதா என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தமிழ் மக்களின் உரிமையை போராடிப் பெற்றுத்தந்த வரலாற்று சிறப்புமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா அரசும் தமிழக அரசும் மதிக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

  9. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மேலும் 2 நாட்களுக்கு விடுமுறை

    புதுச்சேரி, காரைக்காலில் கன மழை தொடருவதால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    இதன்படி நவம்பர் 10,11 ஆகிய இரு தினங்களுக்கு புதுச்சேரியில் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

  10. அம்மா உணவகத்தில் மழை முடியும்வரை இலவச உணவு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    தமிழ்நாட்டில் மலிவு விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் அம்மா உணவகத்தில் மழை பெய்து முடியும்வரை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  11. இலங்கையில் மழை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி

    இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க (காற்றழுத்த தாழ்வு நிலை) நிலைமை காரணமாக, 15 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

  12. இன்றும் இனி வரும் நாட்களிலும் மழை நிலவரம்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என்றும், நாளை (நவம்பர் 10) மிக கனமழை பெய்யும் என்றும் நாளை மறுநாள் (நவம்பர் 11) அதி கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுத் துறையின் தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியை நெருங்கும்போது அதி கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் பிற பகுதிகளில், எப்போது, எந்த அளவுக்கு மழை பொழியும் என செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த விவரங்களே கீழே உள்ள ஃபேஸ்புக் நேரலை இணைப்பில் அறியலாம்.

  13. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு, முரளிதரன் காசி விஸ்வநாதன்

    அரியலூர் பெரிய திருக்கோணத்தில் உள்ள மாமணக்கா ஏரியில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை நீக்க வேண்டுமென வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நீர் நிலைகளில் செய்யப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கூறப்பட்டிருந்த கருத்துகளை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    மேலும், மழை அதிகாரிகளுக்கு மேலும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளதாகவும் அதை முறையாகக் கற்று அடுத்தடுத்த மழைக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

    மக்கள் பாதி நாள் தண்ணீருக்காக தவிக்கிறார்கள்; மீதி நாள் தண்ணீரால் தவிக்கிறார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    சம்பந்தப்பட்ட ஏரி குறித்து அளிக்கப்பட்ட புகார் சரியாக வந்துசேரவில்லையென அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, மீண்டும் புகார் அளிக்கும்படி மனுதாரரிடம் கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தது.

  14. உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம், ஏ.எம். சுதாகர்

    இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியது.

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம், முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் இருப்பதால் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது . மேலும் கர்நாடகாவில் இருந்து கபினி மற்றும் கேஆர்எஸ் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி இன்று அதிகாலை முதல் அணையிலிருந்து தண்ணீர் 5000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக படிப்படியாக தற்போது வரை திறந்துவிடப்படுகிறது.

    மேலும் குப்பை மற்றும் கழிவுகள் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசாமல் இருக்க நுண்ணுயிர் கலவை கரைசலை அணையின் ஊழியர்கள் விசை படகு மூலமாக தெளித்து வருகின்றனர்.

    தற்போது அணையின் பாதுகாப்பை கண்காணிக்க இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வரும் வெள்ள கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

  15. அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், காரைக்கால் மாவட்டங்களின் சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை தெரிவிக்கிறது.

  16. இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

    தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கும் இந்திய வானிலை ஆய்வுத் துறை, உருவான 48 மணிநேரத்தில் தீவிரமடைந்து தமிழ்நாட்டின் வடக்கு கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என்று தெரிவித்துள்ளது.

  17. சென்னை வெள்ளம்; தமிழ்நாடு மழை நிலவரம்

    சென்னையில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்து வருவதால், தேங்கியுள்ள வெள்ள நீர் படிப்படியாக வடிந்து வருகிறது.

    இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனீ, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனத்த மழையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. பிற மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பெய்த மழை அளவு குறித்த வானிலை ஆய்வு மையத்தின் விவரங்கள் கீழே உள்ளது.

  18. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    செய்திகளை தொகுத்து வழங்குவது விக்னேஷ். அ.