You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை - என்ன நடந்தது?

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு அதிகாரத்துக்கு வந்த அந்நாட்டு ராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐ.நா அரிதான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் ராணுவத்தால் கடுமையாக நசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. புதுச்சேரி பாஜக தலைமையிடம் முற்றுகை

    புதுச்சேரியை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டதாக கூறி அவரது ஆதரவாளர்கள் பாஜக தலைமை அலுவலனத்தை முற்றுகையிட்டனர்.

    புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காமராஜர் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜான்குமார். இதேபோன்று அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இதனையடுத்து ஜான்குமார் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பாஜக தலைமையிடத்தை அவர் வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவலும் நிலவி வந்த காரணத்தினால் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    இதனையடுத்து நேற்று தீடீரென ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் அவருக்கு பதில் வேறு ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின. இதனிடையே ஜான்குமார் தனது மகன் ரிச்சார்ட்டுடன் பாஜக மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.

    இந்த நிலையில் ஜான்குமார் ஆதராளவளர்கள் 100க்கும் மேற்பட்டோர் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் அங்கிருந்த பெயர் பலகையைக் கிழித்தும், அலுவலக கதவை உடைக்கவும் செய்தனர். இதனையடுத்து டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் தனது ஆதரவாளர்களிடம் ஜான்குமார் பேசியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    புதுச்சேரியில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் மேலாகியும் இதுவரை அமைச்சரவை பதவியேற்கவில்லை. மேலும் கடந்த ஒரு மாத காலமாக அமைச்சரவை பங்கீட்டில் பாஜக என்.ஆர்.காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக ஒன்றாக இருக்கிறது. மேலும் கூட்டணி தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியுடன் அமர்ந்து பேசி அனைத்திற்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

    இதற்கிடையில் அமைச்சர் பதவி தொடர்பாக பாஜக கட்சிக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் கூறுகையில், "இது குறித்து தாம் ஜான்குமாரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தமக்கு எதுவும் தெரியாது என ஜான்குமார் கூறிவிட்டார். மேலும் அமைச்சர் பதவி குறித்து தலைமை முடிவெடுக்கும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என ஜான்குமாரின் ஆதரவாலர்களிடம்கூறியுள்ளார். மேலும் இது உட்கட்சி விவகாரம் என்பதால் போராட்டத்தில் யார் யார் ஈட்டுப்பட்டர்கள்என்பது குறித்து விசாரித்து அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.

  2. தெலுங்கானாவில் ஊரடங்கு முழுமையாக தளர்வு; ஜூலையில் பள்ளிகள் திறப்பு

    தெலுங்கானாவில் கொரோனா ஊரடங்கு முழுமையாக தளர்த்தலாம் என்று அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை அளித்த அறிக்கையை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    “பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கை முழுமையாக தளர்த்தும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனினும், மக்கள் அரசாங்கம் வெளியிட்ட அனைத்து கொரோனா விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனமுதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மேலும் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு மாணவர்கள் நேரில் வர, ஜூலை 1 முதல் அவற்றை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  3. கல்வியே ஆயுதம் - நடிகர் சூர்யா அறிக்கை

    "நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய "நீட் தேர்வின்" பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களும், அவர்களது குடும்பங்களும் அனுபவிக்கிற துன்பங்களை தவறாமல் அரசு நியமித்த கமிட்டிக்கு தெரிவிக்க வேண்டும்" என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது.

    அதனை தொடர்ந்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும், இருக்கிற சூழலில் தகுதியை தீர்மானிக்க ஒரு தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

  4. `இந்தியாவில் அக்டோபரில் கொரோனா மூன்றாம் அலை`

    இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் கொரோனா மூன்றாம் அலை ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்களிடம் ராயட்டர்ஸ் செய்தி முகமையால் எடுக்கப் பட்ட கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

    அடுத்த வருடம் வரை கொரோனா பெருந்தொற்று என்பது பொது சுகாதாரத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    உலக முழுவதும் உள்ள 40 சுகாதாரத் துறை நிபுணர்கள், மருத்துவகள், விஞ்ஞானிகள், வைரலாஜிஸ்ட், தொற்று நோய் நிபுணர்கள், பேராசிரியர்கள் ஆகியோரிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.

    இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 85 சதவீதம் பேர் அதாவது 24ல் 21 பேர் அடுத்த அலை அக்டோபர் வரும் என்றும், மீதி மூன்று பேர் ஆகஸ்டு மாதமே வர வாய்ப்பு உள்ளது என்றும், 12 பேர் செப்டம்பர் என்றும், மீது மூன்று பேர் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் 70 சதவீதத்துக்கும் பேர் இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாம் அலை நன்றாக கையாளப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

  5. சோசலிசம் - மம்தா பானர்ஜி திருமணத்தின் பின்னால் உள்ள சுவாரஸ்யம்

  6. இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கம்

    லங்கையின் தெஹிவளை தேசிய மிருகக் காட்சி சாலையிலுள்ள ஆண் சிங்கமொன்றுகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

    வன உயிர்பாதுகாப்புத் துறைஅமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.

    தொற்றால் பாதிக்கப்பட்டசிங்கம் கடந்த சில நாட்களாகஉடல்நலம் குன்றி காணப்பட்டதாகவும்அதனை பரிசோதித்தபோது,இருமல் மற்றும் தொண்டைவலிஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.'தோர்'என்ற பெயர் கொண்ட அந்தசிங்கம்2012ஆம் ஆண்டு தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

    கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கம் தற்போதுஉடல்நலம்தேறிவருவதாகவும்,உணவு உட்கொள்ள ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் பிபிசியிடம் கூறினார்.ஆண் சிங்கமொன்றும்,பெண் சிங்கமொன்றும் அவற்றின் குட்டிகளுமாக4சிங்கங்கள் உள்ளன என்றும்,அவற்றில் ஆண் சிங்கமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து ஆலோசனைகளைப் பெற்று,கொவிட் தொற்றுக்குள்ளான சிங்கத்துக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும்இந்தசிங்கங்களுக்குகொரோனாதொற்றுஎவ்வாறுஏற்பட்டதுஎன்பதுதொடர்பில்ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. “டோக்கியோ போட்டியில் பார்வையாளர்களை அனுமதிப்பது ஆபத்து”

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது கொரோனா தொற்று பரவல் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    மக்களின் போக்குவரத்து தொற்று பரவலை அதிகரிக்கும் அது மருத்துவ கட்டமைப்புக்கு பெரும் சுமையாக இருக்கும் என மருத்துவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜப்பானின் பிற அதிகாரிகள் உள்ளூர் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் பார்வையாளர்களை அனுமதிக்கும் முறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

  8. “மியான்மர் ராணுவத்துக்கு ஆயுதங்கள் விற்க வேண்டாம்” – ஐ.நா

    மியான்மருக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐநா தெரிவித்துள்ளது.

    மியான்மரில் பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து, ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

    ராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும் அங்கு ஆங் சாங் சூச்சி உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அமைதியான முறையில் ராணுவ ஆட்சியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு ஐநா தெரிவித்துள்ளது.

    ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐநா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 119 நாடுகள் வாக்களித்தன. பெலாரஸ் நாடு மட்டும்தான் எதிராக வாக்களித்தது.

    மியான்மருக்கு ஆயுதங்களை வழங்கும் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

  9. பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!

    தமிழகம்,இந்தியா,இலங்கைமற்றும்உலகஅளவிலானசெய்திகளைநேரலையாகஇந்தபக்கத்தில்தொகுத்திவழங்குகிறோம்.தொடர்ந்து இணைந்திருங்கள்