You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

டெல்லியில் யுஏபிஏ சட்டப்படி கைதான செயல்பாட்டாளர்கள் ஜாமீனில் விடுதலை

குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு டெல்லியில் நிரந்தர முகவரி இல்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி ரவீந்தர் பேடி, இதை ஒரு காரணமாக நீதிமன்றத்தால் கருத முடியாது என்று உத்தரவிட்டு அனைவரையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இன்றைய நேரலை நிறைவடைந்தது

    வணக்கம் நேயர்களே, இத்துடன் இன்றைய நேரலை பக்கத்தை நிறைவு செய்கிறோம். உலகம், தேசிய அளவிலான செய்திகளையும் கோணங்களையும் அறிந்து கொள்ள தொடர்ந்து பிபிசி தமிழ் இணையதளம் மற்றும் அதன் சமூக ஊடக பக்கங்களில் இணைந்திருங்கள்.

    சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

  2. மோதி - ஸ்டாலின் சந்திப்பு - நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன?

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகத் தெரிவித்திருக்கிறார். மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான எதிர்கால உறவை இந்த சந்திப்பு சுட்டிக்காட்டுகிறதா?

    தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக டெல்லி வந்திருக்கும் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை வியாழக்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

  3. டெல்லியில் கடந்த ஆண்டு யுஏபிஏ சட்டப்படி கைதான மாணவ செயல்பாட்டாளர்கள் ஜாமீனில் விடுதலை

    வடகிழக்கு டெல்லியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடையதாக டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நடாஷா நார்வால், தேவாங்கானா கலிதா, ஆசிஃப் இக்பால் தன்ஹா ஆகியோர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பான ஜாமீன் மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமையே அவர்கள் விடுவிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அவர்களை ஜாமீனில் விடுவிக்கும் நடவடிக்கையை தாமதப்படுத்த டெல்லி காவல்துறை சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு டெல்லியில் நிரந்தர முகவரி இல்லை என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி ரவீந்தர் பேடி, இதை ஒரு காரணமாக நீதிமன்றத்தால் கருத முடியாது என்று உத்தரவிட்டு அனைவரையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

    இதையடுத்து வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த தகவலை டெல்லி திஹார் சிறைத்துறை தலைமை இயக்குநர் சந்தீப் கோயல் உறுதிப்படுத்தினார்.

    குற்றம்சாட்டப்பட்ட இந்த நபர்கள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் குடியிரிமை திருத்த சட்டத்தை திரும்ப வலியுறுத்தி உள்ளூர் மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நார்வால், கலிதா ஆகியோர் பிஞ்ச்ரா தோட் இயக்கத்தின் உறுப்பினர்களாகவும் இக்பால் ஆசிஃப் ஜாமியா பல்கலைக்கழக மாணவராகவும் இருந்தார்.

  4. தமிழக முதல்வருடன் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு

    டெல்லி வந்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.

    தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டு இடதுசாரி கட்சிகளும் உள்ளதால் அதன் அடிப்படையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று இரு தலைவர்களும் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

  5. வடகொரியாவில் உணவுத்தட்டுப்பாடு: ஒப்புக்கொண்ட கிம் ஜோங் உன்

    வடகொரியாவில் உணவுத்தட்டுப்பாடு நிலவும் தகவலை முறைப்படி ஒப்புக் கொண்டிருக்கிறார் அதன் தலைவர் கிம் ஜோங் உன்.

    இது தொடர்பாக அங்கு ஆளும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே பேசிய அவர், "மக்களின் உணவுத்தேவை நிலைமை மிகவும் பதற்றமான கட்டத்தில் உள்ளது," என்று கூறினார்.

    குறிப்பாக, நாட்டின் வேளாண் துறை, கடந்த ஆண்டு ஏற்பட்ட சூறாவளிகளால் அதன் தானிய உற்பத்தி இலக்கை அடையவில்லை என்று கிம் தெரிவித்தார்.

    வடகொரியாவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர்களுக்கு விற்கப்படுவதாக வடகொரியா நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அந்நாடு தனது எல்லைகளை முழுமையாக மூடியிருக்கிறது. வடகொரியா வழக்கமாக தமது உணவு, உரம், எரிபொருள் தேவைக்கு சீனாவையே சார்ந்திருக்கும்.

    ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக எல்லை மூடப்பட்டுள்ளதால் அந்நாடு தற்போதைய உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

    இது தவிர அந்நாடு செயல்படுத்தி வந்த அணுசக்தி திட்டங்களால் சர்வதேச தடைகளையும் வடகொரியா எதிர்கொண்டு வருவது அதன் தற்போதைய சுமையை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.

  6. வந்துகொண்டிருக்கும் செய்தி, பிரதமர் நரேந்திர மோதியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    இந்திய பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துளார். டெல்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

    தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு ஸ்டாலின் மேற்கொள்ளும் முதலாவது வெளி மாநில பயணம் இதுவாகும்.

    இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களை 5.45 மணியளவில் ஸ்டாலின் சந்திக்கவிருக்கிறார்.

    டெல்லியில் இன்று இரவு தங்க திட்டமிட்டுள்ள ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார்.

  7. ட்விட்டருக்கு தடை விதிப்பது நோக்கமல்ல, விதிகளை பின்பற்றுவதே அவசியம்: ரவிசங்கர் பிரசாத்

    இந்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய சமூக ஊடக கட்டுப்பாட்டு விதிகள் விவகாரத்தில் ட்விடட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணக்கமற்ற சூழல் நிலவுகிறது.

    சமீபத்தில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சில ட்விட்டர் பயனர்கள் பதிவிட்ட சரிபார்க்கப்படாத கருத்துகள் விவகாரத்தில் அந்த நபர்கள் மற்றும் ட்விட்டர் நிறுவனம் மீது உத்தர பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    இதுதான் புதிய சமூக ஊடக விதிகள் அமலுக்கு வந்த பிறகு நாட்டிலேயே ட்விட்டர் மீது பதிவாகும் முதல் வழக்காகும். இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனத்தை மத்திய அரசு இலக்கு வைப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

    இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விதிகளை மீறி ட்விட்டர் நிறுவனம் செயல்படக்கூடாது," என்று தெரிவித்தார்.

    ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, "அத்தகைய நடவடிக்கையை அரசு ஆதரிக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.

    வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களும் எப்போதும் போல அதை செயல்படுத்தலாம். அவ்வாறு அந்த தளத்தில் பகிரப்படும் தகவல் குழு வன்முறை, கலவரம், கொலை, பெண்களை ஆபாசமாக காட்டுவது, பாலியல் ரீதியாக சிறார்களை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை பிரதிபலிப்பதாக இருந்தால், பிறகு அந்த வைரல் தகவல்கள் எங்கிருந்து ஆரம்பத்தில் பகிரப்பட்டது என்பதை அறியவே அரசு முற்படும். அது எல்லை தாண்டி இந்தியாவுக்கு வெளியே இருந்து சித்தரிக்கப்பட்டு இந்தியாவுக்குள் நுழைந்தால் இங்கிருந்து முதலில் அதை பகிர்ந்தது யார் என்பதை கண்டுபிடிக்கவே அரசு முனையும் என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

  8. இலங்கையில் முதல் முறை கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா திரிபு

    இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவக் காரணாக இருந்த டெல்டா திரிபு, இலங்கையில் முதல் முறை கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் பிரிவின் பிரதானி சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் தளத்தில் பதிவொன்றின் ஊடாக சந்திம ஜீவந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருந்தது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.

    ஆனால், அந்த வைரஸ் இலங்கை சமூகத்திற்குள் இருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இப்போது முதல் தடவையாக சமூகத்திற்குள் இந்த திரிபு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு - தெமட்டகொட பகுதியிலுள்ள ஐவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் டெல்டா திரிபு சமூகத்தில் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸை விடவும், இது 50 சதவீதம் வீரியம் கொண்டது என சந்திம ஜீவந்தர கூறியுள்ளார்.

    இலங்கையில் தற்போது செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசியின் முதல் டோசை மாத்திரம் எடுத்துக்கொண்டவர்களுக்கு, இந்த வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

  9. முகேஷ் அம்பானி பாதுகாப்பு விவகாரம்: முன்னாள் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் கைது

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இல்ல பாதுகாப்பு விவகாரத்தில் முன்னாள் என்கவுன்ட்டர் ஸ்பெலிஸ்ட் பிரதீப் சர்மாவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது.

    மும்பையில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அம்பானியின் வீடு அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த காருக்கு சொந்தக்காரரான மன்சுக் ஹிரன் மார்ச் 5ஆம் தேதி மும்பை கடல் பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த 11ஆம் தேதி சந்தோஷ் ஷேலர், ஆனந்த் ஜாதவ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வெடிமருந்துகளை காரில் நிரப்பியதில் தொடர்புடையதாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதேவேளை, காவல் அதிகாரிகளான சச்சின் வாஸே, ரியாதின் காஸி, சுனில் மானே ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. பிறகு அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். கிரிக்கெட் சூதாட்ட ஏஜென்ட் நரேஷ் கோர், முன்னாள் காவலர் விநாயக் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் காவல் அதிகாரி பிரதீப் சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை கடந்த சில நாட்களாக விசாரித்து வந்த என்ஐஏ, கடைசியாக கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் சோதனை நடத்தியது.

    இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

    மும்பை காவல்துறையில் ஆய்வாளர் அந்தஸ்தில் பணியாற்றிய பிரதீப் சர்மா, அந்த மாநில காவல்துறையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக பரவலாக அறியப்பட்டவர்.

    2008ஆம் ஆண்டில் இவர் மீது ஊழல் புகார்கள் கடுமையாக இருந்ததால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் அந்த புகார்கள் ஆதாரமற்றவை எனக்கூறி 2017இல் அவர் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

    அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் பணியில் தொடர்ந்த அவர், 2019ஆம் ஆண்டில் நடந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக காவல் பணியைத் துறந்தார்.

    அந்த தேர்தலில் அவர் போட்டியிட சிவசேனை கட்சி வாய்ப்பளித்தது. ஆனால், 43 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.

    இந்த நிலையில், அம்பானி வீடருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி மருந்து பதுக்கியிருந்தது மற்றும் அந்த காரின் உரிமையாளர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் அவரை தற்போது என்ஐஏ கைது செய்துள்ளனர்.

  10. சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டம்

    சேலம் மாவட்டம் ஒமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் கழக அமைப்பு செயலாளர் செம்மலை, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், சுந்தர்ராஜன், பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.இந்த கூட்த்தில் சசிக்கலாவை கண்டிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  11. கங்கை நதியில் தனித்து விடப்பட்ட 21 நாள் குழந்தை

    கங்கை நதியில் பெட்டியில் மிதந்து வந்த 21 நாள் குழந்தையை மீட்டதற்காக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த படகோட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    சிவப்பு நிற துண்டால் சுற்றப்பட்ட அந்த குழந்தை இந்து தெய்வங்களின் படங்கள் கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டு ஆற்றில் மிதந்து கொண்டு வந்தது.

    குழந்தையின் அழுகையை கேட்ட குல்லு சவுத்ரி என்னும் அந்த படகோட்டி பெட்டியிலிருந்த குழந்தையை மீட்டுள்ளார்.

    குழந்தை தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் காப்பகத்தில் சேர்க்கப்படும்.

    குழந்தையை பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

    குழந்தையுடன் அது பிறந்த தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட அட்டை ஒன்றும் இருந்தது. மேலும் அந்த குழந்தையின் பெயர் கங்கா என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தையை வளர்ப்பதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குழந்தையை காப்பாற்றிய படகோட்டிக்கு அரசு வீடு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

  12. பாஜகவில் இருந்து திரிணமூல் திரும்பிய முகுல் ராய்க்கு வழங்கிவந்த பாதுகாப்பு ரத்து

    பாஜகவில் இருந்து தனது தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரசுக்கு சமீபத்தில் திரும்பிவந்தவர் முகுல்ராய். பாஜகவில் இருந்தபோது அதன் தேசியத் துணைத் தலைவராக இருந்தவர். கடந்த காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

    இவர் திரிணமூல் காங்கிரசுக்கு திரும்பி வந்த சில நாள்களில் இவருக்கு வழங்கப்பட்டுவந்த மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற்றிருக்கிறது.

  13. டெல்லி வந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

    இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்கவுள்ளார்.

  14. ரோனால்டோவை தொடர்ந்து மற்றொரு வீரர்

    செய்தியாளர் சந்திப்பின்போது கோகோ கோலா பாட்டில்களை நகர்த்திவிட்டு, `தண்ணீர் குடியுங்கள்` என கூறிய கால்பந்து வீரர் கிறிஸ்டியான ரொனால்டோவின் காணொளி வைரலான ஓரிரு நாளில் மற்றொரு கால்பந்து வீரர் பால் போக்பா, ஹெய்னெகன் பீர் பாட்டிலை நகர்த்தியது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

    ஃபிரான்ஸை சேர்ந்த 28 வயது பாக்போ இஸ்லாமியர் ஆவார். செய்தியாளர் சந்திப்பில் எதுவும் பேசாமல் ஆல் கஹால் அற்ற அந்த பீர் பாட்டிலை மேசையின் கீழே எடுத்து வைத்தார்.

    யூரோ 2020-ல் க்ரூப் எஃப் பிரிவில் ஜெர்மனிக்கு எதிராக ஃபிரான்ஸ் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹெய்னகன் `ஸ்டார் ஆஃப் த மேட்ச் விருதை பெற்றார் பாக்போ.

    கோகோ கோலா மற்றும் ஹெய்னகன் பீர் ஆகிய இரண்டும் தங்களின் முக்கிய ஸ்பான்சர்கள் என்றாலும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யூனியன் வீரர்களின் செயல்களை ஒரு பிரச்னையாக கருதவில்லை.

    இருப்பினும் ரோனால்டோவின் செயலால் கோகோ கோலா தனது சந்தை மதிப்பில் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. கோகோ கோலா நிறுவனத்தின் மொத்த மதிப்பு 240பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

    “தாங்கள் என்ன குடிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உண்டு” என கோகோ கோலா இதுகுறித்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

    மேலும் ஓவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் தனிப்பட்ட “விருப்பமும் தேவைகளும்” இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

  15. விண்வெளி நிலைய பணிகளை மேற்கொள்ள வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா

    நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தை அமைக்க சீனா மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.

    நி ஹாய்ஷெங், லு பூமிங், டாங் ஹாங்போ ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் மூன்று மாதம் பூமியிலிருந்து 380கிமீட்டர் தூரத்தில் டியான்ஹே மாட்யூலில் தங்குவர்.

    சீனாவின் விண்வெளி வீரர்கள் நீண்டகாலம் விண்வெளியில் தங்கவிருப்பது ஐந்து வருடங்களில் இதுவே முதல்முறை.

    விண்வெளி தொடர்பான சீனாவின் அடுத்தடுத்த பணிகளில் மற்றொரு முயற்சிதான் இந்த வீரர்களை விண்ணுக்கு அனுப்பிய திட்டம்.

    கடந்த ஆறு மாதங்களில் நிலாவிலிருந்து பாறை மற்றும் மண்ணின் மாதிரியை பூமிக்கு கொண்டுவந்தது, செவ்வாய் கிரகத்தில் 6 சக்கர ரோபோட்டை நிறுத்தியது என கடினமான செயல்களை நிகழ்த்தி காட்டியது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

  16. நேயர்களுக்கு வணக்கம்! தமிழகம்,இந்தியா,இலங்கை மற்றும் பிற உலக செய்திகளைநேரலையாகஇந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.